புதன், 19 டிசம்பர், 2007

எதிர்கரை

"அண்ணா தூங்கிட்டியா?"
கண்களும், நினைவுகளும் மெல்ல சுருங்கி புதிய உலகத்தின் வாசற்படியில் கால் வைக்கப் போகும் பொழுது, பட்டென்று கார்த்திக்கை அவன் தங்கையின் குரல் இழுத்து வந்து விட்டது. இதே போன்ற சூழ்நிலையில், பெற்றோர் எழுப்பியிருந்தால் கார்த்திக் முறைத்தவுடன் அங்கிருந்து நகர்ந்துக் கொள்வார்கள். ஆனால் தங்கையை முறைத்தால், தலை முடியை பிடித்துக் கொண்டு,'என்னடா முறைக்கிற!' என்று கொட்ட ஆரம்பித்து விடுவாள். கண்ணை கசக்கிக் கொண்டே, என்னவென்று தலையை ஆட்டி கேட்டான்.
"உங்கிட்ட ஒன்னு சொல்லனும்" என்று வாசற்படியை ஒட்டியபடி தலை குனிந்துக் கொண்டு நின்றாள்.
தலை குனிவை கண்டு கனவு காண்கிறோமோ என்ற சந்தேகம் கார்த்திக்கிற்கு வந்து விட்டது. இருந்தாலும் சற்று தைரியமாக, "ச்சீ..லூசு! போடி காலையில பேசிக்கலாம்" என்று படுத்துக் கொண்டான். இது கனவாக இருந்தால் உதை விழாது. அவள் உண்மையாகவே எழுப்பி, இவன் திட்டியிருந்தால், இந்நேரம் மேலே விழுந்து சண்டைப் போட்டிருப்பாள்.
'இவ்வளவு நேரம் அடிக்காம இருக்கிறத பார்த்தா, இது கனவு தான் போலிருக்கு' என்று ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தான். அவள் இன்னும் வாசலிலயே நின்றுக் கொண்டிருந்தாள். சட்டென்று எழுந்து அமர்ந்துக் கொண்டான். அவள் குனிந்த தலை நிமிரவே இல்லை. கார்த்திக் தொண்டையை சரி செய்து, தான் விழித்துக் கொண்டிருப்பதை அவளுக்கு உணர்த்தினான். மின் விசிறி ஓடும் சத்தத்தை தவிர, வேறு எதுவும் சில நிமிடங்களுக்கு அந்த அறையில் எதுவும் கேட்கவில்லை.
நிதானமாக அங்கு நிலவிய மெளனத்தை கிழித்து, "நான் உன் ப்ரென்ட் சரவணன லவ் பண்றேன்" என்றாள் மெல்லிய குரலில்.
அரை தூக்கத்தில் இருந்தவன், அவள் சொன்னதைக் கேட்டு தூக்கி வாரி போட்டது போல் முழுவதுமாக எழுந்தான்.
"சரவணனா? அவன் ரொம்ப நல்லவனாச்சே!"
இன்றைய தினத்தில் நல்லவன் என்று பெயர் எடுத்தவனை தான் கெட்டவன் போல் பார்ப்பார்கள்.
"எவ்வளவு நாளா?"
அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. எதிர்பார்த்தது தான். எதுவும் அவளாக தான் சொல்வாள். கேள்வி கேட்டால் அவளுக்கு பிடிக்காது.
சிறிது நேரம் யோசித்து விட்டு, "நான் போய் வேணும்னா சொல்லட்டுமா?" என்று கேட்டான்.
"அதெல்லாம் வேணாம். நானே பார்த்துக்கறேன். சும்மா உங்கிட்ட சொல்லனும்னு தோனுச்சு" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
'சொல்லனும்னா தோனுச்சா?' என்று அதிசயித்து படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கமே வரவில்லை. தன் தங்கையின் தைரியத்தைக் கண்டு வியந்தான். இவனும் தான் பின் வீட்டு சுபாவை காதலிக்கிறான். ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. தனக்கு தன் தங்கை பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டான். எப்படியும் அடுத்த நாள் காலையில் விடிந்தவுடன் சுபாவை பார்த்து சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தான். ஓரே வகுப்பில் தான் படிக்கிறாள். வகுப்பில் சொன்னால் ரம்யாவிற்கு தெரிந்து விடும். ரம்யாவிற்கு தெரிந்தால் சும்மா விட மாட்டாள். இதுவரை எதுவும் மறைத்ததில்லை. பள்ளியில் இருந்தே நிழல் போல் உடன் வரும் தோழி அல்லது தொல்லை. அப்படியே ஏதோ ஏதோ நினைத்துக் கொண்டே தூங்கி விட்டான்.

எப்படியோ காலையில் சீக்கிரம் எழுந்துக் கொண்டான். சுபாவிற்காக சுவர் அருகே காத்திருந்தான். அப்படியே நின்றுக் கொண்டே தூங்கினான்.
"என்ன... இன்னும் தூக்கம் கலையலையா?" என்று சுபா வந்து எழுப்பினாள். அசட்டுத்தனமாக சிரித்தான் கார்த்திக்.
"சரி...உங்கிட்ட ஒன்னு சொல்லனும்" என்றாள் சுபா.
'ஒருவேள நம்மள மாதிரி தானோ!' என்று அதிசயித்தான். பழன் நழுவி பாலில் விழ போகிறது என மகிழ்ந்தான்.
"நம்ம சரவணன் இல்ல..." என்று ஆரம்பித்தாள். இது ஒன்று போதாதா! கார்த்திக்கிற்கு சகலமும் புரிந்தது. யாரோ நெஞ்சை அழுத்துவது போலும், கண்கள் இருண்டது போலும் இருந்தது.
சுதாரித்து கொண்டு, "நீ அவன லவ் பண்ற... அதானே!" என்று கேட்டு சிரிக்க முயன்றான்.
"ஐயோ...! அதெல்லாம் இல்ல."
"சரி...நம்பிட்டேன்."
"அவன்கிட்ட ஒரு புக் கேட்கனும். நான் இதுவரைக்கும் பேசினதில்லை. அதான் நீ ஹெல்ப் பண்ணுவேன்னு கேட்டா...இப்படி பேசுறியே!"
"ஐ..அதான் உன் கதை காலேஜூக்கே தெரிஞ்சுடுச்சே!"
"ஐய்யய்யோ... நன் இன்னும் யாருகிட்டயும் சொல்லவே இல்லியே?"
"அப்ப உண்மன்னு ஒத்துக்கிற" என்று சிரித்தான்.
"இல்ல" என்று சிரித்து விட்டு, "ஏய்..ப்ளீஸ்ப்பா யாருகிட்டயும் சொல்லிடாத. முக்கியமா ரம்யா கிட்ட சொல்லிடதா" என்று வீட்டுக்குள் ஓடி விட்டாள்.

"என்னாச்சு ரொம்ப டல்லடிக்கிற?" என்று கேட்டாள் ரம்யா.
"எல்லாம் தப்பு தப்பா நடக்காம சரியா நடக்கிறதால...எல்லாம் தப்பா தெரியுது."
"ச்சே...இதுக்கா ஃபீல் பண்ற?"
"சரி, உனக்கும் ரேவதிக்கும் என்ன சண்டை?"
"உங்கிட்ட சொல்லல? நம்ம கிளாஸ் சரவணன ப்ரொப்போஸ் பண்ணி ஃபெயிலியர் ஆயிடுச்சு ரேவதிக்கு. ரொம்ப அழகின்னு நினைப்பு. "என்னாலயே முடியல...வேறு யாரால முடியும்?'னு கேட்டா. 'என்னால முடியும்டி'ன்னு சவால் விட்டிருக்கேன்."
இரவில் இருந்து ஒரே பெயரை மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருக்கிறான். இதெல்லாம் எங்க போய் முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். தன்னையும், சரவணனையும் ஒப்பிட்டு பார்த்தான்.
"ஏய்...ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்கிற?"
"பார்த்து. விளையாட்டு வினை ஆயிடப் போகுது."
"என்னால முடியாதுன்னு நினைக்கிறியா?" என்று கேட்டாள்.
"அப்படியில்ல. சொல்ல தெரியல. சரி, ஒருவேள க்ளிக் ஆயிடுச்சுன்னா....என்ன பண்ணுவ?"
"ரொம்ப நல்லதா போச்சு...அப்படியே செட்டில் ஆயிடுவேன்" என்று சிரித்தாள்.
ஒரே நாளில் கார்த்திக்கிற்கு தனி ஆள் ஆகி விட்டது போலிருந்தது. கைக்கு அருகில் இருந்தவர்கள் எல்லாம் இன்று சரவணனோடு உள்ளனர். தான் யாருக்கும் வேண்டாதவனாகி விட்டதாக எண்ணி வருந்தினான்.

ஒரு வாரம் யாரிடமும் பேசாமலும், குறிப்பாக அந்த மூவர் கண்ணில் படாமல் இருக்கவும் பெரிதும் முயன்றுக் கொண்டிருந்தான். திடீரென்று வழியில் வந்த சரவணன், கார்த்திக்கை தடுத்து நிறுத்தினான். கார்த்திக் விலக முயற்சித்தும் முடியவில்லை. நீண்ட நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர். கார்த்திக் வேண்டா வெறுப்பாக நின்றுக் கொண்டிருந்தான்.
"ஆனா...உன்ன பார்த்தா எனக்கு பொறாமையா இருக்குடா."
ஆச்சரியத்தில் மூழ்கிய கார்த்திக், "ஏன்?" என்று கேட்டான்.
"ரொம்ப ஜாலியான லைஃப்டா உன்து. சண்ட போடுறதுக்கு வீட்ல தங்கச்சி, எல்லாத்தையும் மனசு விட்டு ஷேர் பண்றதுக்கு ரம்யா மாதிரி ஒரு நல்ல ஃப்ரென்ட், எந்த டவுட்டா இருந்தாலும் க்ளியர் பண்றதுக்கு பின்னாடி வீட்ல சுபா இருக்கா. ஆனா என்னை பாரு. தனிமை. மனசு விட்டு பேசுறதுக்கு ஆள் இல்ல. யாருக்கும் என்னை பிடிக்க மாட்டேங்குது. நம்ம க்ளாஸ் ரேவதி கூட என்னை லவ் பண்றதா கிண்டல் செய்றா. உடனே மத்த கேர்ல்ஸ் எல்லாம் சிரிக்கிறாங்க. எனக்கு எதுவுமே பிடிக்க மாட்டேங்குது" என்று ஒரு மாதிரி வருந்துவது போல் பேசினான் சரவணன்.
கார்த்திக் கதி கலங்கி போனான்.
'என்ன இவனும் ஃபீல் பண்றான்!' என்று நினைத்த கார்த்திக்கிற்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
"சாரிடா...எங்கயோ போன உன்ன வேற நிறுத்திட்டேன்."
"ஏய்...என்ன இது? சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஃபீல் பண்றியோன்னு தோனுது" என்று சரவணின் தோள் மேல் கை போட்டு அழைத்து சென்றான் கார்த்திக்.

1 கருத்து:

பத்மா சொன்னது…

hmm ikkaraikku akkarai pachai. illaya?nice