திங்கள், 14 ஜனவரி, 2008

கி.பி. -3

மதர் தெரசாவின் சேவையை பாராட்டி செய்தி தாளில் ஒரு நினைவு கட்டுரை வெளிவந்திருந்தது. கிருஷ்ணப்பிள்ளை தமது வாழ்க்கையை அந்த புண்ணிய ஆத்மாவோடு ஒப்பிட்டு பார்த்தார். இதுவரை சமூகத்திற்கென ஒரு நல்லது கூட செய்ததில்லை என்ற உண்மை, பெரும் குற்ற உணர்ச்சியாக மாறி கிருஷ்ணப்பிள்ளையை போட்டு வாட்டியது. இனிமேல் தினமும் நாட்டிற்கோ, சமூகத்திற்கோ ஒரு நல்லதாவது செய்து விட வேண்டுமென சபதம் மேற்கொண்டார். அன்று மாலை காலார நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, சாலையோர மரத்தடியில் நோய்வாய்ப்பட்ட நொண்டி நாய் ஒன்று ஈனஸ்வரத்தில் முனகி கொண்டிருந்தது. நாயின் மீது கிருஷ்ணப்பிள்ளைக்கு பரிதாபம் பொங்கியது. அந்நாயினுடைய ஒருவேளை பசியையாவது போக்கி விட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், பக்கத்து கடையிலிருந்து ரொட்டித் துண்டுகள் வாங்கி நாயிற்கு போட்டார். நாய் சாப்பிடும் அழகினை பார்க்க, ஆயிரம் கண்கள் வேண்டுமென நினைத்துக் கொண்டார். கிருஷ்ணப்பிள்ளை தலை கால் புரியாத மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார். தனது மனிதாபிமான செய்கையை சாலையில் யாராவது கவனித்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் பார்க்காதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நாய் மட்டும் நன்றியோடு வாலாட்டியது. மனநிறைவோடு வீட்டை நோக்கி நடந்தார் கிருஷ்ணப்பிள்ளை. அவரை அந்த நாய் பின் தொடர்ந்தது. நாயும் பின் தொடர்வதை பார்த்து, 'சூ..' என்று விரட்டினார். கல் எடுத்து அடித்தும் பார்த்தார். நாய் எதற்கும் மசியாமல் வீடு வரை வந்து விட்டது. 'இந்த சனியன எங்க பிடிச்சிட்டு வந்தீங்க?' என்று சகதர்மணியிடம் சக்கையாக வாங்கி கட்டிக் கொண்டார். 'சொறி பிடிச்ச நாயால குழந்தைக்கு இன்ஃபெக்'ஷன் கின்ஃபெக்'ஷன் வந்துடப் போகுது. ஏதாவது பண்ணி அத முதல்ல துரத்தி விடுங்க' என்று கிருஷ்ணப்பிள்ளைக்கு அவரது மனைவி கட்டளையிட்டாள். ஏதேதோ செய்துப் பார்த்து நாயிடம் தோற்றார் கிருஷ்ணப்பிள்ளை. பிறகு, ஏதோ யோசனை வந்தவராக கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணினார். அவர்கள் வந்து நாயை கதற கதற வேனில் அடைத்து அழைத்து சென்றார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள், 'அந்த நாயை எப்படியும் கொன்னுடுவாங்க. பாவம்..அது சாகறதுக்கு நீங்க காரணம் ஆயிட்டீங்களே மாமா!' என்று வருத்தப்பட்டாள். கிருஷ்ணப்பிள்ளைக்கு தூக்கி வாரி போட்டது. சேவை புரிந்து புண்ணியம் தேட போய் பாவத்தில் வந்து முடிந்து விட்டதே என்று குழம்பினார். ஏணி வைத்தாலும் மதர் தெரசா அளவுக்கு உயர முடியாது என்று கிருஷ்ணப்பிள்ளைக்கு புரிந்தது.

1 கருத்து:

Vijay Amarnath Super Easy Drawing Course சொன்னது…

தினேஷ்”கிருஷ்ணப்பிள்ளை”காதாப்பாத்திரம் வழியாக கதை சொல்வது நன்றாகவுள்ளது....புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் உள்ள நகைச்சுவை உங்கள் எழத்தில் தெரிகிறது....நிறைய...நிறைய எழுதவும்..

அன்புடன்
விஜய் அமர்நாத்
www.vijayworks.blogspot.com