திங்கள், 14 ஜனவரி, 2008

கி.பி. -2

எவ்வளவு முயன்றாலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு நாட்கள் திருப்திக்கரமாக நகர்வதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை எனினும், புத்தகம் உற்ற துணை என்று கேள்விப்பட்டிருக்கார். எப்படிப்பட்ட புத்தங்களை படிக்கலாம் என்று கிருஷ்ணப்பிள்ளை ஆழ்ந்து யோசித்து, தனது வயதிற்கு ஆன்மீக புத்தகம் தான் சரி என்று முடிவு செய்தார். வீட்டு பரணையிலிருந்து அவர் தந்தை உபயோகித்திருந்த 'அத்வைதம்' என்னும் புத்தகத்தை தூசி தட்டி எடுத்தார். அனைவரும் கடவுள் என்ற அத்வைத கொள்கை கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த கொள்கையின்படி எல்லாம் கடவுளாக தோன்ற வேண்டும், ஆனால் கிருஷ்ணப்பிள்ளைக்கு தான் மட்டுமே கடவுளென தோன்றியது. கண்ணாடி முன் நின்று கொண்டு தலையை சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தோன்றுகிறதா என்று அடிக்கடி சோதித்து பார்த்தார். தான் கடவுளாகி விட்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென ஆவல் கிருஷ்ணப்பிள்ளையை வாட்டி எடுத்தது. தனது அலுவலக நண்பர் ஒருவரிடம் தனது மாற்றத்தை சொல்லி விட வேண்டுமென கிளம்பினார். அவரது நண்பர் எது சொன்னாலும் அது சரியாக தானிருக்கும் என கிருஷ்ணப்பிள்ளை எப்பொழுதும் நம்பினார். வழியில் நடுத்தர வயதுடைய ஒருத்தர் தனது பணம் திருடுப் போனதை குறித்து வருத்ததோடு புலம்பினார். அவர் புலம்பும் பொழுது, "கடவுளுக்கு கண்ணும் இல்ல...ஒரு மண்ணும் இல்ல. கடவுள்னு ஒருத்தவன் இருந்திருந்தா எனக்கு இப்படி நடந்திருக்குமா? என்னை கஷ்டப்படுத்தி வேடிக்கை பாக்கிறதுக்கு ஒரு கடவுளா? அதெல்லாம் வெறும் கல்" என்றெல்லாம் கோபத்தில் மண்ணை வாரி இறைத்து திட்டிக் கொண்டிருந்தான். அவன் தன்னை தான் திட்டுவதாக ஆத்திரப்பட்டார் கிருஷ்ணப்பிள்ளை. 'பணத்த பத்திரமா வச்சுக்க துப்பில்லாம என்னை திட்ட வந்துட்டான். கலி காலம். நம்பிக்கை இல்லாம போச்சு' என்று முனறிக் கொண்டே கடந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்காக அவரது நண்பர் பூங்காவில் காத்திருந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு தற்பெருமை பிடிக்காது. அதனால் சிறிது நேரம் பொதுவாக பேசி விட்டு, கடவுளை பற்றிய பேச்சை தொடங்கினார். அவரது நண்பர், "கடவுளும், குழந்தையும் ஒன்னு. ரெண்டு பேருக்கும் தான் மனசுல ஒன்னுமே இருக்காது. இந்த சாமியாருங்க, நான் தான் கடவுளுன்னு சொல்றவங்க எல்லாம் தன்னையும் ஏமாத்திக்கிட்டு மத்தவங்களையும் ஏமாத்திக்கிட்டு திரிறாங்க" என்று தெளிவாக கிருஷ்ணப்பிள்ளையின் ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவரது நண்பர் சொல்றது உண்மையாக தான் இருக்கும் என சமாதானப்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை இருக்கும் பொழுது ஏன் அனைவரும் கோவிலுக்கு செல்கின்றனர் எனப் பெரிய சந்தேகம் கிருஷ்ணப்பிள்ளைக்கு எழுந்தது. 'தினமும் ராத்திரியில எல்லார் தூக்கத்தையும் கெடுக்கும் என் பேத்தி அப்ப கடவுளா! மத்தவங்கள கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கிறது தான் கடவுளுக்கும், குழந்தைக்கும் வேலை போலிருக்கு. அப்ப ரெண்டு பேரும் சொன்னதும் உண்ம தான். அப்ப நான் கடவுள் இல்லை. ஏன்னா...நான் யாரையும் கஷ்டப்படுத்துல' என தனது நண்பன் சொன்னதில் இருக்கும் உண்மையை ஊகித்தார் கிருஷ்ணப்பிள்ளை.

1 கருத்து:

Unknown சொன்னது…

நானும் கடவுள் தான் என சொன்னால் புதுசா சாமியார் கிளம்பி வந்துட்டார் என தான் சொல்வார்கள். அதை உணர்ந்தால் தான் புரியும். சாமியார்களிடம் அல்ல.