வியாழன், 18 டிசம்பர், 2008

அவன்

இராஜ வீதிக்காரர்கள் உண்மையிலேயே அப்படியொரு முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைத்து பார்க்கவே அவனால் முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அவனுக்கு இரத்தம் கொதித்தது. வேறேதாவது காரணத்திற்காக இம்முடிவு எடுக்கப் பெற்றிருந்தால், அவனே முன்னின்று தலையைக் கொடுத்தாவது செய்து முடித்திருப்பான்.

"ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பதினொன்னு" என்று கண்களை மூடியவாறே எண்ணிக் கொண்டிருந்தான். தூக்கம் வருவதாக இல்லை. 'பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கீழ் வகுப்புப் பெண்ணை அவர்கள் வீதி வழியாக அழைத்து சென்றதற்காக கலெக்டர் ஆஷ் துரையை கொல்லப் போகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்லி தடுக்கலாம், ஆனால் கலெக்டர் கொல்லப் பட வேண்டியவன். இன்னும் பதினேழு நாட்கள் மீதம் உள்ளது' என்று யோசித்தவாறே சிறிது கண்ணயர்ந்தான்.

வாஞ்சிநாதனை எதிர்ப்பார்த்து அவன் முன்னதாகவே மணியாச்சி இரயில் நிலையத்திற்கு சென்று விட்டான். இரயில் வந்து நின்ற சில நொடிகளில் எங்கிருந்தோ தோன்றி, வாஞ்சிநாதன் புயலென இரயிலில் ஏறினான். துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தைத் தொடர்ந்து அங்கே நிலவிய ஆழ்ந்த நிசப்தத்தை திருமதி ஆஷின் அழுகை சத்தம் கலைத்தது. முகமுடியுடன் துரிதமாக வாஞ்சிநாதன் தப்பி ஓடுவதில் குறியாக இருந்தான். முடிந்தவரை தன்னை யாரென வெளிக் காட்டாமல் தப்பிப்பது இல்லையேல் சரணடைவது என்ற முடிவோடு தான் வாஞ்சிநாதன் இருந்தான். அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு, அவனிருக்கும் திசை நோக்கி ஒடினான் வாஞ்சிநாதன். மீண்டுமொரு துப்பாக்கி சத்தம். இனிமேல் நன்றாக தூக்கம் வருமென்ற திருப்தியுடன் அவன் அவ்விடத்தை விட்டு அனைவரும் வரும் முன் ஒடினான்.

*******************************

பாரதி புதையல்

வியாழன், 27 நவம்பர், 2008

அடையாளங்கள்

'ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!'
'எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.'
'மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.'

இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி தருவது. கைகளில் கிழிந்த சாக்குடன், சுருள் சுருளாக அழுக்கு தலை முடியோடு, தனியாக பேசியவாறு செல்வோரை எல்லாம் அணுகி இல்லாத பணிவினை வரவழைத்துக் கொண்டு பவ்யமாக அழைப்பேன். அவர்கள் அனைவரும் என்னை பேயை பார்ப்பது போல் பார்த்து விட்டு, மிக்க யோசனைக்கு பிறகு என்னுடன் அருகிலிருக்கும் உணவகத்திற்கு வருவார்கள். பொதுவாக யாரும் எளிதில் பேசி விட மாட்டார்கள். அரை வயிறு நிறைந்தவுடன் தானாக பேச ஆரம்பிப்பார்கள். விடை பெறும் போது வயிறார வாழ்த்துவார்கள். எனக்கு புண்ணியம் வந்து சேருகிறதோ இல்லையோ ஆனால் மனதில் ஒரு சிறு திருப்தி நிலவும்.

எனது இந்த பொழுதுப்போக்கு நன்றாக சென்றுக் கொன்டிருந்தது. அவனை காணும் வரை அல்லது அவர் என்னை குழப்பும் வரை. மிக நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் தூய்மையாக இருந்தார். ஆனால் அவரது ஆடை குறைப்பு கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விட்டது. முக்கால் வயிறு நிரம்பியும் அவர் வாயே திறக்கவில்லை. சரி நானே பேசி விடலாம் என்று எனது முதல் கேள்வியைக் கேட்டேன்.

"உங்கள பத்தி தெரிஞ்சுக்கலாமா?" என்றேன் மரியாதையாக. யாராக இருந்தால் என்ன, மரியாதை அவசியமாகிறதே! ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லை. இன்னும் என்னென்ன கேள்விகளோ கேட்டேன். ஆனால் அவர் அசரவில்லை.
முழுவதுமாக உண்டு விட்டு, "நானும் ரொம்ப வருஷமா அத தான் தேடிக்கிட்டிருக்கேன்" என்றார். உண்மைகளை மழுப்பும் இத்தகைய பதில்களை கேட்டால் நான் எரிச்சலாயிடுவேன்.
"வாழ்க்கைய தொலைச்சவங்க சொல்ற சமாதானம் இது" என்றேன் கோபமாக.
"அப்ப உனக்கு நீ யாருன்னு தெரியுமா?" என்றார் ஆச்சரியமாக.
"நல்லாவே தெரியும்.. கெளதம்" என்றேன் கிண்டலாக.
"அது உன் பெயர். யார் நீ?"
கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தவனாக, "ஈ.பி. யில ஜெ.இ.யா வேல செய்றேன்" என்றேன்.
"அது நீ செய்ற வேல?"
எடுபடாது என்று தெரிந்தும் தயங்கியவாறே, "எனக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்கு" என்றேன்.
"அது உனக்கிருக்கும் உறவுகள்?"
இப்பொழுது நான் அமைதியானேன்.
"யார் நீ என்று கேட்டால் வெறும் அடையாளங்களாகவே சொல்றியே!" என்று எழுந்து சென்று விட்டார்.

நான் யார் என்று கண்டுப்பிடிக்க என்னால் முடிகிறதோ இல்லையோ ஆனால் வேறு ஏதாவது பொழுதுப்போக்கினை கண்டுப்பிடிக்கும் சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறது.

வெள்ளி, 14 நவம்பர், 2008

கடைசி வீரன்

"வெற்றி!!!"
...........

வியாழன், 6 நவம்பர், 2008

ரெண்டு மணி நேரம் தான்

"ஏன்டா பக்கத்து தெருவுல தான் நான் இருக்கேன். எங்கள வந்து பார்க்கக் கூடாதா?"
"டைமே இல்ல மாமா."
"துரை..கலெக்டருக்கு படிக்கிறீங்களோ?"
"காலையில ஆறு மணிக்கு டியூஷன் போறேன். ஏழரை மணிக்கு வந்து அவசர அவசரமா கிளம்பி எட்டே காலுக்கு பஸ்ச பிடிக்கனும். திரும்பி நாலு மணிக்கு வீட்டுக்கு வந்து நாலரை மணி சயின்ஸ் டியூஷனுக்கு போயிட்டு அப்புறம் ஹிந்தி கிளாஸ் எல்லாம் முடிச்சுட்டு எட்டு மணிக்கு தான் திரும்பி வீட்டுக்கு வர்றேன். அப்புறம் ஹோம் ஒர்க் எழுதிட்டு, சாப்ட்டு தூங்கிடுவேன்."
"அது சரி..கலெக்டர் விட நீ பிசி தான். சரி சண்டேல வரலாம் தான?"
"அன்னிக்கு ஃபுல்லா கிரிக்கெட் பிராக்டீஸ் இருக்கு. காலை பதினொரு மணிக்கு போனா சாயந்திரம் ஆறு மணிக்கு தான் வருவேன்."
"இந்த காலத்து பசங்கெல்லாம் ரொம்ப பாவம்டா. சரி..சரி..போய் படி."
ஏதோ யோசித்தவராய் தன் தங்கையை அழைத்து, "ஏம்மா..இப்படியே படி படின்னு சொன்னா என்னம்மா ஆவறது. கொஞ்சம் ப்ரீயா விடுறதில்லையா? பாவம் பையன். என் ப்ரென்ட் ஒருத்தவன் 'யோகா' க்ளாஸ் நடத்தறான். ஞாயித்துக் கிழமை மட்டும் தான். நானே சொல்லி விடுறேன். பையன அனுப்பி வையுங்க. மைன்டுக்கு ரொம்ப நல்லது. படிக்கறதெல்லாம் அப்படியே ஞாபகமிருக்கும். உடம்புக்கும் நல்லது. என்ன..சரியா!" என்றார்.

அர்த்தமுள்ள பொய்கள்

"முதல் உலகப் போரோட நூறாவது நாளுக்கும், இரண்டாவது உலகப் போரோட நூறாவது நாளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?"
'தெரியாது' என்று தலையை ஆட்டி விட்டு, "என்ன அது?" என்று கேட்டான்.
"அந்த இரண்டு நாளுலயும் ஜெர்மனியோட கை ஓங்கி இருந்தது."
"ம்" என்று தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
"ஆனா அந்த இரண்டு நாளோட கடைசியிலயும் ஜெர்மன் தளபதி ஒருத்தர நம்ம ஆளுங்க கொன்னுட்டாங்க."
"ஆமா..எப்பவும் நாஜி ஜெயிக்கிற மாதிரி தான் ஆரம்பத்தில இருக்கும். ஆனா இறுதி வெற்றி எப்பவும் நமக்கு தான்" என்று முக மலர்ச்சியோடு ஜேசனின் கைகளை பற்றியவாறே தூங்கி விட்டான்...நிரந்தரமாக.

எப்பொழுது தான் இரண்டாம் உலகப் போர் முடியுமோ என்றிருந்தது. ஒரு உயிர் பிரிவதை அருகிலிருந்து பார்ப்பது மிக கொடுமையானது. அதற்குள், "ஜேசன்..பக்கத்து அறையில நாலாவது பெட்ல இருக்கிறவன் தன் கடைசி நிமிடத்தில் இருக்கிறான். அவனுக்கு ஷேக்ஸ்பியரும், ப்ரெஞ்ச் வொயினும் பிடிக்குமாம்."

"ஷேக்ஸ்பியரோட நாடகத்தை எல்லாம் படிச்ச ரசிகையான ஒரு செல்வந்தர் வீட்டு பொண்ணு அவருக்கு ஒரு பாட்டில் ப்ரெஞ்ச் வொயின் அனுப்பி தன் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டா. நினைச்சாலே எனக்கு சிரிப்பு வருது. அத பத்தி கேள்விப்பட்டிருக்கியா?"

தூர அதிர்ஷ்டம்

வானத்தை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன். நாளைக்கு அவனது அண்ணன் மகன் ராமுவிற்கு பிறந்த நாள். கணேசனுக்கு ராமு என்றால் ரொம்ப பிடிக்கும். அவனுடைய பிறந்த நாளுக்கு சின்ன பரிசு வாங்கி கொடுக்க கூட காசில்லையே என்று நினைத்து கொன்டிருந்தான் கணேசன்.
"இந்தா கணேசா...நாளைக்கு காலையில ஆறு மணிக்கெல்லாம் தயாரா இரு. வேல ஒன்னு வந்திருக்கு" என்றார் முனியன்.
'என்ன வேல...திடீரென்னு!' என்பது போல் நம்பிக்கையின்றி முனியனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் கணேசன்.
"மேக்கப்பட்டிக்கு மினிஸ்டர் வர இருந்தாரில்ல..அது ரத்தாகி இப்ப நம்ம ஊர்ல நடக்கப் போகுது. ஏதோ பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக நம்ம ஊர்ல மேடை அமைக்க போறாங்களாம். எப்படியோ...நமக்கு நாள பொழுது ஓடினா சரி தான்" என்றார் ஒரு வறட்டு திருப்தியுடன்.

காலை ஒன்பது மணிக்கெல்லாம் மேடை தயாராகி விட்டது. பத்து மணி வண்டியில் ஏறினால், கணேசன் இரண்டு மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கலாம். கூலி தருபவரிடம் சென்ற பொழுது, "நைட்டு பந்தல பிரிக்கிற வரைக்கும் இருந்தா, ரெண்டு வேள சாப்பிடு இன்னுமொரு நூறு ரூபா கிடைக்குமில்ல!?" என்ற படியே கணேசனுக்கு நூற்றைம்பது ரூபாய் தந்து, இரு நூற்றைம்பது ரூபாய் தந்ததாக கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

இரண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு சென்று ராமுவை பார்த்து விட்டு, மூன்றரை மணி பேருந்தில் ஏறி மீண்டும் பந்தல் பிரிக்கவும் வந்து கூலி வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவோடு பேருந்தில் ஏறினான்.

பேருந்தில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்தில், கணேசன் தூக்கத்தின் வாயிலாக கனவு உலகத்திற்கு சென்று விட்டான். சுமார் மூன்று மணி நேர உறக்கத்திற்கு பிறகு விழித்த பொழுது, பேருந்து போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டது தெரிந்தது. அமைச்சர் வந்து செல்லும் வரை இந்த சங்கடங்களும் தொடரும்.

ஒருவழியாக நான்கு மணி நேரத்தில் பத்து கி.மீ. தொலைவினை பேருந்து கடந்திருந்தது. இனிமேல் ஊருக்கு சென்று வந்தால் ஒருவேளை கூலி பறிப் போகுமென்று எண்ணி பேருந்திலிருந்து இறங்கி விட்டான். அருகிலிருந்த கடையில் தேநீர் அருந்தும் பொழுது, "நடக்க வேண்டிய சமயத்துல ஒண்ணு நடக்கலன்னா, அதுக்கப்பறம் அது நடக்காமலே இருக்கலாம்" என்றொரு பெரியவர் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.

மீண்டும் ஏதோ தோன்றியவனாக கணேசன் ஊர்ந்துக் கொண்டிருந்த பேருந்தில் நிதானமாக சென்று ஏறிக் கொண்டான். கணேசன் வீடு போய் சேர இரவு எட்டு மணி ஆகி விட்டது. ஆனால் ராமுவும் அவனது அப்பாவும் கணேசனைக் காண சென்றிருந்தனர்.

புதன், 1 அக்டோபர், 2008

மனிதர்கள்

'சுசிய பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? கடைசியா பொங்கலப்ப பார்த்தது. இந்த மாதிரி நல்லது, கெட்டதுல தான் எப்பவாவது பார்க்கிறேன். அதுவும் பெரியவங்களுக்கு மத்தியில அவங்க வாய்க்கு காது கொடுத்துட்டு, ச்சே..திரும்பவே மாட்டேங்கிற. அப்படி என்ன புதுசா சொல்லிடப் போறாங்க? மணிமாறன் தாத்தாவும் அவர் தங்கச்சி பவானி பாட்டியும், எப்படி எல்லா கஷ்டத்திலும் ஒத்துமையா வாழ்ந்தாங்கன்னு நான் பொறந்ததிலிருந்து கேக்கிறேன். ம்ம்..மணிமாறன் தாத்தா அந்த காலத்துல பொண்ணுங்க மத்தியில ரொம்ப பிரபலம்னு எங்கப்பாக்கிட்ட அவங்கப்பா சொல்லி இருக்காரு. அவருக்கு இப்ப நூறு வயசுன்னு சொல்றாங்க. ஆனா பார்க்கிறதுக்கு அப்படி தெரியலயே!' என்று நினைத்த சிவராமன் சுசியை விட்டுட்டு மணிமாறனைத் தேடினான்.

'கொஞ்சம் நஞ்சம் வயசா ஆகுது? இந்த புரட்டாசி வந்த தொன்னூறு பூர்த்தி! அஞ்சு வருஷமா வெளில வராம இருந்தேன். பவானி கூட பிறந்த தோஷத்துக்காக வர வேண்டியாத போச்சு. இந்த மாதிரி கும்பல பார்த்தாலே இப்பெல்லாம் உள்ளுக்குள்ள ஒரு பயம். இதுல வேற என்ன பார்க்கிறவனெல்லாம் நான் எப்ப சாவுவன்னு கணக்கு பண்றதிலேயே குறியா இருக்காங்க. இதெல்லாம் பொறுத்துன்னு இங்க வந்தன்னா, அதுக்கு விசேஷமான ஒரு காரணம் இருக்கு. அது பவானி வீட்டு வைபவத்துக்கு வர்ற மடப்பள்ளி இராமையாப் பிள்ளை தான். அவன் கைப் பக்குவம் இனி ஒருத்தனுக்கு வராது. வயசு ஏற ஏற எல்லா பற்றும் போனாலும், நாக்குல ஒட்டிட்ட இந்த சுவை மட்டும் போக மாட்டேங்குது. அவன தனியா பார்க்க முடிஞ்சா, முந்திரி பருப்ப தூளாக்கி போட்டு ஜவ்வரிசி பாயாசம் கேட்கனும். இல்லன்னா..என் பல்லுக்கு உதவாது" என்று நினைத்தவாறு சுற்றும் முற்றும் இராமையாப் பிள்ளைக்காக நோட்டமிட்டார் மணிமாறன்.

'இன்னைக்கு முக்கியமான இரண்டு பெரிய இடத்துல வர சொல்லியிருந்தாங்க. அதெல்லாம் விட்டுட்டு, பழகின தோஷத்துக்கு இந்த சின்ன அடுப்படியில மாட்டிகிட்டு அவதிப்படுறேன். இங்க வந்ததும் ஒரு வகையில் நல்லதா போச்சு. சாம்பமூர்த்தி சார நேர்ல பார்த்து பையன் வேலை விஷயமா பேசனும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன். எப்படியும் அவர பார்த்து பேசிடனும்' என்று எண்ணிக் கொண்டே கிண்டிக் கொண்டிருந்தார் இராமையாப் பிள்ளை.

'இந்தியாவுல மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் பணத்தையும், நேரத்தையும் அநாவசியமா விரயம் பண்ணுவாங்க. ஒருத்தன் நிலைமையை அவன் இடத்துல இருந்து பார்க்க மாட்டாங்க. வீண் ஜம்பத்துக்காக இவங்க பண்ற செலவ, செலவு செஞ்சுக்கிட்டு வந்து மத்தவங்க பார்க்கனும். அப்படி தப்பி தவறி வர முடியலன்னா, பார்த்த இடத்துல எல்லாம் கேள்வி கேட்டே உயிர எடுக்க வேண்டியது இல்லன்னா முகத்த திருப்பிக்கிட்டு வர்றவங்க போறவங்ககிட்ட இதப் பத்தி நம்ம முன்னாடி நியாயம் கேட்க வேண்டியது. குழந்தைங்க வேற இவங்கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தை படுறாங்க. அவங்க படிப்பு கெடுது. சந்திராவுக்கு நிச்சயதார்த்தம் என்று காவ்யாவை கூட்டிட்டு போய், இன்ஃபெக்ஷன் வந்து ரொம்ப படுத்திட்டா. இந்த தடவ என்னத்த இழுத்துட்டு வரப் போறாளோ!" என்று விளையாடிக் கொண்டிருந்த காவ்யாவைத் தேடினார் சாம்பமூர்த்தி.

"எனக்கு மொத்தம் எத்தனை டேஸ் லீவ் தெரியுமா? மொத்தம் ஃபைவ் டேஸ். நவின் பாட்டி செத்தப்ப அவன் ஃபைவ் டேஸ் தான் லீவ் போட்டான்.

வியாழன், 25 செப்டம்பர், 2008

இன்றைய தினத்தில்

"அப்புறம்...எப்படி இருக்க? காலேஜ் படிக்கறப்ப பார்த்தது! ஆளே ரொம்ப மாறிட்டே"
தவிர்க்க முடியாத இந்த சம்பிரதாய வைபவங்களே அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. நான்கைந்து வருடங்களுக்கு பிறகு பார்த்ததால் உண்டான மகிழ்ச்சி இருவர் முகத்திலும் தெரிந்தது. அப்பொழுது நரேனின் செல்பேசி ஒலித்தது.
"ஒரு நிமிஷம்டா...வீட்டிலிருந்து அம்மா பண்றாங்க.வீட்டுக்கு போய் ரெண்டு மாசத்துக்கு மேலாகுது" என்று சிரித்துவிட்டு, மொத்தமாக 'முப்பத்தேழு' ஒரு நிமிடங்கள் பேசினான்.
நேரமின்மை காரணமாக மீதமிருந்த சம்பிரதாயங்களை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு ஒரு கைக் குலுக்கலுடன் விடைப் பெற்றனர்.

"எழுந்திருப்பா..சாப்பிட வேணாமா? மணி பதினொன்னு ஆகப் போகுது பாரு!"
இரவு பன்னிரெண்டு முப்பதுக்கு மேல் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் நரேன். வேலைக்கு சென்ற பிறகு நரேனுக்கு தூங்குவதற்கே நேரம் கிடைப்பதில்லை. அப்படியே நேரம் கிடைத்து தூங்கினாலும், தூங்கிய திருப்தி எழும் பொழுது இருப்பதில்லை.
"அப்பாவும், நீங்களும் சாப்பிட்டாச்சா?" என்று நரேன் சாப்பிட அமரும் பொழுது கடிகாரத்தின் சின்ன முள்ளும், பெரிய முள்ளும் ஒன்றாய் மேல் நோக்கி பார்த்தது.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, நரேனின் செல்பேசி ஒலித்தது.
"ஹலோ..சொல்லுடா. நல்லா இருக்கேன். நீ?"
......
"இல்ல..இப்ப தான் எழுந்துரிச்சி சாப்பிட உட்காருறேன்."
......
"பரவாயில்ல்..சொல்லு. பண்ணாதவன் பண்ணி இருக்க!"
......
"அடப்போடா...நாலு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன்."

செவ்வாய், 24 ஜூன், 2008

கெளரி வீட்டு பஞ்சாங்கம்

"எங்க வச்சேள்?"
சோமு ஐயர் தன் வீட்டில் உள்ளவர்களிடம் ஆயிரம் தடவைக்கு மேல் இந்த கேள்வியை கேட்டு விட்டார். ஆனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் ஊர் தலைவர் முருகேச முதலியாரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தார் ஐயர். இரண்டு நாட்களாக முருகேச முதலியார் ஐயர் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்.
"நம்பிக்கிட்ட புதுசு வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன். புதன்கிழமை வந்துடும்" என்றார் ஐயர்.
"ஆனா.. பெளர்ணமி செவ்வாய்கிழமை தானே!"

சில நாட்களுக்கு முன் நடந்த கோயில் திருவிழாவின் போது, "பாப்பானுக்கு புரோகிதமும், செட்டிக்கு வணிகமும் சொல்லி கொடுக்காமலே வந்துடும் அந்த மாதிரி...." என்று ஏதோ மேற்கோள் காட்டி பேசினார் ஆறுமுக கவுண்டர். அங்கிருந்த முருகேச முதலியார், கவுண்டரின் மேற்கோளை மறுத்தார். அதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாத முடிவில், கடை ஒன்று வைத்து தன்னாலும் வணிகம் செய்ய முடியும் என்று நிருபிப்பதாக சொல்லி விட்டு வந்து விட்டார் முருகேச முதலியார். சொன்னதோடு நில்லாமல் அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக தொடங்கினார். அவரது ஜாதகப் படி வரும் வளர்பிறைக்குள் கடை வைத்தால் முன்னேறுவார் என்றும், அதன் பிறகு இரண்டு வருடங்கள் தொழில் யோகம் இல்லை என்றிருந்தது.

"ஏன்டா கணேசா..முதலியாரு செலவு இல்லாம புரோகிதம் படிச்சிருக்கலாம். இன்னும் நாள் மட்டும் தான் குறிக்கல போலிருக்கு. முப்பது குடும்பம் இருக்கிர ஊர்ல அவர் வேற தொழில் ஆரம்பிச்சா நீ என்னடா பண்ணுவா!"
"நீங்க எதுவும் இத பத்தி எல்லாம் வெளியில பேசாதீங்கம்மா..! நடக்கிறது நடக்கட்டும். பார்த்துக்கலாம்...விசாலம் மதிய உணவை பையனிடம் கொடுத்து அனுப்பிச்சுடு" என்று கணேச செட்டியார் சொல்லி விட்டு கிளம்பி விட்டார். செட்டியார் கிளம்பியவுடன் கையில் சில வெல்ல கட்டிகளுடன் விசாலாட்சி தோட்டத்திற்கு சென்றாள்.

ஐயரின் மூன்று வயது மகள் கெளரியிடம், "எப்ப வெல்லம் வேணும்னாலும் எங்கிட்ட கேளு" என்றாள்.

திங்கள், 25 பிப்ரவரி, 2008

தனிமை

ஊரே பூங்குழலி வீட்டில் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது. ஆனால் சத்யசீலன் மட்டும் தனியாய் விளக்கும் ஏற்ற மறந்து இருளில் அமர்ந்து இருந்தான். ஏமாற்றமும் அதனால் ஏற்பட்ட எரிச்சலும் சத்யசீலனை பாடாய்படுத்தியது. தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்படி கலைவது என்று புரியாமல் தவித்தான்.

கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பியது போல, சத்யசீலன் பூங்குழலிக்கு செய்த நல்லதை அவள் கெட்டதாக மாற்றி விட்டிருந்தாள். கெட்டதில் போய் முடிந்தது. பூங்குழலியை உயிருடன் கொளுத்த விரும்பிய சதிகார கூட்டத்திடம் இருந்து, தனி ஒருவனாக போராடி அவளை மீட்டான். ஆனால் பூங்குழலியோ நன்றி மறந்து, தனது முகத்தில் கரி பூசி விட்டதாக புலம்பிக் கொண்டிருந்தான் சத்யசீலன்.

திடீரென்று தன் பின்னால் யாரோ நிற்பது போல் சத்யசீலனிற்கு தோன்றியது. திரும்பி பார்த்த சத்யசீலனிற்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. குழந்தை முகம் மாறாத பதிமூன்று வயது பூங்குழலி, மன்னிப்புக் கோறும் பாவனையில் சங்கடத்துடன் சத்யசீலனை பார்த்தாள்.

"ஏன் இங்க வந்த? இங்கிருந்து போ..உன்ன பார்க்கவே பிடிக்கல.." என்று கத்தி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.

பூங்குழலி சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, "அண்ணா.." என்றாள்.

"இன்னும் போகலையா நீ?"

"அண்ணா...என்னை மன்னிச்சுடுங்க. காலையில நீங்க வந்துட்டு போன பிறகு என்னை ஒரு பாழடைஞ்ச அறையில தள்ளி பூட்டிட்டாங்க. அங்க வெளிச்சமே இல்ல. என் கால் மேல எல்லாம் எலி ஏறி ஓடுச்சு. என்னுடைய துணி எல்லாம் போட்டு கொளுத்திட்டாங்க. புருஷன் போனா எல்லாம் போயிடும்னு பாட்டி கூட ஒரு தடவ சொல்லியிருக்காங்க. ரெண்டே ரெண்டு வெள்ளை புடவை மட்டும் கொடுத்து..இவ்வளவு தான்னு சொல்லிட்டாங்க. நெருப்புன்னா எனக்கு பயம். அதிலிருந்து நீங்க காப்பாத்திட்டீங்க. இருட்டுன்னாலும் பயம். அதுவும் தனியா எப்பவும் அந்த இருட்டு அறையில இருக்கனும்னு நினைக்கவே ரொம்ப பயமா இருந்துச்சு. அதனால தான் உத்திரத்தில் புடவையை சுற்றி உயிரை விட்டு விட்டேன்."

திங்கள், 14 ஜனவரி, 2008

கி.பி. -1

<கிறிஸ்து பிறந்த 1940 வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணப்பிள்ளை பிறந்தார். நண்பர்களால் செல்லமாக கி.பி. என்றழைக்கப்பட்டார். சாதாரண குடும்பத்தில் பிறந்து சர்க்கார் உத்தியோகத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டார். அவரது தற்போதைய நிலை குறித்து எவருக்கும் அக்கறை இல்லை எனினும், அக்கறையோடு சேகரித்ததில் கிடைத்த சுவையான தகவல்களின் தோகுப்பு.>

இவ்வுலகிலேயே மிகவும் கடினமான செயல் எதுவென்று கேட்டால், அவரவர்களது வயதிற்கேற்ப தனது அனுபவத்தை சொல்வார்கள். உதாரணத்திற்கு பள்ளி பருவத்தில் பள்ளிக்குப் போவது, கல்லூரி பருவத்தில் அழகிய பெண்கள் பாராமுகமாக இருப்பது, இளைஞர் பருவத்தில் வேலைக் கிடைக்காமல் இருப்பது, கல்யாணமானவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருப்பது, முதுமையில் ஒதுக்கப் படுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் கிருஷ்ணப்பிள்ளைக்கு குழந்தைத்தனமான செயல்களாக தோன்றின. அவரை பொறுத்தவரை இப்பிரஞ்சத்திலியே கடினமான செயல் அழுகின்ற குழந்தையை சமாளிப்பது தான். அழுகின்ற குழந்தையை தேற்றி சமாதானப்படுத்துவது என்றால் அந்த குழந்தையும், நம்மையும் படைத்த பிரம்மாவிற்கே கைக் கூடாத காரியம். அப்படியிருக்கும் பொழுது, சாமான்ய மனிதர்களான நாம் எம்மாத்திரம் என்பதே கிருஷ்ணப்பிள்ளையின் ஆணித்தரமான வாதம். சேவலின் கூவலைக் கூட காதில் வாங்காமல் தூக்கத்தைத் தொடரலாம். ஆனால் இரவில் குழந்தை வீறிட்டு அழும் இன்னிசை அபாய ஒலி மனிதனை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பிவிட்டு விடுகிறது. முதுமையில் தூக்கம் வருவதே அரிது, அப்படியும் தன்னை மீறி கண்ணிழுக்கும் பொழுது குழந்தை கெடுத்து விடுகிறது. ஒன்றிரண்டு நாட்கள் தான் என்றால் கிருஷ்ணப்பிள்ளை பொறுத்திருப்பார். ஆனால் தொடர் ரோதனையாக அல்லவா உள்ளது. ஓய்வு கிடைத்த பிறகும் நிம்மதியாக தூங்க முடியவில்லையே என்று உள்ளுக்குள் மிகவும் சங்கடப்பட்டார். பேத்தி தான் என்றாலும் தனது சுதந்திரத்தில் தலையிடுவதாக கிருஷ்ணப்பிள்ளைக்கு பட்டது. மிகவும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவராய், முதியோர் இல்லத்திற்கு செல்லப் போவதாக தனது மகனிடம் தெரிவித்தார். ஏன் ஏனென்று இரவு பகலாக மாற்றி மாற்றி கேள்விக் கனைகளால் கிருஷ்ணப்பிள்ளையை அவரது குடும்பத்தினர் துளைத்தெடுத்து விட்டனர். சரி போகட்டும் என்று வீட்டிலேயே இருக்க சம்மதித்தால், மகள் அவரது மகனுடன் ஒரு வாரம் தங்குவதாக வந்து சேர்ந்தாள். பாஞ்சஜன்யம் என்ற கிருஷ்ணனின் சங்கை விட பலம்பொருந்திய தொண்டையை பெற்றிருந்தான் கிருஷ்ணப்பிள்ளையின் பேரன். ஒன்றிற்கு ரெண்டா என்ற திகிலுடன் தான் படுத்தார். ஆனால் அன்றைய இரவு அவர் நினைத்தது போல் மோசமில்லை. ஒரு மாபெரும் உண்மையை கண்டுபிடிக்க உதவிய அற்புத இரவாகவே அமைந்தது. ஒற்றுமைக்கு பெயர் போனவர்கள் காக்கைகள் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் என்று தான் அது நாள் வரை கிருஷ்ணப்பிள்ளை நினைத்திருந்தார். ஆனால் இரவில் ஒரு குழந்தை அழ ஆரம்பித்தவுடன், இன்னொன்றும் சேர்ந்துக் கொள்கிறது. தனது பேரனிடமும், பேத்தியிடமும் காணப்பட்ட தெய்வீக ஒற்றுமையை எண்ணி மெய் சிலிர்த்தார் கிருஷ்ணப்பிள்ளை. கடல், கடல் அலைகள், திமிங்கலம் ஏன் இந்த பிரபஞ்சத்தை விடவும் தனது பொறுமை தான் பெரிது என்ற பெருமை மட்டுமே கிருஷ்ணப்பிள்ளைக்கு மிஞ்சியது.

கி.பி. -2

எவ்வளவு முயன்றாலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு நாட்கள் திருப்திக்கரமாக நகர்வதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை எனினும், புத்தகம் உற்ற துணை என்று கேள்விப்பட்டிருக்கார். எப்படிப்பட்ட புத்தங்களை படிக்கலாம் என்று கிருஷ்ணப்பிள்ளை ஆழ்ந்து யோசித்து, தனது வயதிற்கு ஆன்மீக புத்தகம் தான் சரி என்று முடிவு செய்தார். வீட்டு பரணையிலிருந்து அவர் தந்தை உபயோகித்திருந்த 'அத்வைதம்' என்னும் புத்தகத்தை தூசி தட்டி எடுத்தார். அனைவரும் கடவுள் என்ற அத்வைத கொள்கை கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த கொள்கையின்படி எல்லாம் கடவுளாக தோன்ற வேண்டும், ஆனால் கிருஷ்ணப்பிள்ளைக்கு தான் மட்டுமே கடவுளென தோன்றியது. கண்ணாடி முன் நின்று கொண்டு தலையை சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தோன்றுகிறதா என்று அடிக்கடி சோதித்து பார்த்தார். தான் கடவுளாகி விட்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென ஆவல் கிருஷ்ணப்பிள்ளையை வாட்டி எடுத்தது. தனது அலுவலக நண்பர் ஒருவரிடம் தனது மாற்றத்தை சொல்லி விட வேண்டுமென கிளம்பினார். அவரது நண்பர் எது சொன்னாலும் அது சரியாக தானிருக்கும் என கிருஷ்ணப்பிள்ளை எப்பொழுதும் நம்பினார். வழியில் நடுத்தர வயதுடைய ஒருத்தர் தனது பணம் திருடுப் போனதை குறித்து வருத்ததோடு புலம்பினார். அவர் புலம்பும் பொழுது, "கடவுளுக்கு கண்ணும் இல்ல...ஒரு மண்ணும் இல்ல. கடவுள்னு ஒருத்தவன் இருந்திருந்தா எனக்கு இப்படி நடந்திருக்குமா? என்னை கஷ்டப்படுத்தி வேடிக்கை பாக்கிறதுக்கு ஒரு கடவுளா? அதெல்லாம் வெறும் கல்" என்றெல்லாம் கோபத்தில் மண்ணை வாரி இறைத்து திட்டிக் கொண்டிருந்தான். அவன் தன்னை தான் திட்டுவதாக ஆத்திரப்பட்டார் கிருஷ்ணப்பிள்ளை. 'பணத்த பத்திரமா வச்சுக்க துப்பில்லாம என்னை திட்ட வந்துட்டான். கலி காலம். நம்பிக்கை இல்லாம போச்சு' என்று முனறிக் கொண்டே கடந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்காக அவரது நண்பர் பூங்காவில் காத்திருந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு தற்பெருமை பிடிக்காது. அதனால் சிறிது நேரம் பொதுவாக பேசி விட்டு, கடவுளை பற்றிய பேச்சை தொடங்கினார். அவரது நண்பர், "கடவுளும், குழந்தையும் ஒன்னு. ரெண்டு பேருக்கும் தான் மனசுல ஒன்னுமே இருக்காது. இந்த சாமியாருங்க, நான் தான் கடவுளுன்னு சொல்றவங்க எல்லாம் தன்னையும் ஏமாத்திக்கிட்டு மத்தவங்களையும் ஏமாத்திக்கிட்டு திரிறாங்க" என்று தெளிவாக கிருஷ்ணப்பிள்ளையின் ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவரது நண்பர் சொல்றது உண்மையாக தான் இருக்கும் என சமாதானப்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை இருக்கும் பொழுது ஏன் அனைவரும் கோவிலுக்கு செல்கின்றனர் எனப் பெரிய சந்தேகம் கிருஷ்ணப்பிள்ளைக்கு எழுந்தது. 'தினமும் ராத்திரியில எல்லார் தூக்கத்தையும் கெடுக்கும் என் பேத்தி அப்ப கடவுளா! மத்தவங்கள கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கிறது தான் கடவுளுக்கும், குழந்தைக்கும் வேலை போலிருக்கு. அப்ப ரெண்டு பேரும் சொன்னதும் உண்ம தான். அப்ப நான் கடவுள் இல்லை. ஏன்னா...நான் யாரையும் கஷ்டப்படுத்துல' என தனது நண்பன் சொன்னதில் இருக்கும் உண்மையை ஊகித்தார் கிருஷ்ணப்பிள்ளை.

கி.பி. -3

மதர் தெரசாவின் சேவையை பாராட்டி செய்தி தாளில் ஒரு நினைவு கட்டுரை வெளிவந்திருந்தது. கிருஷ்ணப்பிள்ளை தமது வாழ்க்கையை அந்த புண்ணிய ஆத்மாவோடு ஒப்பிட்டு பார்த்தார். இதுவரை சமூகத்திற்கென ஒரு நல்லது கூட செய்ததில்லை என்ற உண்மை, பெரும் குற்ற உணர்ச்சியாக மாறி கிருஷ்ணப்பிள்ளையை போட்டு வாட்டியது. இனிமேல் தினமும் நாட்டிற்கோ, சமூகத்திற்கோ ஒரு நல்லதாவது செய்து விட வேண்டுமென சபதம் மேற்கொண்டார். அன்று மாலை காலார நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, சாலையோர மரத்தடியில் நோய்வாய்ப்பட்ட நொண்டி நாய் ஒன்று ஈனஸ்வரத்தில் முனகி கொண்டிருந்தது. நாயின் மீது கிருஷ்ணப்பிள்ளைக்கு பரிதாபம் பொங்கியது. அந்நாயினுடைய ஒருவேளை பசியையாவது போக்கி விட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், பக்கத்து கடையிலிருந்து ரொட்டித் துண்டுகள் வாங்கி நாயிற்கு போட்டார். நாய் சாப்பிடும் அழகினை பார்க்க, ஆயிரம் கண்கள் வேண்டுமென நினைத்துக் கொண்டார். கிருஷ்ணப்பிள்ளை தலை கால் புரியாத மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார். தனது மனிதாபிமான செய்கையை சாலையில் யாராவது கவனித்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் பார்க்காதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நாய் மட்டும் நன்றியோடு வாலாட்டியது. மனநிறைவோடு வீட்டை நோக்கி நடந்தார் கிருஷ்ணப்பிள்ளை. அவரை அந்த நாய் பின் தொடர்ந்தது. நாயும் பின் தொடர்வதை பார்த்து, 'சூ..' என்று விரட்டினார். கல் எடுத்து அடித்தும் பார்த்தார். நாய் எதற்கும் மசியாமல் வீடு வரை வந்து விட்டது. 'இந்த சனியன எங்க பிடிச்சிட்டு வந்தீங்க?' என்று சகதர்மணியிடம் சக்கையாக வாங்கி கட்டிக் கொண்டார். 'சொறி பிடிச்ச நாயால குழந்தைக்கு இன்ஃபெக்'ஷன் கின்ஃபெக்'ஷன் வந்துடப் போகுது. ஏதாவது பண்ணி அத முதல்ல துரத்தி விடுங்க' என்று கிருஷ்ணப்பிள்ளைக்கு அவரது மனைவி கட்டளையிட்டாள். ஏதேதோ செய்துப் பார்த்து நாயிடம் தோற்றார் கிருஷ்ணப்பிள்ளை. பிறகு, ஏதோ யோசனை வந்தவராக கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணினார். அவர்கள் வந்து நாயை கதற கதற வேனில் அடைத்து அழைத்து சென்றார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள், 'அந்த நாயை எப்படியும் கொன்னுடுவாங்க. பாவம்..அது சாகறதுக்கு நீங்க காரணம் ஆயிட்டீங்களே மாமா!' என்று வருத்தப்பட்டாள். கிருஷ்ணப்பிள்ளைக்கு தூக்கி வாரி போட்டது. சேவை புரிந்து புண்ணியம் தேட போய் பாவத்தில் வந்து முடிந்து விட்டதே என்று குழம்பினார். ஏணி வைத்தாலும் மதர் தெரசா அளவுக்கு உயர முடியாது என்று கிருஷ்ணப்பிள்ளைக்கு புரிந்தது.

கி.பி. -4

வயதானதால் கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதி அதிகமாகி விட்டதென வருவோர் போவோர்களிடம் அங்கலாய்த்து கொண்டாள் அவரது மனைவி. கிருஷ்ணப்பிள்ளைக்கு ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. 'என்ன பெருசா மறதிய கண்டுட்ட? இன்னோர் தடவ அப்படி சொன்னா பாரேன்!' என்று கிருஷ்ணப்பிள்ளை கோபித்துக் கொண்டார். 'ஆயிரந்தடவ சொல்வேன்' என்று பதில் வந்தது. நல்லவேளையாக வாக்குவாதம் முற்றி போராக மாறாமல் போட்டியில் முடிந்தது. 'நல்லா கேட்டுக்கோங்க...பச்ச மொளகா வேண்டாம். காஞ்ச மொளகா 50 கிராம் வேணும். தலைக்கு தேங்க எண்ணெய் வேணும். சமைக்கறதுக்கு நல்லெண்ணெய் ஒரு லிட்டர் வேண்டாம். கொஞ்சமா வீட்டுல துவரம்பயிர் இருக்கிறதால, கடலப்பயிர் வேண்டாம். துவரம்பயிர் மட்டும் 500 கிராம் வாங்கிட்டு வாங்க. துணி தோய்க்கிற சோப்பு பெருசு ஒன்னு, குளிக்கிற சோப்பு நாலு. பெருங்காயம் சின்ன வெங்காயம் வேணாம். பெரிய வெங்காயம் கால் கிலோ. ஒரு லிட்டர் பால். குழந்தைக்கு பேபி ஷாம்பூ, சோப்பு. அப்படியே உங்களுக்கு எதாவது தேவன்னா வாங்கிட்டு வந்துடுங்க. இன்னொரு தடவ சொல்லட்டுமா?' என்று கேட்டாள் கிருஷ்ணப்பிள்ளையின் மனைவி. வீராப்பாக எதுவும் சொல்லாமல் வீம்பாக வெளியேறினார். எப்படியும் தோற்று விடுவார் என்பது கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியது எண்ணம். ஏனென்றால் முன்ன பின்ன கடைக்கு சென்று பழக்கம் இல்லாதவர். கடைக்கு செல்லும் வழியில், பலத்த யோசனையில் ஆழ்ந்தார் கிருஷ்ணப்பிள்ளை. கல்யாணமான புதிதில், அவரது மனைவி 'களத்தூர் கண்ணம்மா' என்ற புது படம் வந்திருப்பதாக சொல்லி அழைத்தாள். சமய சந்தர்ப்பங்கள் கூடி வராததால் அவளது விருப்பத்தை கிருஷ்ணப்பிள்ளையால் அன்று நிறைவேற்ற முடியாமல் போனது. கிருஷ்ணப்பிள்ளை அந்தப் படத்தின் குறுந்தகட்டினை வாங்கி தன் மனைவியின் கையில் வைத்து ஆச்சரியப்பட வைக்க வேண்டுமென விரும்பினார். கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியோட தங்கை மகள், அதே ஊரின் மற்றொரு எல்லையில் வசிக்கிறாள். அவரது மனைவிக்கு தங்கை மகளை மிகவும் பிடிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மைத்துனி மகளுக்கு மறுதினம் பிறந்த நாள் என்று ஞாபகம் வந்தது. 'கோயிலுக்கு போகலாம்' என்று கூறி, மகள் வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு போய் அசத்தலாம் என்று திட்டமிட்டுக் கொண்டார். வெறும் கையோடு போனால் நல்லாயிருக்குமா? அதனால் மைத்துனி மகளுக்கு ஒரு புடவை எடுக்க வேண்டும் என நிச்சயித்துக் கொண்டார். இப்படி யோசித்துக் கொண்டே மளிகைக் கடைக்கு வந்து சேர்ந்தார். பணம் எடுத்து வரவில்லை என்று அப்பொழுது தான் ஞாபகம் வந்தது. வீட்டிற்குப் போய் பணம் எடுத்தால், மனைவி வென்றதாகி விடும். அவளோ படிக்காதவள். ஞாபகம் இல்லாததையும், மறதியையும் ஒன்றென நினைத்து குழப்பிக் கொள்வாள். மளிகை கடை தெரிந்த கடை தான். வேண்டியதை சொல்லி, கடைப் பையனையே எடுத்துக் கொண்டு போய் வீட்டில் தர சொல்லலாம். மனைவியும் பணம் தந்து விடுவாள். சிறிது நேரம் பூங்காவில் ஓய்வெடுத்து விட்டு, பிறகு வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து குறுந்தகடு மற்றும் புடவையினை வாங்கிக் கொள்ளலாம் என்று நிலைமைக்கு தகுந்தவாறு யோசனையை மாற்றினார். சொன்ன பொருட்கள் எல்லாம் சொன்னப்படி வந்ததில் கிருஷ்ணப்பிள்ளையின் மனைவிக்கு மிகுந்த ஆச்சரியம். கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதியோ என்று சந்தேகப்பட்டதை எண்ணி வருந்தினாள். பூங்காவில் இருந்து வேகமாக வந்த கிருஷ்ணப்பிள்ளை, சட்டையை அவிழ்த்து விட்டு படுத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டார். பாவம், கிருஷ்ணப்பிள்ளைக்கு குறுந்தகடு மற்றும் புடவை பற்றி மறந்து விட்டது. இல்லை..இல்லை.. ஞாபகம் இல்லாமல் போய் விட்டது.

கி.பி. -5

கிருஷ்ணப்பிள்ளை, அவரது மனைவி, அவரது மருமகள் மூவரும் தொலைக்காட்சியில் ஆர்வமாக மதிய உணவினையும் மறந்து தொடர் ஒன்றினை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களை தவிர, நான்காவதாக ஒருவரும் யாருக்கும் தெரியாமல் தொலைக்காட்சியை பார்த்தார். அது தொட்டிலில் இருந்த கிருஷ்ணப்பிள்ளையின் பேத்தி. கால்களால் நெம்பி நெம்பி தலையை மட்டும் வெளியில் நீட்டி பார்த்துக் கொண்டிருந்தது. கருவில் இருக்கும் பொழுதே அத்தொடரின் கதாநாயகியோட வேதனையும், போராட்டமும் குழந்தைக்குத் தெரியும். பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த பொழுது கூட, அறையில் இருந்த தொலைக்காட்சியில் கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள் விடாமல் தொடரினைப் பார்த்தாள். தொடரினால் ஏற்பட்ட பாதிப்புகள் குழந்தையை சென்று அடைந்தன. ஒரு பெண்ணின் மனம் மற்றொரு பெண்ணிற்கு தான் புரியும் என்பதற்கேற்ப மருத்துவர் பிரசவ தேதி செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிட்டு இருந்தும், தாயின் மனதை புரிந்து ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே கருவிலிருந்து வெளிநடப்பு செய்தது குழந்தை. அத்தகைய குழந்தை தொட்டிலில் இருந்து தலையை நீட்டி தொடரினை பார்த்தது என்பது கற்பனை கலக்காத அப்பட்டமான உண்மை.

'ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு தனி திறமை இருக்கும். உனக்கும் இருக்கும். அது என்னென்னு உனக்குள்ள தேடு' என்று கதாநாயகி கதாநாயகனுக்கு அறிவுறைத்தாள். உடனே விளம்பரங்கள் வந்தன. பல நிமிடங்களுக்கு பின் மீண்டும் தொடர் தோன்றி, கதாநாயகனின் முகத்தை பல்வேறு கோணங்களில் காட்டி விட்டு முடித்து விட்டனர். பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணப்பிள்ளைக்கு பெருங்கோபம் வந்து விட்டது. 'இன்னிக்கு என்ன போட்டுட்டானுங்க பெருசா.. இதுல ஆயிரம் விளம்பரம் வேற நடுவுல' என்று புலம்பிக் கொண்டு வேகமாக எழுந்தார். ஆனால், இந்த கோபத்தை எல்லாம் மறந்து நாளைக்கும் பார்ப்பார். மதிய உணவினை முடித்து விட்டு படுத்தால் தூக்கம் வரவில்லை. கதாநாயகி சொன்னது காதில் கேட்டது. பள்ளி, கல்லூரி, கல்யாணம், வேலை, ஓய்வு- இதில் எங்கே தனி திறமை இருக்கிறது என்று யோசிக்களானார். சிறு வயதில் நீச்சலில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். கிணறு, கால்வாய், குளம்,ஆறு, கடல் என்று ஒன்றையும் விடுவதில்லை. அதற்காக பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றிருக்கார். நீச்சல் தான் தனது தனி திறமை என்ற நினைப்பிலேயே தூங்கி விட்டார்.

மாலை ஆறு மணிக்கு பக்கத்து வீட்டம்மாள் அழுதுக் கொண்டே வந்தாள். 'அம்மா...என் பையன் கிணத்துல விழுந்துட்டானே! நான் என்ன பண்ணுவேன்? எனக்கு பயமா இருக்கு' என்று கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியை கட்டிக் கொண்டு அழுதாள். தூங்கி கொண்டிருந்தவரின் காதில் இவையெல்லாம் விழுந்தது. கிருஷ்ணப்பிள்ளை எழுந்து மின்னல் வேகத்தில் ஓடி, சுவர் ஏறி குதித்து, பக்கத்து வீட்டு கிணற்றை எட்டி பார்த்தார். பாதி கிணறு தான் தெரிந்தது. மீதி இருட்டாக இருந்தது. மூக்கு கண்ணாடி எடுத்து வர மறந்து விட்டார். பையனோட உயிர் தான் முக்கியம் என்று எதுவும் யோசிக்காமல் குதித்து விட்டார். உடம்பெல்லாம் ஒரே வலி. மெதுவாக கண்ணை திறந்தால், மருத்துவமனையில் இருப்பது புரிந்தது. 'அந்த பையன் எப்படியிருக்கான்?' என்று மனைவியிடம் கேட்டார் கிருஷ்ணப்பிள்ளை. 'அவனுக்கு என்ன! நல்லா தான் இருக்கான்' என்றாள் கோபமாக. அருகிலிருந்த மகன் குனிந்து, 'ஏம்ப்பா இப்படி இருக்கீங்க? அவன் ஏதோ ஒரு ஊர்ல, ஹாஸ்டலுல இருக்கிற கிணத்துல விழுந்ததற்காக, நீங்க காப்பத்துறேன்னு இங்க விழுந்து இப்படி ஹாஸ்பிட்டலுல இருக்கீங்களே! அதுவும் அந்த கிணத்துல தண்ணியும் இல்ல. சும்மா வீட்ல இருக்கலாம்னு இல்லாம, இப்படி நீங்களும் கஷ்டப்பட்டுக்கிட்டு, கூட இருக்கிற எங்களையும் கஷ்டப்படுத்துறீங்களே!?' என்று குரலில் கோபத்தை காட்டாமல், சாந்தமாக கேட்டான். இதுவே கிருஷ்ணப்பிள்ளை பிறந்த கிராமமாக இருந்திருந்தால், பக்கத்து வீட்டு பையன் எங்கு படிக்கிறான் என்றும், கிணற்று நீர் பற்றியும் தெரிந்திருக்கும். இதெல்லாம் நகரத்திலேயே பிறந்து வளர்ந்த கிருஷ்ணப்பிள்ளையின் மகனுக்கு எப்படித் தெரியும்?

அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை. கிருஷ்ணப்பிள்ளை எது செய்தாலும் ஏறுக்கு மாறாகவே எல்லாம் நிகழ்கின்றன.

புதன், 2 ஜனவரி, 2008

அவன் அமெரிக்கா போறான்

நரேந்திரன் வீட்டிற்கு வந்ததும் அவன் கண்களில் அந்த பத்திரிக்கை விழுந்தது. அவனது பால்ய நண்பன் தயாளனின் திருமண அழைப்பிதழ் அது. நரேந்திரனுக்கே தாமதமாக தான் கல்யாணம் நடந்தது. சந்நியாசம் தான் தனக்கு என்று முடிவு செய்து கவலைப்பட்டு கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக கல்யாணம் ஆனது. கல்யாணம் ஆகி எட்டு வருடங்கள் முடிந்த நிலையில், சந்நியாசி ஆகாமல் போய் விட்டோமே என்று கவலைப்பட்டான். இரண்டு விஷயங்களில் அனைவரையும் விட மிக திறமைசாலியாக இருந்தான். ஒன்று மற்றவர்களுக்கு நடந்த நல்லதை நினைத்து புலம்புவது. மற்றொன்று தனக்கு அந்த நல்லது நடக்கவில்லையே என்று கவலைப்படுவது. எப்படியும் தனது சந்நியாசி ஆகும் கனவை தயாளனாவது நிறைவேற்றுவான் என்ற நரேந்திரன் நம்பினான்.
'இப்ப இவன் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறான்? படிப்பும் ஸ்கூல் தாண்டல. இன்னும் அதே பழைய விவசாயத்தையே தான் பண்ணிக்கிட்டிருக்கான். அறிவு கெட்டவன்....மரியாதையும் தெரியல. நேர்ல வந்து கூப்பிட்டிருந்தாலாவது போறத பத்தி நினைச்சிருப்பேன்' என்று பத்திரிக்கையை முழுவதுமாக பார்க்காமலேயே வீசி விட்டான் நரேந்திரன்.

அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் நரேந்திரன் வீட்டு வாசலில் தயாளன் வந்து நின்றான். கதவை திறந்த நரேந்திரனின் மனைவி, நரேந்திரனிடம் செய்தியை சொல்லி எழுப்பி விட்டாள். தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த நரேந்தி்ரனுக்கு, வாசலில் தலை சொறிந்தவாறு திரும்பி நின்றுக் கொண்டிருந்த தயாளனை பார்த்ததும் கோபம் வந்து விட்டது.
'கல்யாணத்துக்கு பணம் கடனா வாங்க வந்திருக்கான் போலிருக்கு...இவ வேற ஊர்ல இல்லன்னு சொல்லி அனுப்பாமா....' என்று நினைத்துக் கொண்டே,"வா...தயாளு. ஏன் நிக்கிற? உள்ள வந்து உட்காரு" என்று முகம் முழுவதும் பல்லாக வரவேற்றான். நரேந்திரனை பார்த்து புன்னகைத்தவாறே உட்கார்ந்த தயாளனின் கண்களில் அவனது திருமண அழைப்பிதழ் விழுந்தது.
"அடாட... பத்திரிக்கை வந்துடுச்சா? நீ ஆபீஸ் போறதுக்கு முன்னாடி நேர்ல பார்த்து கூப்பிடலாம்னு தான் காலையிலியே வந்தேன். டைரியில இருந்த மத்தவங்க அட்ரசோடு உன் அட்ரசையும் சேர்த்து அம்மா அனுப்பிட்டாங்க போலிருக்கு" என்றான் தயாளன்.
"பரவாயில்ல...இதுல என்னயிருக்கு" என்று சொல்லி விட்டு,'சரியான தொல்லை...பணமும் உடனடியா ஏற்பாடு பண்ண முடியாது. சாயந்திரம் தான் கிடைக்கும். அதுவரைக்கும் இங்கயே சாப்பிட்டு வேற உயிர எடுப்பான்' என்று நினைத்தவாறே சிரித்தான்.

எப்படி தயாளனை அனுப்பலாம் என நரேந்திரன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவன் வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்றது.
"எப்பவும் இப்படி தான் யாராவது உதவி கேட்டு வந்து தொந்தரவு செஞ்சுட்டே இருப்பாங்க. என் சூழ்நிலைய சொன்னா கூட புரிஞ்சுக்க மாட்டாங்க. சரி, நான் அனுப்பி வச்சுட்டு வர்றேன்" என்று எழுந்தான் நரேந்திரன். யாராவது அட்ரஸ் கேட்க வந்திருப்பாங்க, ஆங்கிலத்திலேயே பேசி தயாளனை பயமுறுத்தனும் என்று நரேந்திரன் எண்ணிய பொழுது, காரில் இருந்து வெளிநாட்டுக்கார பெண் ஒருத்தி இறங்கினாள். நரேந்திரனுக்கு படிக்காதவர்களை பார்த்தால் தான் ஆங்கிலம் வரும். வெளிநாட்டு பெண் நரேந்திரனை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.
'நீங்க யாரு?' என்பதற்கான ஆங்கில வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தான் நரேந்திரன்.
"இவள தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். பத்திரிக்கையில் பெயர் படிச்சிருப்பியே..அர்லீன். அமெரிக்காவுல கம்ப்யூட்டர்ல பெரிய வேல பார்க்கிறா. நீ இருக்கியா, இல்லயான்னு தெரிஞ்சுக்க கார தெரு முனையிலேயே விட்டுட்டு நான் நடந்து வந்துட்டேன்" என்றான் தயாளன்.
கார் ட்ரைவர் இரண்டு கூடை நிறைய பழங்களும், காய்கறிகளும் எடுத்துக் கொண்டு போய் வீட்டிற்குள் வைத்தான்.

"எப்படி?"
"டூரிஸ்ட்டா வந்த அர்லீனுக்கு என்னை பிடிச்சிடிச்சு" என்று சொல்லி விட்டு அர்லீனைப் பார்த்து சிரித்தான் தயாளன்.
'எட்டு வருஷத்துக்கு முன்னாடி நான் எந்த டூரிஸ்ட் கண்ணிலும் படாம போயிட்டேனே!'
"ஆனா அது உண்மை இல்ல" என்று சிரிப்பை நிறுத்தி விட்டு, "உண்மைய சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அதனால எல்லார்கிட்டயும் அப்படி சொல்லியிருக்கோம்" என்று மீண்டும் சிரித்தான் தயாளன். நரேந்திரனுக்கு கோபம் வந்தது. ஆனால் எப்பவும் போல் வெளிக்காட்டாமல், "எங்கிட்டயாச்சும் சொல்லுவியா?" என்றான்.
"உங்கிட்ட சொல்லாமலா? ஆனா நீயும் நம்புவியான்னு தான் சந்தேகமா இருக்கு."
"ப்ச்...நான் உன்ன நம்பாம இருப்பனா?" என்று சொல்லி விட்டு, 'சாவடிக்காம சொல்ல மாட்டான் போலிருக்கு' என்று மனதிற்குள் திட்டினான் நரேந்திரன்.

"லாரில ட்ராக்டர் மோதி மூனு மாசத்துக்கு முன்னாடி ஹாஸ்பிட்டலுல இருந்தேன் ஞாபகமிருக்கா? பிழைக்க மாட்டேன்னு எல்லாருக்கும் சொல்லியே அனுப்பிச்சிட்டாங்க. அப்ப நான் மூனு நாள் கோமாவுல இருந்தேன். அது தெளிஞ்சவுடன் ஆப்ரேஷன் பண்ணாங்க. அப்ப எனக்கு ஏதோ சத்தம் கேட்டுச்சு. என் உடம்புல இருந்து நான் வெளியே வந்துட்டேன். எங்கயோ மிதக்கிற மாதிரி இருந்துச்சு. கருப்பான ஒரு பைப்புக்குள்ள கொஞ்ச நேரம் போயிட்டேயிருந்தேன், அப்புறம் சுரியன் மாதிரி ஏதோ ரொம்ப வெளிச்சமானா இடம் வந்துச்சு. ஆனா அது கண்ணெல்லாம் கூசல. எங்கப்பா அங்க நிக்கிறாரு. 'உனக்கு இன்னும் நேரம் வரல. நீ போ'ன்னு என்னை திருப்பி அனுப்பி வச்சுட்டார். திரும்பி கருப்பு பைப்புக்குள்ள நடந்து வரும் பொழுது அர்லீன பார்த்தேன். இப்ப இருக்கிறத விட ரொம்ப அழகா இருந்தா. அவ ஏதோ கேட்டா, நானும் என்னமோ சொன்னேன். திரும்பி நான் ஹாஸ்பிட்டலுக்கு வந்து என் உடம்புக்குள்ள போயிட்டேன்.
நினைவு வந்தவுடனே நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருந்தது. நானும் அதை கனவுனே முடிவு பண்ணிட்டேன். செத்து போன அப்பாவ பார்த்தன்னு சொன்ன யாராவது நம்புவாங்களா?திடீரென்னு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இவ எங்க வீட்டு வாசல்ல நிக்கிறா. கனவுல பார்த்த பொண்ணாச்சேன்னு எனக்கு ரொம்ப ஆச்சரியம்.
இவளுக்கு மூளையில ரத்தம் போகாம அடச்சிக்கிச்சாம். ஆப்ரேஷன் பண்றப்ப இவளுக்கும் அதே மாதிரியே சத்தம் கேட்டிருக்கு. இவளும் செத்துப் போன அவங்க பாட்டிய பாத்திருக்கா. வர்றப்ப என்ன பத்தியும், என்னோட ஊர பத்தியும் எல்லாம் கேட்டாளாம். ஆனா எனக்கு பேசினத பத்தி எல்லாம் ஞாபகமில்ல. இந்த மாதிரி செத்து பிழைச்சவங்க அனுபவத்தையெல்லாம் வெளிநாட்டுல மும்மரமா ஆராய்ச்சி செய்றாங்களாம். அதுக்கு பெயர் கூட என்னம்மோ சொன்னியே!" என்று அர்லீனைப் பார்த்தான் தயாளன்.

"அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ் (OOBE - Out Of Body Experience)" என்றாள் அர்லீன்.
நரேந்திரனுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "ஆங்... நான் கூட இத பத்தி படிச்சிருக்கேன். சரி, இவங்க பேசுறது உனக்கு புரியுதா?" என்று கேட்டான்.
"கொஞ்சம் புரியும். கொஞ்சம் நானே புரிஞ்சுப்பேன். கொஞ்சம் சைகையில புரிய வைப்பா. ரொம்ப மெதுவா குழந்தக்கிட்ட பேசுற மாதிரி தான் பேசுவா. நான் இங்கிலீஷ் கத்துக்கிறேன். அவளுக்கு நான் தமிழ் சொல்லி தர்றேன்" என்று சிரித்தான் தயாளன்.
"நீ எப்படி கிராமத்துல விவசாயமே பண்ணிக்கிட்டு இருக்க போறியா?"
"இல்ல..நானும் அம்மாவும் இவக் கூட அவங்க ஊருக்கு போயிடப் போறோம். நம்ம வழக்கப் படி இங்க ஒரு கல்யாணம் பண்ணிட்டு, அங்க போய் அவளோட பெத்தவங்க முன்னாடி அவங்க வழக்கப் படி இன்னொரு கல்யாணம் பண்ணப் போறோம். இவங்களுக்கும் அங்க நிறைய நிலம் இருக்காம். அப்படியே அத நான் பார்த்துப்பேன்."
'ச்சே...கொடுத்து வச்சவன். ஆக்சிடென்ட்ல போவ கிடந்தவனுக்கு இப்படியொரு வாழ்வு.'

தயாளன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பும் பொழுது, அர்லீன் அவனிடம் ஏதோ ரகசியமாக கேட்டாள். தயாளனும் மெல்லிய குரலில் அவளுக்கு பதிலளித்தான். அர்லீன் திரும்பி நரேந்திரனைப் பார்த்து, "நீங்க அமெரிக்கா வந்தா, எங்க வீட்டுக்கு...."என்று திக்கி தயாளனைப் பார்த்தாள்.
"கண்டிப்பா வரனும்."