புதன், 1 அக்டோபர், 2008

மனிதர்கள்

'சுசிய பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? கடைசியா பொங்கலப்ப பார்த்தது. இந்த மாதிரி நல்லது, கெட்டதுல தான் எப்பவாவது பார்க்கிறேன். அதுவும் பெரியவங்களுக்கு மத்தியில அவங்க வாய்க்கு காது கொடுத்துட்டு, ச்சே..திரும்பவே மாட்டேங்கிற. அப்படி என்ன புதுசா சொல்லிடப் போறாங்க? மணிமாறன் தாத்தாவும் அவர் தங்கச்சி பவானி பாட்டியும், எப்படி எல்லா கஷ்டத்திலும் ஒத்துமையா வாழ்ந்தாங்கன்னு நான் பொறந்ததிலிருந்து கேக்கிறேன். ம்ம்..மணிமாறன் தாத்தா அந்த காலத்துல பொண்ணுங்க மத்தியில ரொம்ப பிரபலம்னு எங்கப்பாக்கிட்ட அவங்கப்பா சொல்லி இருக்காரு. அவருக்கு இப்ப நூறு வயசுன்னு சொல்றாங்க. ஆனா பார்க்கிறதுக்கு அப்படி தெரியலயே!' என்று நினைத்த சிவராமன் சுசியை விட்டுட்டு மணிமாறனைத் தேடினான்.

'கொஞ்சம் நஞ்சம் வயசா ஆகுது? இந்த புரட்டாசி வந்த தொன்னூறு பூர்த்தி! அஞ்சு வருஷமா வெளில வராம இருந்தேன். பவானி கூட பிறந்த தோஷத்துக்காக வர வேண்டியாத போச்சு. இந்த மாதிரி கும்பல பார்த்தாலே இப்பெல்லாம் உள்ளுக்குள்ள ஒரு பயம். இதுல வேற என்ன பார்க்கிறவனெல்லாம் நான் எப்ப சாவுவன்னு கணக்கு பண்றதிலேயே குறியா இருக்காங்க. இதெல்லாம் பொறுத்துன்னு இங்க வந்தன்னா, அதுக்கு விசேஷமான ஒரு காரணம் இருக்கு. அது பவானி வீட்டு வைபவத்துக்கு வர்ற மடப்பள்ளி இராமையாப் பிள்ளை தான். அவன் கைப் பக்குவம் இனி ஒருத்தனுக்கு வராது. வயசு ஏற ஏற எல்லா பற்றும் போனாலும், நாக்குல ஒட்டிட்ட இந்த சுவை மட்டும் போக மாட்டேங்குது. அவன தனியா பார்க்க முடிஞ்சா, முந்திரி பருப்ப தூளாக்கி போட்டு ஜவ்வரிசி பாயாசம் கேட்கனும். இல்லன்னா..என் பல்லுக்கு உதவாது" என்று நினைத்தவாறு சுற்றும் முற்றும் இராமையாப் பிள்ளைக்காக நோட்டமிட்டார் மணிமாறன்.

'இன்னைக்கு முக்கியமான இரண்டு பெரிய இடத்துல வர சொல்லியிருந்தாங்க. அதெல்லாம் விட்டுட்டு, பழகின தோஷத்துக்கு இந்த சின்ன அடுப்படியில மாட்டிகிட்டு அவதிப்படுறேன். இங்க வந்ததும் ஒரு வகையில் நல்லதா போச்சு. சாம்பமூர்த்தி சார நேர்ல பார்த்து பையன் வேலை விஷயமா பேசனும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன். எப்படியும் அவர பார்த்து பேசிடனும்' என்று எண்ணிக் கொண்டே கிண்டிக் கொண்டிருந்தார் இராமையாப் பிள்ளை.

'இந்தியாவுல மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் பணத்தையும், நேரத்தையும் அநாவசியமா விரயம் பண்ணுவாங்க. ஒருத்தன் நிலைமையை அவன் இடத்துல இருந்து பார்க்க மாட்டாங்க. வீண் ஜம்பத்துக்காக இவங்க பண்ற செலவ, செலவு செஞ்சுக்கிட்டு வந்து மத்தவங்க பார்க்கனும். அப்படி தப்பி தவறி வர முடியலன்னா, பார்த்த இடத்துல எல்லாம் கேள்வி கேட்டே உயிர எடுக்க வேண்டியது இல்லன்னா முகத்த திருப்பிக்கிட்டு வர்றவங்க போறவங்ககிட்ட இதப் பத்தி நம்ம முன்னாடி நியாயம் கேட்க வேண்டியது. குழந்தைங்க வேற இவங்கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தை படுறாங்க. அவங்க படிப்பு கெடுது. சந்திராவுக்கு நிச்சயதார்த்தம் என்று காவ்யாவை கூட்டிட்டு போய், இன்ஃபெக்ஷன் வந்து ரொம்ப படுத்திட்டா. இந்த தடவ என்னத்த இழுத்துட்டு வரப் போறாளோ!" என்று விளையாடிக் கொண்டிருந்த காவ்யாவைத் தேடினார் சாம்பமூர்த்தி.

"எனக்கு மொத்தம் எத்தனை டேஸ் லீவ் தெரியுமா? மொத்தம் ஃபைவ் டேஸ். நவின் பாட்டி செத்தப்ப அவன் ஃபைவ் டேஸ் தான் லீவ் போட்டான்.