வியாழன், 18 டிசம்பர், 2008

அவன்

இராஜ வீதிக்காரர்கள் உண்மையிலேயே அப்படியொரு முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைத்து பார்க்கவே அவனால் முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அவனுக்கு இரத்தம் கொதித்தது. வேறேதாவது காரணத்திற்காக இம்முடிவு எடுக்கப் பெற்றிருந்தால், அவனே முன்னின்று தலையைக் கொடுத்தாவது செய்து முடித்திருப்பான்.

"ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பதினொன்னு" என்று கண்களை மூடியவாறே எண்ணிக் கொண்டிருந்தான். தூக்கம் வருவதாக இல்லை. 'பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கீழ் வகுப்புப் பெண்ணை அவர்கள் வீதி வழியாக அழைத்து சென்றதற்காக கலெக்டர் ஆஷ் துரையை கொல்லப் போகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்லி தடுக்கலாம், ஆனால் கலெக்டர் கொல்லப் பட வேண்டியவன். இன்னும் பதினேழு நாட்கள் மீதம் உள்ளது' என்று யோசித்தவாறே சிறிது கண்ணயர்ந்தான்.

வாஞ்சிநாதனை எதிர்ப்பார்த்து அவன் முன்னதாகவே மணியாச்சி இரயில் நிலையத்திற்கு சென்று விட்டான். இரயில் வந்து நின்ற சில நொடிகளில் எங்கிருந்தோ தோன்றி, வாஞ்சிநாதன் புயலென இரயிலில் ஏறினான். துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தைத் தொடர்ந்து அங்கே நிலவிய ஆழ்ந்த நிசப்தத்தை திருமதி ஆஷின் அழுகை சத்தம் கலைத்தது. முகமுடியுடன் துரிதமாக வாஞ்சிநாதன் தப்பி ஓடுவதில் குறியாக இருந்தான். முடிந்தவரை தன்னை யாரென வெளிக் காட்டாமல் தப்பிப்பது இல்லையேல் சரணடைவது என்ற முடிவோடு தான் வாஞ்சிநாதன் இருந்தான். அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு, அவனிருக்கும் திசை நோக்கி ஒடினான் வாஞ்சிநாதன். மீண்டுமொரு துப்பாக்கி சத்தம். இனிமேல் நன்றாக தூக்கம் வருமென்ற திருப்தியுடன் அவன் அவ்விடத்தை விட்டு அனைவரும் வரும் முன் ஒடினான்.

*******************************

பாரதி புதையல்

2 கருத்துகள்:

தினேஷ் ராம் சொன்னது…

"ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். (இதை எதிர்பாரத விபத்து என்று நான் சொல்லட்டுமா? ஏனென்றால், இந்த மாதிரியான மற்றொரு சம்பவம் நமது ராஜதானியில் நடந்ததேயில்லை.)

கொலையுண்ட மனிதர் தமது மனைவியுடன் இருந்திருக்கிறார். அவர்கள் யுவர்கள்; தெரிந்தவரையில் ஒருவரையொருவர் பரஸ்பரம் காதலிக்கும் தம்பதிகள். ஜோடிகள் இருக்கும் குதூகலத்துடன் உல்லாச யாத்திரை போகிறார்கள்.

இது போன்றதொரு நிலைமை, பக்தி சிரத்தையுள்ள எந்த இந்துவின் உள்ளத்திலும் புனிதமான எண்ணங்களையே தூண்டிவிடும்.

தன்னைக் கைது செய்ய வந்தவர்களையெல்லாம் வெற்றிகரமாகப் பயமுறுத்திவிட்டு, கலெக்டரைக் கொன்று சில நிமிடங்களில் வாஞ்சி அய்யர் தம்மைத் தாமே சுட்டு மாய்த்துக்கொண்டார். இதற்குப் பிறகு இந்த மாதிரி சம்பவம் நடைபெறவில்லை என்ற விஷயம் சென்னை ராஜதானிக்குப் பெருமையளிக்கிறது." -பாரதியார்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

அருமையாகப் பதிவு செய்து உள்ளீர்கள்.
ஆனால், வாஞ்சிநாதன், சுதந்திர தாகத்தால், ஆஷ் துரை இந்திய மக்களைத் துன்புறுத்துகிறார் என்பதற்காக கொலை செய்தார் என்று வரலாற்றுப் புத்தகங்கள் தெரிவிக்கின்றன.

அஆனல் சாதிய வெறியில் கொலை செய்தார் என்றும் சிலர் கூறுகின்றனர், எது உண்மை