திங்கள், 8 ஜூன், 2009

கூரை மீதினிலே ஒரு பூனைக் குட்டி

நான் ஒரு அவசர வேலையாக பிரதான சாலை வழியே நடந்துக் கொண்டிருந்தேன். கிழக்குத் தெருவான செட்டியார்களின் ஜாகைகள் இருக்கும் வீதி வழியாக சென்றால் தூரம் பாதியாக குறையும் என்பதால் பாதையை மாற்றினேன். மாணிக்கம் செட்டி வீட்டு வாசல் அருகே ஒரு சிறுமி அழுதுக் கொண்டிருந்தாள். 'ஏன் பாப்பா அழுகிறாய்?' என்று கேட்டேன். அது நிமிர்ந்து என் முகத்தை பார்த்து, 'ஐயோ! பூச்சாண்டி' என்று மேலும் குரலெடுத்து அழுதது. நான் என் மீசைக்கும், தலை பாகைக்கும் கிடைத்த வரவேற்பினை எண்ணி மனதிற்குள் முறுவலித்தேன். நான் சற்றே முகத்தினை சாந்தப்படுத்தி சிரித்தவாறே, 'நான் பூச்சாண்டி இல்லை பாப்பா. என் பெயர் ஷெல்லிதாசன்' என்றேன் மெல்லிய குரலில். ஆனால் அச்சிறுமிக்கு என் பெயர் தேவை இல்லை போலிருக்கிறது. ஐம்புலன்களையும் அடக்கிய ஞானியை போல் அச்சிறுமியின் பார்வையும், எண்ணமும் மேல் நோக்கியே இருந்தது. சற்று முன் என் மேலிருந்த அச்சம் நொடிகளில் மறைந்து விட்டிருந்தது. குழந்தையின் மனோலயத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

'மாமா..எனக்கு அந்த பூனை வேணும்' என என்னிடம் சிறுமி வாஞ்சையாகி விட்டாள். 'நான் தான் பூச்சாண்டி ஆச்சே! என்னிடம் ஏன் கேட்கிறாய்?' என்று மனதில் எழுந்த கேள்வியை கேட்கவில்லை. ஏனென்றால் என் சாமர்த்தியம் மழலைகளிடம் பலிக்காது என நன்றாகவே நான் அறிந்திருந்தேன். பிஞ்சு விரல்கள் காட்டிய திசைதனை தொடர்ந்தால் அது எதிர் வீட்டு கூரையின் மேல் முடிந்தது. அங்கே ஒரு பூனைக் குட்டி எங்களை முறைத்தவாறு சிலை போல் நின்றிருந்தது. சிறுமியின் மேல் நோக்கிய பார்வையின் இரகசியம் புரிந்தது.

முதல் நாள் பாரதப் போரில் பார்த்திபனுக்கு ஏற்பட்ட மன நிலையில் இருந்தேன். சென்று கொண்டிருக்கும் பணியா? இல்லை கூரை மேலிருக்கும் பூனையா? என்று இருதலை கொல்லி எறும்பு போல் முடிவு எடுக்க முடியாமல் குழம்பினேன். 'மாமா..பூனைய போய் பிடிச்சின்னு வாங்க' என்று அன்பு கட்டளை பிறந்தது. அன்று பார்த்திபனுக்கு கண்ணன் இருந்தான். எனக்கு இன்று இச்சிறுமி போலும். சுயநலம் அழிந்தது. எதன் நிமித்தமாக வீட்டை விட்டு கிளம்பினேனோ அதை முற்றிலுமாய் மறந்தேன். எனது கண்ணிற்கு என்னை முறைக்கும் பூனை மட்டுமே தெரிந்தது.

கூரை மீது ஏறி பூனையை பிடித்தால், வீட்டு உரிமையாளன் சண்டைக்கு வந்து விடுவான். பூனை தானாகவும் கீழே இறங்காது. அப்படியே இறங்கினாலும் நம் பக்கம் தான் இறங்கும் எனவும் உறுதி கூற முடியாது. பூனையிடம் தோற்று விடுவோமோ என சிறிய பயம் எட்டி பார்த்தது. குழந்தையின் நம்பிக்கையை பாழாக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை. ஏன் தரையில் நடமாடும் ஆடுகளின் மீதெல்லாம் இச்சிறுமிக்கு பிரியம் ஏர்படவில்லை?கடமையை செய் பலனை எதிர்பாராதே என சுலபமாக கண்ணன் சொல்லி விட்டார். மற்றவர்களின் உடைமைகள் மீதேறி கடமையை எப்படி செய்வது? பிரதான சாலை வழியாகவே சென்றிருக்கலாம். குறுக்கு வழி என்றும் உதவாது என்பது சரியாக தான் இருக்கிறது.

'நான் வேண்டுமானால் வரும் பொழுது புது பூனை வாங்கி வரட்டுமா?' என தோல்வியினை மறைத்து சமாதானம் பேச முயன்றேன். சாது மிரண்டால் என சொல்வார்களே, அது போல கண்களில் அக்னி கனல் வீச,'எனக்கு அது தான் வேண்டும்' என்றாள் பிடிவாதமாக. ம்ம்..திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. விசித்திரமான மனம் சென்று கொண்டிருந்த வேலையை நினைவுப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை வேறு வலியுறுத்த ஆரம்பித்தது.

'சாப்பிட வாம்மா' என வீட்டுக்குள் இருந்து குரல் வந்தவுடனே சிட்டாய் பறந்து விட்டாள் சிறுமி. ஆனால் எனக்கு அந்த குரலினை உள் வாங்கி அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு சில நொடிகள் ஆனாது. அதற்குள் அவள் வாசற்படியை கடந்து மறைந்து விட்டிருந்தாள். நீர் மேலிருக்கும் தாமரை போன்ற மனம் படைத்தவர்கள் போலும் குழந்தைகள். பூனையின் மீதே முழு கருத்து இருந்தும் அன்னையின் குரல் கேட்டதும் அனைத்தையும் உதறி விட்டு சென்று விட்டாள். அனைவரும் இப்படி இருந்து விட்டால் பிரச்சனை இராது.

'தெய்வன் மனுஷ ரூபேனாம்' என்று சொல்லுவார்கள். எனக்கு அச்சிறுமியின் தாய் குரல், அசிரீரியாகவே பட்டது. கடைசியாக பூனையை ஒருமுறை பார்த்து விட்டு, கிளம்பலாம் என எத்தனிக்கும் பொழுது சிறுமி வந்து விட்டாள். மின்னலை மிந்தி விடுவாள் போலிருக்கிறது.

'நான் சாப்பிட்டு வர்றதுக்குள்ள,பூனக் குட்டிய பிடிச்சு வையுங்க.'


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

ஞாயிறு, 7 ஜூன், 2009

சனி, 23 மே, 2009

ஊர் உலகம்

நமக்கு ரொம்ப வேண்டிய பையன், பக்கத்துல சினிமா எடுக்குறாங்கன்னு கேள்விப்பட்டு வேடிக்கை பார்க்க போயிருக்கான். பக்கத்துல நல்ல டீ கடை எங்க இருக்குன்னு அந்த சினிமாக்கார கும்பலுல யாரோ ஒருத்தவங்க நம்ம பையன்கிட்ட கேட்டிருக்காங்க. அப்படியே பொதுவா நம்ம பையன் சினிமாக்காரங்க கிட்ட பேசினத, தூரத்துல இருந்து அவங்க ஊர் ஆளு ஒருத்தரு பார்த்துட்டாரு.


"நம்ம பையன்.. இப்ப நடிகர் ஆயிட்டான். தெரியுமா?"

"எனக்கு அப்பவே தெரியும்... அவன் முகத்தில அப்படி ஒரு கலை."

"பரவாயில்ல... கொஞ்ச நாளுலயே ரெண்டு, மூனு படத்துல நடிக்க கூப்பிட்டுட்டாங்களாம்."

"ரஜினி, கமல் எல்லாம் இவனுக்கு இப்ப ப்ரென்ட்ஸ் ஆயிட்டாங்களாம்."


