புதன், 5 டிசம்பர், 2007

ஒரு நாள்

மாலை நான்கு மணி...

"முரளி சார்... மேனஜர் கூப்பிடறார்."
பல மாதங்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வை பற்றியதாக தானிருக்கும் என்று மகிழ்ச்சியாக சென்றவரிடம், "கோவர்தன் ரெண்டு நாளா ஆபீஸ் வரல போலிருக்கு. அவரு பார்க்க வேண்டிய ஒரு ஃபைல நாளைக்கே மூவ் பண்ணியாகனும். மீனா கிட்ட ஃபைலிருக்கு. இன்னைக்கு நைட்டு அத முடிச்சிட்டு போங்க சார்" என்று சொல்லி முரளியின் முனறலுக்கு ஆளானார் மேனஜர்.
முரளி தனது இருக்கைக்கு வந்தவுடன், "சீதா... நான் தான் பேசுறேன். வீட்டுக்கு வர லேட்டாகும். நான் இங்கயே சாப்பிட்டுகிறேன். பரத் வன்ட்டானா?" என்று வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்டார்.

இரவு பத்து மணிக்கு தான் வீட்டிற்கு சென்றார் முரளி.
"எப்ப வந்தான்? தூங்குறானா!"
"அஞ்சரை மணிக்கு தான் வந்தான். ஏதோ அட்ரஸ் ப்ராப்ளமாம். பேங்க்குக்கு போயிட்டு வந்திருக்கான். நாளைக்கும் பாஸ் போர்ட் ஆபீசுக்கு போகனுமாம். குமார் வந்து படத்துக்கு கூட்டிட்டு போயிட்டான்."
"படத்துக்கா? இப்ப ரொம்ப முக்கியமா.... சரி, காலையில ஏழு மணிக்கு எல்லாம் போகனும்."
"நாளைக்கு கரன்ட் பில் கட்ட கடைசி நாளு."
காலையில் போகும் பொழுது தருகிறேன் என்று தூங்க சென்று விட்டார். காலையில் புறப்படுவதற்கு தயாராகி, பரத் அறையை கடக்கும் பொழுது எட்டிப் பார்த்தார்.
'இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கவலை இல்லாம தூங்க முடியும்!'

ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்த ஃபைலை சரி பார்க்க மதியம் இரண்டு ஆனது. அதன் பிறகு, தான் பார்க்க வேண்டிய வேலைகளில் ஈடுப்பட்டார் முரளி.
"என்ன மிஸ்டர் முரளி...நான் ரொம்ப முக்கியமா பார்க்கனும்னு சொல்லியும் நீங்க ஒரு ஃபைல தான் பார்த்திருக்கீங்க. இன்னொரு ஃபைல் அப்படியே இருக்கு. முடியலன்னா ஓபன்னா சொல்லலாம் இல்ல. இப்ப மணி நாலு ஆகுது. ஏழு மணிக்குள்ள வேலைய முடிங்க. நான் வெயிட் பண்றேன்."

மாலை ஐந்து மணி...

"பரத்தம்மா..அவரு அக்கா இன்னைக்கு வர்றாங்களாம். கொஞ்சம் மளிகை சாமான் எல்லாம் வாங்கனும். நீங்க ஃப்ரீயா இருந்தா போய் வாங்கிட்டு வர முடியுமா? நான் அவங்கள ரிசீவ் பண்ண போகனும். அதனால் தான்."

சீதா பக்கத்து வீட்டு பெண்மனிக்காக மளிகைக் கடைக்கு சென்று விட்டு வரும் பொழுது, பரத் வீட்டு வாசலிலயே உட்கார்ந்திருந்தான்.
"ஏன் இவ்வளவு லேட்?"
"பேங்க் பாஸ் புக்ல இருக்கிற அட்ரசும், ரேஷன் கார்ட்ல இருக்கிற அட்ரசும் ஒன்னா இருக்கனுமாம். பேங்க் பாஸ் புக்குல ஒரு எழுத்து விட்டு போச்சு. அதான் பேங்க்குக்கு போனேன். மேனஜர கேட்கனும், அது இதுன்னு இழுத்துட்டாங்க."

பரத்தை பார்க்க வந்த அவனது பள்ளி தோழன், "என்ன ஆன்ட்டி...பரத்த எங்கூட படத்துக்கு அனுப்ப மாட்டீங்களா?" என்று கேட்டான்.
"ஏம்ப்பா... என்ன வம்புக்கு இழுக்கிற? நான் எதுவும் அப்படி சொல்லல."

பரத் படம் பார்த்து விட்டு, இரவு பத்து நாற்பதுக்கு தான் வந்தான்.
"அம்மா...காலையில எட்டு மணிக்கெல்லாம் கிளம்பனும். அப்ப தான் க்யூவல இருந்து தப்பிக்கலாம்."

காலையில் முரளி அவசரத்தில் மின் கட்டனத்திற்கு பணம் கொடுக்காமல் சென்று விட்டார். பரத்தும் கிளம்பிய பின், சீதா பக்கத்து வீட்டிற்குச் சென்றாள்.
"வந்தனா அம்மா" என்றழைத்து விட்டு, "விருந்தாளி எல்லாம் போயாச்சா?" என்று கேட்டார்.
"போயிட்டாங்க. யார் வந்தாலும் ஒரு நைட்டு தான். அதுவும் வேற வேலைய வர்றப்ப சும்மா வந்துட்டு போவாங்க. காலம் அப்படி மாறிடுச்சு."
பொதுவாக பேசியிருந்து விட்டு, "இன்னிக்கு தான் கரன்ட் பில் கட்ட கடைசி நாளு. பரத் அப்பா பணம் தர மறந்துட்டார். நான் சாயந்திரம் திருப்பி தந்துடுறேன்" என்றாள் சீதா.
"இதுல என்ன இருக்கு? நீங்க மெதுவாவே தாங்க. நானும் பணம் கட்ட மறந்துட்டேன். அப்படியே எங்களதையும் சேர்த்து கட்டிடுறீங்களா?"

கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. வீட்டிற்கு வந்தால் எதிர் வீட்டு பாட்டிக்கு நெஞ்சு வலி, துணைக்கு யாரும் இல்லை என்று சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். பாட்டியின் மகள்கள் வந்தவுடன் வீடு திரும்ப சாயந்திரம் ஆகி விட்டது. சீதா வீட்டிற்கு வருவதற்கும் சிலிண்டர் வருவதற்கும் சரியாக இருந்தது.

"ஏம்ப்பா...நேத்து மதியம் போன் பண்ணதுக்கு இன்னிக்கு அஞ்சு மணிக்கு தான் வர்ற. சரி, அதை அப்படியே பக்கத்து வீட்ல கொண்டு போய் வச்சிடு."

மாலை ஆறு மணி...

"காலையில இருந்து க்யூவில நிக்கிறேன். ரொம்ப டயர்டா இருக்கு. படத்துக்கு வந்ததே பெரிய விஷயம். நீ தான் டிக்கெட் எடுக்கனும்" என்றான் பரத்.
"சரி, நான் க்யூவில நிக்கிறேன். கவலைய விடு" என்று சொல்லும் பொழுதே அவனது செல் போன் ஒலித்தது.
"ஒரு நிமிஷம் நில்லு. நான் தோ வந்துடுறேன்" என்று சொல்லி விட்டு, பரத் க்யூவில் நின்று டிக்கெட் வாங்கியதும் தான் வந்தான்.
"சாரிடா."

காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்ற எண்ணதிலேயே ரொம்ப நேரம் தூங்கி விட்டான். எழுந்தவுடன், "ஏன்மா எழுப்பல?" என்று கத்தினான்.
"பத்து மணிக்கு தான பாஸ்போட் ஆபீஸ் திறப்பாங்க. ஏன் இப்ப கத்துற?"
"இந்நேரம் க்யூ ஆரம்பம் ஆகியிருக்கும்" என்று முனறினான்.
"சரி, போயிடலாம் கவலப்படாத. இப்ப நீ பக்கத்து வீட்டுக்கு போய் சிலிண்டர் எடுத்துட்டு வா. நான் ஆன்ட்டிகிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்."
'முடியாது' என்று சொல்லலாம்னு தான் நினைத்தான். ஆனால் கால் இழுத்து சென்று விட்டது. வந்தனா தலை குனிந்த வாறே சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தாள். பரத் அவள் வீட்டு வாசலில் நின்று இருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். வந்தனா பரத்தை கடந்து சென்று, சைக்கிளில் ஏறும் முன் திரும்பிப் பார்த்தாள். பரத் தலைக் குனிந்து கொண்டான். வந்தனா சிரித்துக் கொண்டே சென்று விட்டாள்.

"வாப்பா... காலேஜ் எல்லாம் எப்படிப் போகுது?" என்று விசாரித்தார் வந்தனாவின் தந்தை. அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த வந்தனாவின் தம்பி திலீப் பரத்தை முறைத்துக் கொண்டிருந்தான். பரத்தை மேற்கோள் காட்டி தான் இருவரையும் திட்டுவார் வந்தனாவின் தந்தை.
"இந்த வருஷம் பப்ளிக் எக்சாம் எழுத போற. கொஞ்சம் அட்வைஸ் பண்ணு அவளுக்கு. சன்டேல நீ ஃபிரீயா இருந்தா மேக்ஸ் சொல்லி கொடு. நிறைய தப்பு பண்றா" என்பதற்கெல்லாம் வெறுமென தலையை மட்டும் ஆட்டினான்.

இந்த முறை பத்தாவது மதிப்பென் சான்றிதழலயும், ரேஷன் கார்ட்டிலும் பரத்தின் பெயரில் ஒரு எழுத்து மாறியிருப்பதாக சொல்லி தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அடுத்த க்யூ அவனுக்கு அங்கே காத்திருந்தது.

'மூனு நாள் லீவுக்கு அங்க காலேஜ்ல வேற போய் நிக்கனும்' என்று முனறிக் கொண்டே வீட்டிற்குச் சென்றால் வீடு பூட்டியிருந்தது.

"அம்மா கோயிலுக்கு போயிருக்காங்கப்பா. அதுவரைக்கும் வேணும்னா எங்க வீட்ல இரு. ஒரு கப் காஃபி சாப்பிட்டுட்டு, அப்படியே கேபிள் வரல என்னன்னு போய் கேட்டுட்டு வாயேன். உங்கம்மா வர்றதுக்கு ஏழு ஆகும்" என்று கையில் பரத் வீட்டு சாவியை வைத்துக் கொண்டே கேட்டாள் வந்தனாவின் அம்மா.

பரத் தன் வாட்ச்சில் மணி பார்த்தான். ஆறு தான் ஆகியிருந்தது.

கருத்துகள் இல்லை: