வெள்ளி, 28 டிசம்பர், 2007

சிவனும் சிவனடியாரும்

சுந்தரமூர்த்தி அர்த்த சாம பூசையை முடித்து விட்டு, கருவறையினை மூடும் பொழுது சிவலிங்கம் ஆடுவது போலிருந்தது. தூக்க கலக்கத்தில் இருக்கும் பொழுது, எப்பொழுதும் அவர் கண்களுக்கு அப்படி தான் தெரியும்.
"சுந்தரமூர்த்தி!!"
'வீட்டுக்கு நேரமாகுது. இப்ப போய் ஏதோ ஏதோ தோனுது..' என்று பூட்டுவதை துரிதமாக்கினார்.
"உனக்கு த்ரேதா யுகத்தில் கொடுத்த வாக்கு படி, உனக்கு காட்சி கொடுக்க வந்திருக்கேன். அவசரமாக எங்கே செல்கிறாய் சுந்தரமூர்த்தி?"
சுந்தரமூர்த்தி சிறிது நேரம் கண்ணை கசக்கி கொண்டு சிவனே என்று பார்த்துக் கொண்டிருந்தார். கதவு வழியாக கங்கை நீர் வந்து சுந்தரமூர்த்தியின் காலை நனைத்தது. எல்லாம் உண்மை தானோ என்று பதறி கதவை வேகமாக திறந்து சாஷ்டாங்கமாக சிவனாரின் காலில் விழுந்தார் சுந்தரமூர்த்தி.
பயபக்தியுடன் எழுந்து," அனைவரும் நல்லா இருக்காங்களா?" என்று விசாரித்தார் சுந்தரமூர்த்தி.
"அனைவரும் என்றால்?" என்று கேட்டு சிரித்தார் பெருமான்.
சிறிது நேரம் யோசித்து விட்டு, "தாங்கள், லோக மாதாவான அம்பாள், சிவக்குமாரர்கள், சிவ கணங்கள்" என்று இழுத்தார்.
"அனைவரும் நலம். உன் நலம் எப்படி?"
"ஈசுவரனான தங்கள் புண்ணியத்தில் நாங்கள் அனைவரும் நலம். ஆனால்..."என்று தொடராமல் நிறுத்தி விட்டார் சுந்தரமூர்த்தி.
"ஆனால்?"
"எப்பொழுதையும் விட தற்போது மக்களின் துன்பம் அதிகரித்து விட்டது. தாங்கள் மனம் வைத்தால் அவையனைத்தையும் தீர்த்து விடலாம்."
"ஆனால் அவையெல்லாம் அவர்களின் சென்ற பிறவி வினையின் தொடர்ச்சி. நான் குறுக்கிட முடியாது.உனக்கு ஏதாவது வேண்டும் என்றால் கேள்."
"தாங்களும் சாதாரண மனிதர் போல் பேசலாமா?"
"அது..சொன்னால் உனக்கு புரியாதே! நீ என் இடத்திற்கு வந்து பார்த்தால் தான் என் நிலைமை உனக்கு புரியும். வேண்டுமானால் இன்று நீயும் என்னுடன் சிவலோகம் வா. இல்லையென்றால் நீயும் நாத்திகனாகி விடப் போகிறாய்."
"எனது வீட்டில் தேடுவார்களே!"
சிவனார் சிறிது நேரம் யோசித்து விட்டு, "சரி, நான் உன் வீட்டிற்கு செல்கிறேன். நீ சிவலோகம் செல். விடியும் முன் நாம் இருவரும் மீண்டும் மாறி விடலாம்" என்றார்.

சிவன் வேடத்தில் சுந்தரமூர்த்தி சிவலோகத்திற்கு சென்றார். சிவலோகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அறுபதாயிரம் வருடங்களுக்கு பிறகு பிறக்கப் போகிறவர்களுக்கு தலை எழுத்தினை எழுதிக் கொண்டிருந்தனர். நான்கு முகம் கொண்ட பிரம்மா எழுத்து பணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். சிவனைப் பார்த்தவுடன் மரியாதை நிமித்தமாக எழுந்து புன்னகை புரிந்தார். சுந்தரமூர்த்தியும் பதிலுக்கு சிரித்து வைத்தார். சுந்தரமூர்த்தி பக்கமாக நாராயணன் வேகமாக வந்தார்.
"நீங்கள் வரம் கொடுத்த அசுரனை நான் பதினேழாவது அவதாரத்தில் சிவ பக்தனாக வந்து அழிக்கனும் என அனைவரும் பிரியப்படுகின்றனர். தங்களிடம் நான்முகன் இது பற்றி பேசினாரா?"
"பூலோகத்தில் தற்போது நிறைய பிரச்சனை நிலவுகிறதே!" என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் சுந்தரமூர்த்தி.
"ஆமாம்..நான் கல்கி அவதாரம் எடுக்கும் சமயம் வந்து விட்டது போலிருக்கு."
"ஆனால் அசுரர்கள் என்று யாரும் இல்லையே! தாங்கள் அவதரித்து என்ன செய்வீர்கள்?" என்று தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தினை கேட்டார் சுந்தரமூர்த்தி.
"தங்களின் சாபம் காரணமாக சிவ கணம் ஒன்று பூலோகத்தில் பிறக்கப் போகிறதே! அப்படி தானே நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாம் கலந்தாலோசித்து எழுதினோம். அந்த அசுரனின் அட்டூழியம் எல்லை மீறும் பொழுது நாம் அவனை அழித்து உலகினை காப்போம்."
'அடப்பாவமே! இனிமே ஒரு அசுரன் வேறு பிறந்து அட்டூழியம் பண்ணுவானா?'

சிவன் சுந்தரமூர்த்தியாக மனித உருவெடுத்து வீட்டிற்குள் நுழைந்தார். வீட்டில் ஒரு நிசப்தம் நிலவியது. எப்பொழுதும் சத்தமாக இருக்கும் வீடு அமைதியாக இருந்தால், சின்னவன் ஏதாவது தவறு புரிந்திருப்பான் என்பது அந்த வீட்டின் எழுதப்படாத விதி. அதற்கு தகுந்தாற்போல், சின்னவன் காலில் இரத்த கறையுடன் கட்டு இருந்தது.
"என்னடா இது?" என்று சுந்தரமூர்த்தியாய் முழுவதும் மாறின சிவனார் அதட்டலான குரலில் கேட்டார்.
"விளையாடுறப்ப அடிப் பட்டுடிச்சு."
"படிக்காம ஏன் விளையாட போன?"
"விளையாடிட்டு வந்து படிச்சா நல்லதுன்னு மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லுது. அப்ப தான் மூளை சுறுசுறுப்பா இருக்குமாம். மண்ணுல விளையாடுற பசங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகுதாம்."
"தப்பு செஞ்சுட்டு அதுக்கு வியாக்கியானம் வேறு தர்றியா?" என்று நெற்றிக் கண் திறக்காத குறையாக கேட்டார்.
"நான் சொல்றதுல இருக்கிற தாத்பரியத்த புரிஞ்சிக்கோங்க. கருவறைக்குள்ள சிவனை பார்த்தால் சிவன், கல்லை பார்த்தால் கல். அந்த மாதிரி நீங்க கொஞ்சம் என் நிலையில் இருந்து யோசியுங்க."
'என்ன ராசியோ தெரியல...எனக்கு சின்ன பையனா யார் வந்தாலும், புத்தி சொல்றதிலியே குறியா இருக்காங்க.'

2 கருத்துகள்:

பத்மா சொன்னது…

konjam incompletaa irukka maari irukku.mudivu konjam parungalen!!

Unknown சொன்னது…

நல்ல இருக்கு. இன்னும் தொடர்ந்திருக்கலாமே ?