அவனவன் முன்னேறுவதற்கு என்னம்மோ பண்றான். நம்ம பையனோ சுலபமாக பெரிய ஆள் ஆகி விட்டேன். அதெப்படி என்று தீவிரமாக யோசித்த பொழுது தான் ஒன்று புரிந்தது. கடின உழைப்போ, திறமையோ தேவையில்லை. ஒரு காதும், ஒரு வாயும் சுத்தி இருக்கிற ஒரு நாலு பேருக்கு இருந்தா போதும். நீங்களும் நம்ம் பையன் மாதிரி பெரிய ஆளு தான்.

இப்படியெல்லாம் நம்ம பையனை உசுப்பேத்தி உச்சாணி கொம்பில் உட்கார வைத்த ஊர் உலகம்...கடைசியாக அந்த கேள்வியை அவனிடம் கேட்டு விட்டது.

"உன் படம் எப்ப ரிலீஸ் ஆகும்?"

திங்கள், 18 மே, 2009

சோழியும், குடுமியும்

"நமக்கு கிடைத்த தகவல்.. சரி தானா?"
"அது பொய்யாய் இருப்பதற்கான வாய்ப்புகள் ரொம்ப கம்மி சார்" என்றான் இளம் ராணுவ அதிகாரி மிடுக்காக.
சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, "எப்படியும் நமக்கு கண்டியில இருந்து உதவுவாங்க. கண்டிக்கு போன் பண்ணு" என்றார் தொய்வான குரலில்.

.............

மயான அமைதியுடன் இருக்கும் அந்த கிராமத்தில் முதல் குண்டினை வீசினர். எப்பொழுதும் போல் கிராம மக்கள் அலறி அடித்து ஓடி வரவில்லை. இரண்டு, மூன்று குண்டுகளுக்கு பிறகும் எந்த விதமான சப்தமோ, எதிர்ப்போ இல்லை. மூத்த தலைவர்கள் சிலர் ஒன்று கூடி, ஒற்றர் படையினை வேவு பார்க்க அனுப்பினர். பதுங்கி பதுங்கி சென்ற ஒற்றர் படை வீரர்கள் விழி பிதுங்கியவாறே வந்தனர்.
"யாருமே உயிரோட இல்ல சார்?"
"எல்லாம் தூங்குற மாதிரி தான் சார் படுத்து இருக்காங்க. ஆனா உயிர் இல்ல."

.............

"அவருகிட்ட பேசனும்னா.. கண்டிக்கு நேர்ல போனா தான் முடியும்னு சொல்லிட்டாங்க சார்."
"நாம எங்கிருந்து பேசுறோம்னு தெரிஞ்சுமா, அப்படி சொன்னாங்க."
"தெரிஞ்சதால தான் சார்..சொன்னாங்க" என்றான் இளம் அதிகாரி அழுத்தம் திருத்தமாக.
இளம் அதிகாரியை முறைப்பது போல் பார்த்து விட்டு, "கண்டிக்கு போக ஏற்பாடு பண்ணு" என்றார் ஜன்னலை பார்த்தவாறே.
............ .

"இது ஒரு வகையான ஸ்லோ பாய்சன். எல்லா உறுப்புகளையும் நிதானமா செயலிழக்க வச்சு, கடைசியில உயிர் போயிடும் சார்" என்றார் மருத்துவர்
பிரேத பரிசோதனை அறிக்கையை கையில் வைத்தவாறு.
"இது கொலையா இல்ல தற்கொலையா?"
"தெரியல. ஆனா இந்த மாதிரி ஸ்லோ பாய்சன் இங்க கிடைக்கறதில்லை. வெளியில இருந்து தான் வந்திருக்கனும்" என்று கிளம்பியவர், "இன்னொரு விஷயம்..சாகுறப்ப யாருக்கும் வலி எதுவும் தெரிஞ்சிருக்காது."

.............

அவர் பிரக்ஞையுடன் அமர்ந்திருக்காரா இல்லையா என்பதே சந்தேகமாக இருந்தது. சிரிப்பது போன்ற உதடுகள், போதையில் இருப்பது போன்ற கண்கள், விழுந்து விடுவது போல் நடுங்கும் தேகம். இவரிடம் என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டே, "உங்களுக்கு விஷயம் தெரியும் என்று நினைக்கிறேன்" என்று மூத்த அதிகாரி ஆரம்பித்தார்.
"தெரியாது" என்றார் ஒற்றை வார்த்தையில் உறுதியாக.
"ஒரு கிராமமே மர்மமான முறையில் இறந்திருக்காங்க. அதுல உங்க ஆளு ஒருத்தர் சம்பந்தப்பட்டிருக்கார். அவர நாங்க கூடிய சீக்கிரம் பிடிச்சிடுவோம். ஆயுதம் கடத்த முயன்றார் என்று அவர நாங்க ராணுவ முறைப்படி..." என்று நிறுத்தி, "அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு" என்று மூத்த ராணுவ அதிகாரி முடித்தார்.
"கொல்லாமையை போதிக்க வேண்டிய எங்கிட்டயே.. கொல பண்ணப் போறேன்னு சொல்லிட்டு செய்றீங்க" என்று வருத்தத்தோடு புன்னகைத்தார்.


.............

"சார்.. நேத்து நம்ம செக் போஸ்ட் தாண்டி ஒருத்தர் தான் போயிருக்கார்."
"அவர் பெயரு.. மஹிந்தா இந்திரசாரா."
"அனுராதாபுரம் புத்த மடத்துல இருந்து வர்றதா சொன்னார் சார்."
"அவர் ஒரே ஒரு துணி மூட்டை தான் வச்சிருந்திருக்கார். அதுல சில மூலிகைங்க இருந்திருக்கு."
"அனுராதபுரம் மடத்துல விசாரிச்சிங்கீளா?" என்றார் மூத்த அதிகாரி கோபமாக.
"அவர் அந்த மடத்த சேர்ந்தவர் தானாம். ஆனா அவர பத்தி வேறு எதுவும் சொல்ல மறுத்துட்டாங்க."

.............

"இது ரொம்ப சீரியசான இஷ்யூ. உலக நாடுகள் எல்லாம் நம்மல உன்னிப்பா பார்த்துக்கிட்டிருக்காங்க. நீங்க மஹிந்தா இந்திரசாராவ பிடிக்க உதவுனீங்கன்னா, எந்த மடத்து பெயரும் வராம நாங்க மறைச்சிடுறோம். உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது."
"உண்மைய ஏன் மறைக்கனும்? தானாக பழுத்து விழ வேண்டிய சருகுகளை, இலையாய் துளிர ஆரம்பிக்கும் பொழுதே அதை சிவப்பாக்கி கீழே விழ வைக்க பார்த்தீங்க. ஆனா இப்ப அந்த இலைகளை சேதாரமில்லாமல் இந்திரசாரா பறிச்சுட்டார். இதுல மறைப்பதற்கு ஒன்னுமில்லை. அதற்கான அவசியமுமில்லை" என்று புத்தர் சிலையை கம்பீரமாக பார்த்தார்.
"அடுத்த தடவையும் நீங்களே தலைமை குருவா வருவதற்கு அரசு உதவி செய்யும்" என்றார் அதிகாரியும் புத்தர் சிலையைப் பார்த்து.
"புத்தம்..சரணம்..கச்சாமி" என்றார் புத்தர் மீதிருந்த பார்வையை எடுத்தவாறே.

செவ்வாய், 24 மார்ச், 2009

சாஃப்ட்வேர் இஞ்சினீயரும், அண்ணா யூனிவர்சிட்டி ப்ரொஃபசரும்

"நாளைக்கு எனக்கு.. கவுன்சிலிங் சார்."
"எனக்கும் தான்" என்றார் வருத்தமாக.
"என்ன சார்.. என்னம்மோ மாதிரி பேசுறீங்க?" என்று கேள்விக்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.
"க்யூ பெருசா இருக்கு.. ரொம்ப நேரம் நிக்கனுமேனே யோசிக்கிறீங்கலா? அது ஏதோ சின்ன டெக்னிக்கல் ப்ராப்ளம் தானாம் சார். இன்னும் கொஞ்ச நேரத்துல சரி பண்ணிடுவாங்க."
அவர் மீண்டும் அமைதியாக இருந்தார். முகத்தில் சிறு எரிச்சல் தோன்றி மறைந்தது.

"எங்க..எங்க.. இடம் காலியா இருக்குன்னு பார்த்துட்டேன் சார். முடிஞ்சா இரண்டு பேரும் ஒரே இடத்துக்கு அப்ளை பண்ணலாம். ஆனா என்ன, இடம் ரிஜிஸ்டர் ஆகி கன்ஃபார்ம் ஆனவுடன், நமக்கு பழசெல்லாம் மறந்துடும்."
"அப்படியா?" என்றார் திகைத்தவறாக.
"என்ன சார் அப்படியான்னு கேக்குறீங்க! அப்படி தான ப்ரோகிராம் எழுதி இருக்காங்க."
"உனக்கு ப்ரோகிராம் எழத சொல்லி கொடுத்தவனே நான் தான். ம்ம்... சரி விடு. ஆனா உண்மையிலேயே எனக்கு இந்த ப்ரோகிராம் புரியவே இல்ல. உனக்கு மூனு மாசம் முன்னாடி இங்க வந்தவன் நான். ரொம்பா நாளா பென்ச்சுல உட்கார்ந்துக்கிட்டிருக்கேன். ஆனா ரெண்டே வாரத்துல உனக்கு கவுன்சிலிங் டேட் வந்துடிச்சு!!"
"நீங்க சீனியாரிட்டி படி எல்லாம் நடக்கனும்னு எதிர் பார்க்குறீங்க. ஆன இங்க வரவங்களா டெஸ்ட் பண்ணி, க்வாலிட்டி ரேட்டிங் போட்டு தனி டேட்டா பேஸ் மெயின்டெயின் பண்ணுது. ப்ளஸ் பக்ஸ் கால்குலேஷன் அது, இதுனு ஏதோ ஃபார்முலா யூஸ் பண்ணி கவுன்சிலிங் டேட்டும், ப்ளேசும் அசைன் ஆகுது."

"என்ன ரெண்டு பேரும் இங்க நின்னு பேசிக்கிட்டிருக்கீங்க. நாளைக்கு பூமியில பொறக்கிறவங்களுக்கு, நாளன்னைக்கு பொறக்க போற நீங்க தான முன்ன நின்னு ஃபேர்வெல் தரனும்."

வியாழன், 18 டிசம்பர், 2008

அவன்

இராஜ வீதிக்காரர்கள் உண்மையிலேயே அப்படியொரு முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைத்து பார்க்கவே அவனால் முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அவனுக்கு இரத்தம் கொதித்தது. வேறேதாவது காரணத்திற்காக இம்முடிவு எடுக்கப் பெற்றிருந்தால், அவனே முன்னின்று தலையைக் கொடுத்தாவது செய்து முடித்திருப்பான்.

"ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பதினொன்னு" என்று கண்களை மூடியவாறே எண்ணிக் கொண்டிருந்தான். தூக்கம் வருவதாக இல்லை. 'பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கீழ் வகுப்புப் பெண்ணை அவர்கள் வீதி வழியாக அழைத்து சென்றதற்காக கலெக்டர் ஆஷ் துரையை கொல்லப் போகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்லி தடுக்கலாம், ஆனால் கலெக்டர் கொல்லப் பட வேண்டியவன். இன்னும் பதினேழு நாட்கள் மீதம் உள்ளது' என்று யோசித்தவாறே சிறிது கண்ணயர்ந்தான்.

வாஞ்சிநாதனை எதிர்ப்பார்த்து அவன் முன்னதாகவே மணியாச்சி இரயில் நிலையத்திற்கு சென்று விட்டான். இரயில் வந்து நின்ற சில நொடிகளில் எங்கிருந்தோ தோன்றி, வாஞ்சிநாதன் புயலென இரயிலில் ஏறினான். துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தைத் தொடர்ந்து அங்கே நிலவிய ஆழ்ந்த நிசப்தத்தை திருமதி ஆஷின் அழுகை சத்தம் கலைத்தது. முகமுடியுடன் துரிதமாக வாஞ்சிநாதன் தப்பி ஓடுவதில் குறியாக இருந்தான். முடிந்தவரை தன்னை யாரென வெளிக் காட்டாமல் தப்பிப்பது இல்லையேல் சரணடைவது என்ற முடிவோடு தான் வாஞ்சிநாதன் இருந்தான். அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு, அவனிருக்கும் திசை நோக்கி ஒடினான் வாஞ்சிநாதன். மீண்டுமொரு துப்பாக்கி சத்தம். இனிமேல் நன்றாக தூக்கம் வருமென்ற திருப்தியுடன் அவன் அவ்விடத்தை விட்டு அனைவரும் வரும் முன் ஒடினான்.

*******************************

பாரதி புதையல்

வியாழன், 27 நவம்பர், 2008

அடையாளங்கள்

'ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!'
'எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.'
'மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.'

இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி தருவது. கைகளில் கிழிந்த சாக்குடன், சுருள் சுருளாக அழுக்கு தலை முடியோடு, தனியாக பேசியவாறு செல்வோரை எல்லாம் அணுகி இல்லாத பணிவினை வரவழைத்துக் கொண்டு பவ்யமாக அழைப்பேன். அவர்கள் அனைவரும் என்னை பேயை பார்ப்பது போல் பார்த்து விட்டு, மிக்க யோசனைக்கு பிறகு என்னுடன் அருகிலிருக்கும் உணவகத்திற்கு வருவார்கள். பொதுவாக யாரும் எளிதில் பேசி விட மாட்டார்கள். அரை வயிறு நிறைந்தவுடன் தானாக பேச ஆரம்பிப்பார்கள். விடை பெறும் போது வயிறார வாழ்த்துவார்கள். எனக்கு புண்ணியம் வந்து சேருகிறதோ இல்லையோ ஆனால் மனதில் ஒரு சிறு திருப்தி நிலவும்.

எனது இந்த பொழுதுப்போக்கு நன்றாக சென்றுக் கொன்டிருந்தது. அவனை காணும் வரை அல்லது அவர் என்னை குழப்பும் வரை. மிக நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் தூய்மையாக இருந்தார். ஆனால் அவரது ஆடை குறைப்பு கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விட்டது. முக்கால் வயிறு நிரம்பியும் அவர் வாயே திறக்கவில்லை. சரி நானே பேசி விடலாம் என்று எனது முதல் கேள்வியைக் கேட்டேன்.

"உங்கள பத்தி தெரிஞ்சுக்கலாமா?" என்றேன் மரியாதையாக. யாராக இருந்தால் என்ன, மரியாதை அவசியமாகிறதே! ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லை. இன்னும் என்னென்ன கேள்விகளோ கேட்டேன். ஆனால் அவர் அசரவில்லை.
முழுவதுமாக உண்டு விட்டு, "நானும் ரொம்ப வருஷமா அத தான் தேடிக்கிட்டிருக்கேன்" என்றார். உண்மைகளை மழுப்பும் இத்தகைய பதில்களை கேட்டால் நான் எரிச்சலாயிடுவேன்.
"வாழ்க்கைய தொலைச்சவங்க சொல்ற சமாதானம் இது" என்றேன் கோபமாக.
"அப்ப உனக்கு நீ யாருன்னு தெரியுமா?" என்றார் ஆச்சரியமாக.
"நல்லாவே தெரியும்.. கெளதம்" என்றேன் கிண்டலாக.
"அது உன் பெயர். யார் நீ?"
கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தவனாக, "ஈ.பி. யில ஜெ.இ.யா வேல செய்றேன்" என்றேன்.
"அது நீ செய்ற வேல?"
எடுபடாது என்று தெரிந்தும் தயங்கியவாறே, "எனக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்கு" என்றேன்.
"அது உனக்கிருக்கும் உறவுகள்?"
இப்பொழுது நான் அமைதியானேன்.
"யார் நீ என்று கேட்டால் வெறும் அடையாளங்களாகவே சொல்றியே!" என்று எழுந்து சென்று விட்டார்.

நான் யார் என்று கண்டுப்பிடிக்க என்னால் முடிகிறதோ இல்லையோ ஆனால் வேறு ஏதாவது பொழுதுப்போக்கினை கண்டுப்பிடிக்கும் சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறது.