வெள்ளி, 30 நவம்பர், 2007

வலது கை

"நீ வேலைக்குப் போய் தான் ஆக வேண்டுமா?" என்று கையை தொட்டு பார்த்து கேட்டான்.
"வேறு என்ன செய்வது?"
"ஏன் நேற்றே நீ ஓய்வு சொல்லவில்லை?"
"சொன்னேன். ஆனால் மறுத்து விட்டார்கள்."
"சரி. நான் சொல்கிறேன் நீ போக வேண்டாம்."
"இன்று அரசவையில் முக்கிய அரசியல் சந்திப்பு நிகழ்கிறது. நான் போகாமல் எப்படி வேலை நடக்கும்? நான் அரசரின் வலது கை ஆயிற்றே!"
மிகவும் யோசித்து விட்டு, "உனக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது. நீ சோர்ந்து போய் விழுந்து விடுவாய். உன் வேடத்தில் நான் வேண்டுமானால் போகிறேன்" என்றான்.
"என் வேடத்திலா.....!!"
"ஏன் சிரிக்கிறாய்?"
"மாட்டினால் முதுகு தோலை உரித்து விடுவார்கள்."
"அதையும் பார்த்து விட்டால் போச்சு" என்றான் கம்பீரமாக.

பல நாட்களாக போர் மேகம் சூழ்ந்திருந்த நிலையில், பக்கத்து நாட்டு அரசன் சமாதானத்திற்கு தூது அனுப்பியிருந்தான். தூதுவரை இரத்தின கம்பளம் விரித்து, இராஜ மரியாதையுடன் உபசரித்தார்கள். அரசவையில் தூதுவருக்கு ப்ரத்யேகமாக சிறப்பு ஆசனம் அமைத்தனர்.
"எங்கள் அவை புலவர் தங்களை சிறப்பித்து இயற்றிய அருட்சுவை பாக்கள்" என்று ஓலையை பவ்யமாக குனிந்தவாறே அரியனை ஏறி மன்னரிடம் நீட்டினான் தூதுவன். மன்னர் முகமலர்ச்சியோடு ஓலையை வாங்கி கண்ணை மூடி நெற்றியில் ஒற்றும் பொழுது, தூதுவன் இடையில் வைத்திருந்த குறுவாளை எடுத்தான். மன்னர் கண் திறக்கும் பொழுது, அரியனையிலிருந்து கீழே விழுந்திருந்த தூதுவனின் நெற்றி பிளவுப்பட்டு இரத்தம் வழிந்தது. அவன் கையில் குறுவாளும், தரையில் சாமரமும் இருந்தது. சாமரத்தின் கனமான பிடி தூதுவனின் நெற்றியைத் தாக்கியிருந்தது.
கீழே விழுந்த தூதுவன், மீண்டும் வெறி கொண்டது போல எழுந்து குறுவாளை வீச எத்தனிக்கும் பொழுது அவனது கையில் சிறு கத்தி ஒன்று ஆழமாக பாய்ந்தது. அதற்குள் வீரர்கள் தூதுவனை சூழ்ந்துக் கொண்டனர்.
"ஆட்டின் வேடத்தில் நரி, மானின் வேடத்தில் புலி" என்று சிரித்து விட்டு, "யார் நீ?" என்று வலப் பக்கம் திரும்பி சாமரம் வீசும் பெண்ணைப் பார்த்துக் கேட்டார் மன்னர். அவள் தான் சாமரத்தாலும், கத்தியாலும் தூதுவனைத் தாக்கியவள்.
தரையை நோக்கியவாறே, "மன்னிக்க வேண்டும் மன்னா.... நான் நமது நாட்டு படையில் சேவகம் புரியும் ஒரு காலாட் படை வீரன். என் மனைவிக்கு உடல் சுகமில்லாததால் நான் அவள் வேடமணிந்து வந்தேன்" என்று சாமரம் வீசும் பெண் வேடத்தில் இருந்தவன் சொன்னான்.
"மனைவி மேல் அவ்வளவு பிரியமா?" என்று மன்னர் கை தட்டி சிரித்து விட்டு, "என் உயிரை நீ காப்பாற்றியதால், உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள்" என்றார்.
"மன்னியுங்கள் மன்னா...நான் என் கடமையை தான் செய்தேன்" என்றான் குனிந்த தலை நிமிராமல்.
"அப்படியா! சரி, கடமையை சரியாக செய்ததற்கு பரிசு தர விரும்பிகிறேன். உனக்கு வேண்டியதைக் கேள்."
"எனக்கு எதுவும் வேண்டாம் மன்னா. பரம்பரைத் தொழில் என்று என் மனைவிக்கு பழக்கமில்லாத சாமரம் வீசும் வேலையை அரண்மனை மேற்பார்வையாளர் அளித்து விட்டார். பலவீனமான கையுடைய அவள், இந்த வேலையால் மிக சிரமப்படுகிறாள். அதனால் அவளை வேறு வேலையில் மாற்றினால்...." என்று இழுத்தி நிறுத்தி விட்டான்.
மன்னர் சிரித்து விட்டு, "சரி உடல் சரியானவுடன் உன் மனைவியை, இராணியை வந்து பார்க்கச் சொல். இன்று முதல் நீ குதிரைப் படை வீரன். எந்த நேரத்திலும் என்னைப் பார்த்து தயங்காமல் எது வேண்டுமானாலும் கேட்கலாம்" என்று தனது வலது கையால் அவன் தோளை ஊக்குவிப்பது போல் தட்டினார்.
"எதற்கும் நீ முதலில் சென்று இந்த வேடத்தை கலைத்து விட்டு வா. என் மனைவியின் ஒற்றர்கள் தவறான செய்தி அளித்து விட போகின்றனர்."


Blogged with Flock

மிர்சி

டாண்ட்டன் மிக சோர்ந்துப் போய் அமர்ந்திருந்தான். மனைவியும், குழந்தையும் விபத்தில் இறந்ததிலிருந்து உயிர் வாழ்வதிலியே விருப்பமின்றி அலைந்தான். இருந்த வேலையையும் தூக்கி எறிந்து விட்டு வந்து விட்டான். இனி அடுத்து என்னவென்று யோசித்த பொழுது தான் 'க்ரீன் ப்ளனட்(Green Planet)' கம்பெனி பற்றி ஞாபகம் வந்தது. எதற்கும் முயன்று பார்ப்போம்  என்று நம்பிக்கை இல்லாமல் தான் போனான். இவனை உட்கார வைத்து விட்டு அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்தனர்.

"உங்க பெயர் டாண்ட்டன். வயது 38. பதினாறு வருஷம் ஏர் ஃபோர்சுல வேலைப் பார்த்திருக்கீங்க. அங்க வேலை செஞ்ச டாக்டரையே காதலிச்சு கல்யானம் பண்ணிக்கிட்டீங்க. சமீபமா அவங்களும், உங்க குழந்தையும் ஆக்சிடென்ட்டுல இறந்துட்டாங்க. மனசு ஓடிஞ்சு போய் வேலைய விட்டுட்டீங்க. சாரி, இந்த இன்ஃபர்மேஷனெல்லாம் கலெக்ட் பண்றதுக்கு கொஞ்சம் டைம் அயிடிச்சு. உள்ள போய் சார நீங்க பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட்."

ஒரு வழியாக பல சுற்றுகளுக்கு பின், டாண்ட்டனுக்கு அந்த வேலை கிடைத்து விட்டது.  இருபது மாத பயிற்சிகளுக்குப் பிறகு, விண்கூடத்தை தனியாக இயக்குமளவு தேர்ந்திருந்தான் டாண்ட்டன். ஒருமுறை சென்று பூமி திரும்ப, எட்டு வருடங்கள் ஆகும். அந்த ஒரு காரணத்திற்காகவே அந்த வேலையில் விரும்பி சேர்ந்தான்.

உலகில் மக்கள் தொகை அதிகளவு பெருகியதால், கூடவே குப்பைகளும் கழிவுகளும் சேர்ந்து பெருகியது. அதை எப்படி எதிர் கொள்வதென புரியாமல் உலக நாடுகள் தவித்த பொழுது, க்ரீன் டர்னர் எனும் தொழிலதிபர் தனது க்ரீன் ப்ளனட் கம்பெனி மூலம் தீர்வு ஒன்றினை முன் வைத்தார். அவரது அறிக்கையின் படி, அனைத்து நாட்டு கழிவுகளையும் ஒரு தீவில் ஒன்றாக சேகரித்து அதை விண்வெளிக்கு கொண்டு சென்று ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில்(Orbit) விட்டு விடுவது. கழிவுகள் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும். சூரிய குடும்பத்தின் எல்லையில் இருக்கும் ப்ளூட்டோவின் சுற்றுப் பாதை சரியாக இருக்குமெனவும் குறிப்பிட்டிருந்தார். வில்டன் என்ற விஞ்ஞானியை தவிர அனைவரும் டர்னருக்கு பச்சைக் கொடி காட்டினர்.

"சரி, க்ரீன் ப்ளனட்ட மூடிட்டா இந்த பிரச்சனையை எப்படி சரி பண்றது?" என்று நிருபர் கேட்டதற்கு, "எல்லாவற்றையும் நிறுத்துட்டு மீண்டும் பழைய படி ஏர் கலப்பையை தூக்க வேன்டியது தான்" என்றார் வில்டன்.   உலகம் சிரித்து விட்டு க்ரீன் டர்னரை ஊக்குவித்தது. இதுவரை பத்து வருடங்களில் ஏழு விண்கூடம் கழிவுகளோடு சென்றுள்ளது. அதில் இரண்டு திரும்பியும் விட்டது. அனைத்து விண் கூடம் கிளம்பும் முன்னும், வில்டன் அதில் செல்லவிருக்கும் நபரை தனியாக சந்தித்து பேசுவார். ஆனால் அவர் முயற்சிகள் அனைத்தும் தோல்வி தான் அடைந்தது. டாண்ட்டனிடமும் பேசி தோல்வி தான் சந்தித்தார்.

தனிமை விரும்பிய டாண்ட்டனுக்கு, எட்டு வருடங்கள் உலகை விட்டு பிரிவது ஆறுதலாக இருந்தது. கோடிக்கனக்கான எடையுள்ள இரசாயன மற்றும் மின் கழிவுகளோடு தனியாக புறப்பட்டான்.

மூன்றாம் வருட பயணத்தின் பொழுது, விண் கூடத்தில் ஏதோ மோதியது போலிருந்தது. மிக கவனமாக என்னவென்று ஆராய்ந்த பொழுது, இராட்ஷச சிறகுகள் கொண்ட பறவை போன்ற உருவம் தெரிந்தது. இது முதலில் மன பிரமையோ என்று நினைத்தான். மீண்டும் நான்கு வாரங்களுக்கு பிறகு அதே போல் ஒரு உருவம் மோதியது. சில தினங்களுக்குப் பிறகு, ஒரு சிறிய விமானம் போன்ற வாகனம் அவனது விண் கூடத்தை கடந்து வேகமாக சென்றது. சிறிது நேரம் யோசித்து விட்டு, விண் கூடத்தை தானியங்கி முறையில்(automatic mode)  வைத்து விட்டு விண் படகில்(space boat) அந்த வாகனத்தைத் தொடர்ந்தான். அந்த வாகனம் சிறு கிரகம்(asteroid) ஒன்றில் தரை இறங்கியது. அதில் சென்ற உருவம், அந்த கிரகத்தில் இறந்து கிடந்த இன்னொரு உருவத்தை நோக்கி சென்றது. பின்னாலேயே சென்ற டாண்ட்டன் அந்த இரு உருவங்களையும் பார்த்து அதிசயித்தான். மனிதனுக்கும், மிருகத்துக்கும் இடைப்பட்ட உருவத்தை பெற்றிருந்தனர். கீழே படுத்திருந்த உருவம் தனது மகள் மிர்சியை போல தோற்றமளித்தது. ஒரு இறந்த இராட்ஷச பறவை வானில் இருந்து வீழ்ந்தது. அதன் வாயில் உடைந்த இயந்திரத்தின் பொருள் போல் ஏதோ இருந்தது. பூமியில் இருந்த வந்த கழிவுகளில் ஒன்றாய் இருக்கலாம். இன்னும் பல வாகனங்கள் அக்கிரகத்திற்கு வருவது போலிருந்தது. பயத்தில் வின் கூடத்திற்கு வேகமாக சென்றான்.

'இது பிரமையா! இல்ல உண்மையா? தனியா மூனு வருஷமா இருக்கிறதால மூளை குழம்பி விட்டதா? ஒருவேள வில்டன் சொன்னதெல்லாம் சரி தானா!? இல்ல அவரு சொன்னதையே நினைச்சுக்கிட்டு இருந்ததால் எனக்கு இப்படி தோனுதோ?' என பலவாறு பார்த்ததை நம்பாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

"இந்த பிரபஞ்சத்துல எல்லா பொருளும் ஒரு ஒழுங்கோட இயங்கிகிட்டிருக்கு. அதுல போய் நாம தலையிட்டா ஏதாவது பிரச்சனை வரும். அந்த பிரச்சனையால பூமிக்கு எந்த நஷ்டமும் இல்ல. பூமிய தவிர வேற எங்கயும் உயிர் இல்லன்னு சொல்றாங்க...ஆனா நிருபிக்கல. நிருபிக்காத பட்சத்துல இது தப்பான செயலா எனக்குப் படுது" என்று காட்டுவாசி போல இயற்கை உடை அணிந்திருந்த வில்டன் சொன்னது எல்லாம் டாண்ட்டனுக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.

எட்டு வருடங்களுக்கு பின் வர வேண்டிய செய்தி, டாண்ட்டனிடமிருந்து ஆறாம் வருட முடிவிலேயே வந்தது. விண் கூடம் செயல் இழந்து விட்டதாகவும், கட்டுப்பாடுன்றி பூமியை நோக்கி வேகமாக வருவதாகவும் செய்தி அனுப்பி இருந்தான் டாண்ட்டன். அதன் பாதையை மாற்றி வேறு எங்காவது செலுத்துமாறு டாண்ட்டனுக்கு வந்த அறிவிப்பிற்கு, தன்னால் முடியவில்லை என்று பதிலளித்தான். உடனடியாக மீட்புக் குழு ஒன்றினை பூமியில் இருந்து அனுப்பி வைத்தனர். கட்டுப்பாடு இழந்த விண் கூடத்தினுள் நுழைய மீட்புக் குழுவால் முடியவில்லை. எல்லாவற்றையும் எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்த க்ரீன் டர்னர், மீட்புக் குழு கை விட்டவுடன் இராணுவத்தை அனுகி வழியிலேயே அதை தாக்க ஏற்பாடு செய்தார். இராணுவத்தின் அலட்சியத்தால் விண்கூடம் மிக வேகமாக பூமியை நோக்கி சென்று கொண்டிருந்தது. விண் கூடம் பூமியின் எந்த இடத்திலும் விழலாம் என்று பரபரப்பு நிலவியது.

"கடல்ல விண் கூடத்த மூழ்கடிக்க முடியுமா?" என்று பூமியில் இருந்து கேட்டனர்.

"எனக்கு என்னமோ தீவ நோக்கி தான் விண் கூடம் வர மாதிரி இருக்கு. உடனடியாக தீவ காலி பண்ணுங்க. நான் முடிந்த வரை அதை கடலில் மூழ்கடிக்க முயலுகிறேன்" என்று அறிவித்தான் டாண்ட்டன்.

"சரி முடியலைன்னா....நீங்களாவது தப்பியுங்க."

க்ரீன் டர்னர் மிக சோர்ந்துப் போய் அமர்ந்திருந்தார். பல பில்லியன் செலவு செய்து உருவாக்கிய தங்க முட்டை இடும் தீவு அழிவதை மிகுந்த வருத்தத்துடன் பார்த்தார் க்ரீன் டர்னர். மீட்புக் குழு மற்றும் இராணுவத்தை சாமர்த்தியமாக ஏமாற்றிய டாண்ட்டன், இனி பிரபஞ்சத்துல யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என மகிழ்ச்சியாக கழிவுகளோடு சேர்ந்து தீவில் எரிந்தான்.

Blogged with Flock

ஞாயிறு, 25 நவம்பர், 2007

எதிர்பார்ப்பு

தினமும் யாராவது ஒருவர் சேர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். நேற்று இரவு கூட ஒருவர் வந்து சேர்ந்ததாக பூபதி  கேள்விப்பட்டார். காலை தேநீரை அருந்தி விட்டு போய் விசாரிக்கலாம் என்று அறையின் எண்ணை தெரிந்துக் கொண்டார். அறுபதை தொட்ட சில நாட்களிலேயே இதயத்தில் அடைப்பு ஏற்பட்டது. உயிர் பிழைத்ததே பெரும் அதிசயம் என மருத்துவர்கள் வியந்தனர்.மீண்டும் பிறந்தது போல் இருந்தது பூபதிக்கு. சுற்றி இருந்த மனிதர்கள் எல்லாம் புதிதாக தெரிந்தனர். இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்க பழகிக் கொண்டார். எல்லோரையும் புரிந்து கொள்ள, அவர்களது நிலைமையில் இருந்து யோசிக்கலானார். அவர் தங்கியுள்ள முதியோர் இல்லத்தில், அவரை தெரியாதவர்களே இல்லை.

 பாரதியார் பாடல் ஒன்றினை முனுமுனுத்தபடி, புதிதாக வந்திருப்பவரின் அறை கதவைத் தட்டினர் பூபதி.

"நிர்மலா தான நீங்க?"

"ஆமாம்...நீங்க!"

லட்சுமியை பெண் பார்க்க சென்று விட்டு, நிச்சயதார்த்த தேதியும் குறித்து விட்டு வெளியில்  வரும் பொழுது தான் நிர்மலாவை பார்த்தான் பூபதி. லட்சுமியை விட நிர்மலா அழகாக தெரிந்தாள். பலமுறை லட்சுமியுடன் வாக்குவாதம் ஏற்படும் பொழுது, 'உன்ன பார்க்கறதுக்கு முன்னாடி அந்த நிர்மலாவ பார்க்காம  போயிட்டேன்' என்று கத்தியிருக்கிறான் பூபதி. லட்சுமியும் இறந்து, ஒரே மகளான ப்ரியாவும் நிரந்திர குடியுரிமை வாங்கி   வெளிநாட்டிலியே தங்கி விட்டாள். நான்கைந்து முதியோர் இல்லங்களில் சிறந்தது  எதுவென  அலசி ஆராய்ந்து, பூபதியாகவே சேர்ந்துக் கொண்டார். வாழ்க்கையில் அனைத்து கட்டங்களையும் கடந்து, நிரந்திர ஓய்வுக்கான நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று நிர்மலாவை பார்த்ததும், மனம் அனைத்தையும் வேகமாக பின் தள்ளி  அவளைப் பார்த்த  முதல் தினத்திற்கு சென்று நின்றது. உடலும், மனசும் லேசானது போலிருந்தது. முதல் முறை நிர்மலாவை கண்டப் பொழுது ஏற்பட்ட சிலிர்ப்பு ஏற்பட்டது. கண்ணாடியில் தன் உருவத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டார். சொல்ல முடியாத ஏதோ ஒன்று அவருள் நிகழ்ந்ததை உணர்ந்தார் பூபதி.
இருவருக்கும் இடையில் உருவான  அழகான நட்பை, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல நல்லதொரு நாளை எதிர்பர்த்திருந்தார்.

