சனி, 24 நவம்பர், 2007

ஊடுருவு சக்தி-3

"ஒரு சந்தோஷமான செய்தி சொல்லனும்" என்றான் ஹரிதர்.

"உங்கிட்ட ஒன்னு கேட்கனும்" என்றாள் காளிகா.

"சொல்லட்டுமா, கேட்கிறியா?"

"சரி, சொல்லு."

"தலைமைக் குழுவுல இருக்கிற டாக்டர் லாராவுக்கும், மான்ட்லோவுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு. அப்ப மான்ட்லோவ லாரா கொன்னுட்டாங்க."

"யார் சொன்னா?"

"மை ஸ்வீட் ப்ரென்ட் ஜேனட்."

"ஸ்வீட் ப்ரென்டா? சரி, உன் முழுப் பெயர் லெவின் ஹரிதரா?"

"அதுக்கென்ன இப்ப?"

"செலின் 21க்கு ஒரு குழு அனுப்ப போறாங்களாம். உன்னையும் வரச் சொல்லி தலைமைக் குழுவிலிருந்து கூப்பிட்டிருக்காங்க" என்றாள் காளிகா.

"நான் போல."

"ஏன் நீ போல! வின் க்ரூஸ் புக்குல கூட நீ வரத் தெரியுமா? 'எல்லாரும் என்னை அறிவாளின்னு சொல்றாங்க. ஆனா எங்கிட்ட அறிவாளி யாருன்னு கேட்டா , நான் லெவினை தான் சொல்லுவேன்'னு உன்னை புகழ்ந்து எழுதியிருக்காரு. நீ தான் அந்த குழுவுல இடம் பெற சரியான ஆளு. நான் நீ வருவேன்னு ரிப்ளை பண்ணிட்டேன்."

"ஏன் என்னை கேட்காம இப்படி பண்ண? தலைமைக் குழுவுல இருக்கிறவங்களுக்கு என்னத் தெரியும்? எனக்கும் மான்ட்லோவுக்கும் பிரச்சனை இல்லன்னா, நான் கண்டிப்பா வெளிப்படையான ஆதரவு கொடுத்திருப்பேன். மான்ட்லோவோட குணம் மட்டும் தான் கெட்டுப் போச்சு. ஆனா கடைசி வரைக்கும் தெளிவா யோசிச்ச அறிவாளி அவன்.

இந்த பூமியில இப்ப என்ன குறைச்சல்? தண்ணின்னு ஒன்னு இருந்துச்சு...இப்ப இல்ல. இதே மாதிரி 'செலின் 21'ன்லயும் தண்ணி இல்லாம போகும். திரும்பி எங்கயாச்சும் ஓடுனும். எவ்வளவோ கஷ்டத்த அனுபவிச்ச மனுஷனுக்கு வராத யோசனை, ஒரு கஷ்டமும் தெரியாத தலைமைக் குழுவுக்கு வந்தது ரொம்ப கொடுமை. நான் சொல்றேன்..நாளைக்கே பூமியில மழை பெய்யும். நீங்க எல்லாரும் போங்க. நான் மட்டும் இருக்கேன்" என்று கோபமாக வெளியேறி விட்டான். கடல், பூங்கா, அருவி, குளம், ஆறு, கோயில் என தனிமையான இடம் எதுவுமே இல்லாததால் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துக் கொண்டு தனியாக நிலவிற்கு சென்றான்.
"என்ன ஜேனட் துரத்திட்டாளா?"

"இல்ல.. ஆக்சிஜன் தீர்ந்துடுச்சு" என்று காலி சிலிண்டரை தூக்கிப் போட்டான்.

"எப்ப போற?"

"ஆய்வுக் குழு எப்பக் கூப்பிட்டாலும்."

"நான் எப்ப ஜேனட்கிட்ட போறேன்னு கேட்டேன்."

"நான் ஏன் அங்கெல்லாம் போறேன்? உனக்காக செலின் 21ல ஒரு அழகான இடம் பார்த்துட்டு வர்றேன்" என்று கண்ணடித்தான்.

"என்னை அனுப்பிட்டு நீ மட்டும் இங்க தனியா இருக்க போறியா?" என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள் காளிகா.

"நான் அப்படி சொல்லலியே! எங்க இருக்கலாம்னு நீ முடிவு பண்ணு. உங்கூட நான் இருக்கிறத முடிவு பண்ணிட்டேன்" என்று சிரித்துக் கொண்டே காளிகாவின் கையை பிடித்துக் கொண்டான் ஹரிதர்.

"சரி, ரொம்ப வழியாத. செலின் 21க்கு அனுப்புற ஆய்வுக் குழுவ கேன்சல் பண்ணிட்டாங்களாம். ஏன்னு சொல்லு?"

'தெரியாது' என தோள் குலுக்கினான் ஹரிதர்.

"பசிஃபிக் பள்ளத்தாக்குல இன்னும் நிக்காம மழைப் பெய்யுதாம். உலகம் முழுக்க மழை வருவதற்கு சான்ஸ் இருக்காம். நேத்து நீ கோபத்துல சொன்னது அப்படியே நடக்குது. ஒரு சின்ன மாறுதல். நீ மட்டும் உலகத்துல தனியா இருக்க மாட்ட. நாங்க எல்லாரும் இருப்போம்."

"ஏய், சும்மா...விளையாடத."

"நிஜமாப்பா!" என்று சொல்லி விட்டு, "சரி, இந்த சந்தோஷத்த கொண்டாட நாம மனிதர்கள் மாதிரி கல்யானம் பண்ணிக்கலாமா?" என்று கேட்டு ஹரிதரை கட்டி பிடித்துக் கொண்டாள்.

கருத்துகள் இல்லை: