புதன், 1 அக்டோபர், 2008

மனிதர்கள்

'சுசிய பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? கடைசியா பொங்கலப்ப பார்த்தது. இந்த மாதிரி நல்லது, கெட்டதுல தான் எப்பவாவது பார்க்கிறேன். அதுவும் பெரியவங்களுக்கு மத்தியில அவங்க வாய்க்கு காது கொடுத்துட்டு, ச்சே..திரும்பவே மாட்டேங்கிற. அப்படி என்ன புதுசா சொல்லிடப் போறாங்க? மணிமாறன் தாத்தாவும் அவர் தங்கச்சி பவானி பாட்டியும், எப்படி எல்லா கஷ்டத்திலும் ஒத்துமையா வாழ்ந்தாங்கன்னு நான் பொறந்ததிலிருந்து கேக்கிறேன். ம்ம்..மணிமாறன் தாத்தா அந்த காலத்துல பொண்ணுங்க மத்தியில ரொம்ப பிரபலம்னு எங்கப்பாக்கிட்ட அவங்கப்பா சொல்லி இருக்காரு. அவருக்கு இப்ப நூறு வயசுன்னு சொல்றாங்க. ஆனா பார்க்கிறதுக்கு அப்படி தெரியலயே!' என்று நினைத்த சிவராமன் சுசியை விட்டுட்டு மணிமாறனைத் தேடினான்.

'கொஞ்சம் நஞ்சம் வயசா ஆகுது? இந்த புரட்டாசி வந்த தொன்னூறு பூர்த்தி! அஞ்சு வருஷமா வெளில வராம இருந்தேன். பவானி கூட பிறந்த தோஷத்துக்காக வர வேண்டியாத போச்சு. இந்த மாதிரி கும்பல பார்த்தாலே இப்பெல்லாம் உள்ளுக்குள்ள ஒரு பயம். இதுல வேற என்ன பார்க்கிறவனெல்லாம் நான் எப்ப சாவுவன்னு கணக்கு பண்றதிலேயே குறியா இருக்காங்க. இதெல்லாம் பொறுத்துன்னு இங்க வந்தன்னா, அதுக்கு விசேஷமான ஒரு காரணம் இருக்கு. அது பவானி வீட்டு வைபவத்துக்கு வர்ற மடப்பள்ளி இராமையாப் பிள்ளை தான். அவன் கைப் பக்குவம் இனி ஒருத்தனுக்கு வராது. வயசு ஏற ஏற எல்லா பற்றும் போனாலும், நாக்குல ஒட்டிட்ட இந்த சுவை மட்டும் போக மாட்டேங்குது. அவன தனியா பார்க்க முடிஞ்சா, முந்திரி பருப்ப தூளாக்கி போட்டு ஜவ்வரிசி பாயாசம் கேட்கனும். இல்லன்னா..என் பல்லுக்கு உதவாது" என்று நினைத்தவாறு சுற்றும் முற்றும் இராமையாப் பிள்ளைக்காக நோட்டமிட்டார் மணிமாறன்.

'இன்னைக்கு முக்கியமான இரண்டு பெரிய இடத்துல வர சொல்லியிருந்தாங்க. அதெல்லாம் விட்டுட்டு, பழகின தோஷத்துக்கு இந்த சின்ன அடுப்படியில மாட்டிகிட்டு அவதிப்படுறேன். இங்க வந்ததும் ஒரு வகையில் நல்லதா போச்சு. சாம்பமூர்த்தி சார நேர்ல பார்த்து பையன் வேலை விஷயமா பேசனும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன். எப்படியும் அவர பார்த்து பேசிடனும்' என்று எண்ணிக் கொண்டே கிண்டிக் கொண்டிருந்தார் இராமையாப் பிள்ளை.

'இந்தியாவுல மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் பணத்தையும், நேரத்தையும் அநாவசியமா விரயம் பண்ணுவாங்க. ஒருத்தன் நிலைமையை அவன் இடத்துல இருந்து பார்க்க மாட்டாங்க. வீண் ஜம்பத்துக்காக இவங்க பண்ற செலவ, செலவு செஞ்சுக்கிட்டு வந்து மத்தவங்க பார்க்கனும். அப்படி தப்பி தவறி வர முடியலன்னா, பார்த்த இடத்துல எல்லாம் கேள்வி கேட்டே உயிர எடுக்க வேண்டியது இல்லன்னா முகத்த திருப்பிக்கிட்டு வர்றவங்க போறவங்ககிட்ட இதப் பத்தி நம்ம முன்னாடி நியாயம் கேட்க வேண்டியது. குழந்தைங்க வேற இவங்கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தை படுறாங்க. அவங்க படிப்பு கெடுது. சந்திராவுக்கு நிச்சயதார்த்தம் என்று காவ்யாவை கூட்டிட்டு போய், இன்ஃபெக்ஷன் வந்து ரொம்ப படுத்திட்டா. இந்த தடவ என்னத்த இழுத்துட்டு வரப் போறாளோ!" என்று விளையாடிக் கொண்டிருந்த காவ்யாவைத் தேடினார் சாம்பமூர்த்தி.

"எனக்கு மொத்தம் எத்தனை டேஸ் லீவ் தெரியுமா? மொத்தம் ஃபைவ் டேஸ். நவின் பாட்டி செத்தப்ப அவன் ஃபைவ் டேஸ் தான் லீவ் போட்டான்.

வியாழன், 25 செப்டம்பர், 2008

இன்றைய தினத்தில்

"அப்புறம்...எப்படி இருக்க? காலேஜ் படிக்கறப்ப பார்த்தது! ஆளே ரொம்ப மாறிட்டே"
தவிர்க்க முடியாத இந்த சம்பிரதாய வைபவங்களே அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. நான்கைந்து வருடங்களுக்கு பிறகு பார்த்ததால் உண்டான மகிழ்ச்சி இருவர் முகத்திலும் தெரிந்தது. அப்பொழுது நரேனின் செல்பேசி ஒலித்தது.
"ஒரு நிமிஷம்டா...வீட்டிலிருந்து அம்மா பண்றாங்க.வீட்டுக்கு போய் ரெண்டு மாசத்துக்கு மேலாகுது" என்று சிரித்துவிட்டு, மொத்தமாக 'முப்பத்தேழு' ஒரு நிமிடங்கள் பேசினான்.
நேரமின்மை காரணமாக மீதமிருந்த சம்பிரதாயங்களை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு ஒரு கைக் குலுக்கலுடன் விடைப் பெற்றனர்.

"எழுந்திருப்பா..சாப்பிட வேணாமா? மணி பதினொன்னு ஆகப் போகுது பாரு!"
இரவு பன்னிரெண்டு முப்பதுக்கு மேல் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் நரேன். வேலைக்கு சென்ற பிறகு நரேனுக்கு தூங்குவதற்கே நேரம் கிடைப்பதில்லை. அப்படியே நேரம் கிடைத்து தூங்கினாலும், தூங்கிய திருப்தி எழும் பொழுது இருப்பதில்லை.
"அப்பாவும், நீங்களும் சாப்பிட்டாச்சா?" என்று நரேன் சாப்பிட அமரும் பொழுது கடிகாரத்தின் சின்ன முள்ளும், பெரிய முள்ளும் ஒன்றாய் மேல் நோக்கி பார்த்தது.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, நரேனின் செல்பேசி ஒலித்தது.
"ஹலோ..சொல்லுடா. நல்லா இருக்கேன். நீ?"
......
"இல்ல..இப்ப தான் எழுந்துரிச்சி சாப்பிட உட்காருறேன்."
......
"பரவாயில்ல்..சொல்லு. பண்ணாதவன் பண்ணி இருக்க!"
......
"அடப்போடா...நாலு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன்."

செவ்வாய், 24 ஜூன், 2008

கெளரி வீட்டு பஞ்சாங்கம்

"எங்க வச்சேள்?"
சோமு ஐயர் தன் வீட்டில் உள்ளவர்களிடம் ஆயிரம் தடவைக்கு மேல் இந்த கேள்வியை கேட்டு விட்டார். ஆனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் ஊர் தலைவர் முருகேச முதலியாரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தார் ஐயர். இரண்டு நாட்களாக முருகேச முதலியார் ஐயர் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்.
"நம்பிக்கிட்ட புதுசு வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன். புதன்கிழமை வந்துடும்" என்றார் ஐயர்.
"ஆனா.. பெளர்ணமி செவ்வாய்கிழமை தானே!"

சில நாட்களுக்கு முன் நடந்த கோயில் திருவிழாவின் போது, "பாப்பானுக்கு புரோகிதமும், செட்டிக்கு வணிகமும் சொல்லி கொடுக்காமலே வந்துடும் அந்த மாதிரி...." என்று ஏதோ மேற்கோள் காட்டி பேசினார் ஆறுமுக கவுண்டர். அங்கிருந்த முருகேச முதலியார், கவுண்டரின் மேற்கோளை மறுத்தார். அதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாத முடிவில், கடை ஒன்று வைத்து தன்னாலும் வணிகம் செய்ய முடியும் என்று நிருபிப்பதாக சொல்லி விட்டு வந்து விட்டார் முருகேச முதலியார். சொன்னதோடு நில்லாமல் அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக தொடங்கினார். அவரது ஜாதகப் படி வரும் வளர்பிறைக்குள் கடை வைத்தால் முன்னேறுவார் என்றும், அதன் பிறகு இரண்டு வருடங்கள் தொழில் யோகம் இல்லை என்றிருந்தது.

"ஏன்டா கணேசா..முதலியாரு செலவு இல்லாம புரோகிதம் படிச்சிருக்கலாம். இன்னும் நாள் மட்டும் தான் குறிக்கல போலிருக்கு. முப்பது குடும்பம் இருக்கிர ஊர்ல அவர் வேற தொழில் ஆரம்பிச்சா நீ என்னடா பண்ணுவா!"
"நீங்க எதுவும் இத பத்தி எல்லாம் வெளியில பேசாதீங்கம்மா..! நடக்கிறது நடக்கட்டும். பார்த்துக்கலாம்...விசாலம் மதிய உணவை பையனிடம் கொடுத்து அனுப்பிச்சுடு" என்று கணேச செட்டியார் சொல்லி விட்டு கிளம்பி விட்டார். செட்டியார் கிளம்பியவுடன் கையில் சில வெல்ல கட்டிகளுடன் விசாலாட்சி தோட்டத்திற்கு சென்றாள்.

ஐயரின் மூன்று வயது மகள் கெளரியிடம், "எப்ப வெல்லம் வேணும்னாலும் எங்கிட்ட கேளு" என்றாள்.

திங்கள், 25 பிப்ரவரி, 2008

தனிமை

ஊரே பூங்குழலி வீட்டில் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது. ஆனால் சத்யசீலன் மட்டும் தனியாய் விளக்கும் ஏற்ற மறந்து இருளில் அமர்ந்து இருந்தான். ஏமாற்றமும் அதனால் ஏற்பட்ட எரிச்சலும் சத்யசீலனை பாடாய்படுத்தியது. தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்படி கலைவது என்று புரியாமல் தவித்தான்.

கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பியது போல, சத்யசீலன் பூங்குழலிக்கு செய்த நல்லதை அவள் கெட்டதாக மாற்றி விட்டிருந்தாள். கெட்டதில் போய் முடிந்தது. பூங்குழலியை உயிருடன் கொளுத்த விரும்பிய சதிகார கூட்டத்திடம் இருந்து, தனி ஒருவனாக போராடி அவளை மீட்டான். ஆனால் பூங்குழலியோ நன்றி மறந்து, தனது முகத்தில் கரி பூசி விட்டதாக புலம்பிக் கொண்டிருந்தான் சத்யசீலன்.

திடீரென்று தன் பின்னால் யாரோ நிற்பது போல் சத்யசீலனிற்கு தோன்றியது. திரும்பி பார்த்த சத்யசீலனிற்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. குழந்தை முகம் மாறாத பதிமூன்று வயது பூங்குழலி, மன்னிப்புக் கோறும் பாவனையில் சங்கடத்துடன் சத்யசீலனை பார்த்தாள்.

"ஏன் இங்க வந்த? இங்கிருந்து போ..உன்ன பார்க்கவே பிடிக்கல.." என்று கத்தி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.

பூங்குழலி சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, "அண்ணா.." என்றாள்.

"இன்னும் போகலையா நீ?"

"அண்ணா...என்னை மன்னிச்சுடுங்க. காலையில நீங்க வந்துட்டு போன பிறகு என்னை ஒரு பாழடைஞ்ச அறையில தள்ளி பூட்டிட்டாங்க. அங்க வெளிச்சமே இல்ல. என் கால் மேல எல்லாம் எலி ஏறி ஓடுச்சு. என்னுடைய துணி எல்லாம் போட்டு கொளுத்திட்டாங்க. புருஷன் போனா எல்லாம் போயிடும்னு பாட்டி கூட ஒரு தடவ சொல்லியிருக்காங்க. ரெண்டே ரெண்டு வெள்ளை புடவை மட்டும் கொடுத்து..இவ்வளவு தான்னு சொல்லிட்டாங்க. நெருப்புன்னா எனக்கு பயம். அதிலிருந்து நீங்க காப்பாத்திட்டீங்க. இருட்டுன்னாலும் பயம். அதுவும் தனியா எப்பவும் அந்த இருட்டு அறையில இருக்கனும்னு நினைக்கவே ரொம்ப பயமா இருந்துச்சு. அதனால தான் உத்திரத்தில் புடவையை சுற்றி உயிரை விட்டு விட்டேன்."

திங்கள், 14 ஜனவரி, 2008

கி.பி. -1

<கிறிஸ்து பிறந்த 1940 வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணப்பிள்ளை பிறந்தார். நண்பர்களால் செல்லமாக கி.பி. என்றழைக்கப்பட்டார். சாதாரண குடும்பத்தில் பிறந்து சர்க்கார் உத்தியோகத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டார். அவரது தற்போதைய நிலை குறித்து எவருக்கும் அக்கறை இல்லை எனினும், அக்கறையோடு சேகரித்ததில் கிடைத்த சுவையான தகவல்களின் தோகுப்பு.>

இவ்வுலகிலேயே மிகவும் கடினமான செயல் எதுவென்று கேட்டால், அவரவர்களது வயதிற்கேற்ப தனது அனுபவத்தை சொல்வார்கள். உதாரணத்திற்கு பள்ளி பருவத்தில் பள்ளிக்குப் போவது, கல்லூரி பருவத்தில் அழகிய பெண்கள் பாராமுகமாக இருப்பது, இளைஞர் பருவத்தில் வேலைக் கிடைக்காமல் இருப்பது, கல்யாணமானவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருப்பது, முதுமையில் ஒதுக்கப் படுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் கிருஷ்ணப்பிள்ளைக்கு குழந்தைத்தனமான செயல்களாக தோன்றின. அவரை பொறுத்தவரை இப்பிரஞ்சத்திலியே கடினமான செயல் அழுகின்ற குழந்தையை சமாளிப்பது தான். அழுகின்ற குழந்தையை தேற்றி சமாதானப்படுத்துவது என்றால் அந்த குழந்தையும், நம்மையும் படைத்த பிரம்மாவிற்கே கைக் கூடாத காரியம். அப்படியிருக்கும் பொழுது, சாமான்ய மனிதர்களான நாம் எம்மாத்திரம் என்பதே கிருஷ்ணப்பிள்ளையின் ஆணித்தரமான வாதம். சேவலின் கூவலைக் கூட காதில் வாங்காமல் தூக்கத்தைத் தொடரலாம். ஆனால் இரவில் குழந்தை வீறிட்டு அழும் இன்னிசை அபாய ஒலி மனிதனை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பிவிட்டு விடுகிறது. முதுமையில் தூக்கம் வருவதே அரிது, அப்படியும் தன்னை மீறி கண்ணிழுக்கும் பொழுது குழந்தை கெடுத்து விடுகிறது. ஒன்றிரண்டு நாட்கள் தான் என்றால் கிருஷ்ணப்பிள்ளை பொறுத்திருப்பார். ஆனால் தொடர் ரோதனையாக அல்லவா உள்ளது. ஓய்வு கிடைத்த பிறகும் நிம்மதியாக தூங்க முடியவில்லையே என்று உள்ளுக்குள் மிகவும் சங்கடப்பட்டார். பேத்தி தான் என்றாலும் தனது சுதந்திரத்தில் தலையிடுவதாக கிருஷ்ணப்பிள்ளைக்கு பட்டது. மிகவும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவராய், முதியோர் இல்லத்திற்கு செல்லப் போவதாக தனது மகனிடம் தெரிவித்தார். ஏன் ஏனென்று இரவு பகலாக மாற்றி மாற்றி கேள்விக் கனைகளால் கிருஷ்ணப்பிள்ளையை அவரது குடும்பத்தினர் துளைத்தெடுத்து விட்டனர். சரி போகட்டும் என்று வீட்டிலேயே இருக்க சம்மதித்தால், மகள் அவரது மகனுடன் ஒரு வாரம் தங்குவதாக வந்து சேர்ந்தாள். பாஞ்சஜன்யம் என்ற கிருஷ்ணனின் சங்கை விட பலம்பொருந்திய தொண்டையை பெற்றிருந்தான் கிருஷ்ணப்பிள்ளையின் பேரன். ஒன்றிற்கு ரெண்டா என்ற திகிலுடன் தான் படுத்தார். ஆனால் அன்றைய இரவு அவர் நினைத்தது போல் மோசமில்லை. ஒரு மாபெரும் உண்மையை கண்டுபிடிக்க உதவிய அற்புத இரவாகவே அமைந்தது. ஒற்றுமைக்கு பெயர் போனவர்கள் காக்கைகள் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் என்று தான் அது நாள் வரை கிருஷ்ணப்பிள்ளை நினைத்திருந்தார். ஆனால் இரவில் ஒரு குழந்தை அழ ஆரம்பித்தவுடன், இன்னொன்றும் சேர்ந்துக் கொள்கிறது. தனது பேரனிடமும், பேத்தியிடமும் காணப்பட்ட தெய்வீக ஒற்றுமையை எண்ணி மெய் சிலிர்த்தார் கிருஷ்ணப்பிள்ளை. கடல், கடல் அலைகள், திமிங்கலம் ஏன் இந்த பிரபஞ்சத்தை விடவும் தனது பொறுமை தான் பெரிது என்ற பெருமை மட்டுமே கிருஷ்ணப்பிள்ளைக்கு மிஞ்சியது.

கி.பி. -2

எவ்வளவு முயன்றாலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு நாட்கள் திருப்திக்கரமாக நகர்வதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை எனினும், புத்தகம் உற்ற துணை என்று கேள்விப்பட்டிருக்கார். எப்படிப்பட்ட புத்தங்களை படிக்கலாம் என்று கிருஷ்ணப்பிள்ளை ஆழ்ந்து யோசித்து, தனது வயதிற்கு ஆன்மீக புத்தகம் தான் சரி என்று முடிவு செய்தார். வீட்டு பரணையிலிருந்து அவர் தந்தை உபயோகித்திருந்த 'அத்வைதம்' என்னும் புத்தகத்தை தூசி தட்டி எடுத்தார். அனைவரும் கடவுள் என்ற அத்வைத கொள்கை கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த கொள்கையின்படி எல்லாம் கடவுளாக தோன்ற வேண்டும், ஆனால் கிருஷ்ணப்பிள்ளைக்கு தான் மட்டுமே கடவுளென தோன்றியது. கண்ணாடி முன் நின்று கொண்டு தலையை சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தோன்றுகிறதா என்று அடிக்கடி சோதித்து பார்த்தார். தான் கடவுளாகி விட்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென ஆவல் கிருஷ்ணப்பிள்ளையை வாட்டி எடுத்தது. தனது அலுவலக நண்பர் ஒருவரிடம் தனது மாற்றத்தை சொல்லி விட வேண்டுமென கிளம்பினார். அவரது நண்பர் எது சொன்னாலும் அது சரியாக தானிருக்கும் என கிருஷ்ணப்பிள்ளை எப்பொழுதும் நம்பினார். வழியில் நடுத்தர வயதுடைய ஒருத்தர் தனது பணம் திருடுப் போனதை குறித்து வருத்ததோடு புலம்பினார். அவர் புலம்பும் பொழுது, "கடவுளுக்கு கண்ணும் இல்ல...ஒரு மண்ணும் இல்ல. கடவுள்னு ஒருத்தவன் இருந்திருந்தா எனக்கு இப்படி நடந்திருக்குமா? என்னை கஷ்டப்படுத்தி வேடிக்கை பாக்கிறதுக்கு ஒரு கடவுளா? அதெல்லாம் வெறும் கல்" என்றெல்லாம் கோபத்தில் மண்ணை வாரி இறைத்து திட்டிக் கொண்டிருந்தான். அவன் தன்னை தான் திட்டுவதாக ஆத்திரப்பட்டார் கிருஷ்ணப்பிள்ளை. 'பணத்த பத்திரமா வச்சுக்க துப்பில்லாம என்னை திட்ட வந்துட்டான். கலி காலம். நம்பிக்கை இல்லாம போச்சு' என்று முனறிக் கொண்டே கடந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்காக அவரது நண்பர் பூங்காவில் காத்திருந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு தற்பெருமை பிடிக்காது. அதனால் சிறிது நேரம் பொதுவாக பேசி விட்டு, கடவுளை பற்றிய பேச்சை தொடங்கினார். அவரது நண்பர், "கடவுளும், குழந்தையும் ஒன்னு. ரெண்டு பேருக்கும் தான் மனசுல ஒன்னுமே இருக்காது. இந்த சாமியாருங்க, நான் தான் கடவுளுன்னு சொல்றவங்க எல்லாம் தன்னையும் ஏமாத்திக்கிட்டு மத்தவங்களையும் ஏமாத்திக்கிட்டு திரிறாங்க" என்று தெளிவாக கிருஷ்ணப்பிள்ளையின் ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவரது நண்பர் சொல்றது உண்மையாக தான் இருக்கும் என சமாதானப்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை இருக்கும் பொழுது ஏன் அனைவரும் கோவிலுக்கு செல்கின்றனர் எனப் பெரிய சந்தேகம் கிருஷ்ணப்பிள்ளைக்கு எழுந்தது. 'தினமும் ராத்திரியில எல்லார் தூக்கத்தையும் கெடுக்கும் என் பேத்தி அப்ப கடவுளா! மத்தவங்கள கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கிறது தான் கடவுளுக்கும், குழந்தைக்கும் வேலை போலிருக்கு. அப்ப ரெண்டு பேரும் சொன்னதும் உண்ம தான். அப்ப நான் கடவுள் இல்லை. ஏன்னா...நான் யாரையும் கஷ்டப்படுத்துல' என தனது நண்பன் சொன்னதில் இருக்கும் உண்மையை ஊகித்தார் கிருஷ்ணப்பிள்ளை.

கி.பி. -3

மதர் தெரசாவின் சேவையை பாராட்டி செய்தி தாளில் ஒரு நினைவு கட்டுரை வெளிவந்திருந்தது. கிருஷ்ணப்பிள்ளை தமது வாழ்க்கையை அந்த புண்ணிய ஆத்மாவோடு ஒப்பிட்டு பார்த்தார். இதுவரை சமூகத்திற்கென ஒரு நல்லது கூட செய்ததில்லை என்ற உண்மை, பெரும் குற்ற உணர்ச்சியாக மாறி கிருஷ்ணப்பிள்ளையை போட்டு வாட்டியது. இனிமேல் தினமும் நாட்டிற்கோ, சமூகத்திற்கோ ஒரு நல்லதாவது செய்து விட வேண்டுமென சபதம் மேற்கொண்டார். அன்று மாலை காலார நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, சாலையோர மரத்தடியில் நோய்வாய்ப்பட்ட நொண்டி நாய் ஒன்று ஈனஸ்வரத்தில் முனகி கொண்டிருந்தது. நாயின் மீது கிருஷ்ணப்பிள்ளைக்கு பரிதாபம் பொங்கியது. அந்நாயினுடைய ஒருவேளை பசியையாவது போக்கி விட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், பக்கத்து கடையிலிருந்து ரொட்டித் துண்டுகள் வாங்கி நாயிற்கு போட்டார். நாய் சாப்பிடும் அழகினை பார்க்க, ஆயிரம் கண்கள் வேண்டுமென நினைத்துக் கொண்டார். கிருஷ்ணப்பிள்ளை தலை கால் புரியாத மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார். தனது மனிதாபிமான செய்கையை சாலையில் யாராவது கவனித்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் பார்க்காதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நாய் மட்டும் நன்றியோடு வாலாட்டியது. மனநிறைவோடு வீட்டை நோக்கி நடந்தார் கிருஷ்ணப்பிள்ளை. அவரை அந்த நாய் பின் தொடர்ந்தது. நாயும் பின் தொடர்வதை பார்த்து, 'சூ..' என்று விரட்டினார். கல் எடுத்து அடித்தும் பார்த்தார். நாய் எதற்கும் மசியாமல் வீடு வரை வந்து விட்டது. 'இந்த சனியன எங்க பிடிச்சிட்டு வந்தீங்க?' என்று சகதர்மணியிடம் சக்கையாக வாங்கி கட்டிக் கொண்டார். 'சொறி பிடிச்ச நாயால குழந்தைக்கு இன்ஃபெக்'ஷன் கின்ஃபெக்'ஷன் வந்துடப் போகுது. ஏதாவது பண்ணி அத முதல்ல துரத்தி விடுங்க' என்று கிருஷ்ணப்பிள்ளைக்கு அவரது மனைவி கட்டளையிட்டாள். ஏதேதோ செய்துப் பார்த்து நாயிடம் தோற்றார் கிருஷ்ணப்பிள்ளை. பிறகு, ஏதோ யோசனை வந்தவராக கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணினார். அவர்கள் வந்து நாயை கதற கதற வேனில் அடைத்து அழைத்து சென்றார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள், 'அந்த நாயை எப்படியும் கொன்னுடுவாங்க. பாவம்..அது சாகறதுக்கு நீங்க காரணம் ஆயிட்டீங்களே மாமா!' என்று வருத்தப்பட்டாள். கிருஷ்ணப்பிள்ளைக்கு தூக்கி வாரி போட்டது. சேவை புரிந்து புண்ணியம் தேட போய் பாவத்தில் வந்து முடிந்து விட்டதே என்று குழம்பினார். ஏணி வைத்தாலும் மதர் தெரசா அளவுக்கு உயர முடியாது என்று கிருஷ்ணப்பிள்ளைக்கு புரிந்தது.