"நீங்களாவது பரவாயில்ல...பொண்ண பெத்தவரு. எனக்கு ரெண்டு பசங்க, ஆனா இன்னிக்கு என் நிலமைய பாருங்க. நான் சாவதற்கு முன்னயே அவங்க அழிஞ்சுடுவாங்க பாருங்க" என்றாள் நிர்மலா.

முதியோர் இல்லத்தில் சேர்ந்த பிறகு எத்தனையோ பெற்றோர்களின் புலம்பலை கேட்டிருக்கார் பூபதி. அனைவரின் பேச்சிலும் துக்கம் இருக்குமே தவிர கோபம் இருக்காது. எப்படியும் முடிவில், 'அவங்களாவது நல்லா இருந்தா..சரி தான் சார்' என்று சமாதானம் அடைந்து விடுவர். ஆனால் நிர்மலாவை போல், பெற்ற பிள்ளைகளின் மேல் வெறுப்பை காட்டியதில்லை.

'இவ இவ்ளோ தானா !!'

நாகரீக வளர்ச்சியில் மனிதன் வாழும் வீடுகள் எல்லாம் எலி பொந்துகளாக சுருங்கி விட்டன. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முயன்றே குடும்ப பாரத்தை சுமக்க முடியாமல் தவிக்கின்றனர். பணத்துக்கான தேடலில் உறவுகள் கண்ணுக்கு தெரிவதில்லை. கண்களுக்கு தெரியாத பொழுது அருகில் இருந்தால் என்ன, தொலைவில் இருந்தால் என்ன என்று தோன்றியது பூபதிக்கு. அந்த கால சந்நியாச தர்மம் போல முதியோர் இல்லமும் ஒரு தர்மமாகவே தோன்றியது.

இன்றைய இளைஞர்கள், இருபதுகளிலேயே மனதளவில் பலவீனம் ஆகின்றனர். அவர்களை குறை கூறுவதில் பூபதிக்கு விருப்பம் இல்லை. அன்பு காட்ட வேண்டிய வயதில், 'இப்ப படிச்சா தான் பின்னால் நல்லாயிருக்கலாம். போய் படி' என்று எந்நேரமும் அடக்கியே வளர்த்து விட்டனர். பிள்ளைகளை படிக்க வைத்தால், பின்னால் தன்னை அரவணைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் பெற்றவர்கள் படிக்க வைக்கிறார்களோ என்ற சந்தேகம் பூபதிக்கு உண்டு. சிறு வயதில் பெற்றோர்களால் அரவணைக்கப்படாத குழந்தைகள் தான் பெரியவர்கள் ஆனதும் வளர்த்ததற்கு கூலி கொடுத்து ஒதுக்கி விடுகின்றனர் என்று வருந்தினார் பூபதி. தனது மகன்களையே புரிந்து கொள்ளாத நிர்மலா, மற்றவர்களையும் புரிந்துக் கொள்ள மாட்டாள் என பூபதி நம்பினார்.

'நல்லவேள...லட்சுமிய முதல்ல பார்த்தேன்.'




Blogged with Flock

சனி, 24 நவம்பர், 2007

ஊடுருவு சக்தி-1

தகிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஹரிதர் மெதுவாக நவீன ஆராய்ச்சிக் கூடத்தை நோக்கி நடந்தான். இரகசிய எண்கள் கொடுத்து, ஆராய்ச்சிக் கூடத்தின் வாயிற் கதவை திறந்து உள்ளே சென்றான். சோப நித்திரையில் உறங்கிக் கொண்டிருந்த காளிகாவின் அருகில் போய் அமர்ந்தான்.

"என்னாச்சு?" என்று கண் திறக்காமலே கேட்டாள்.

"எல்லாம் சரியா தான் இருக்குது. நீ தான் அநாவசியமா பயப்படுற. அந்த வின் க்ரூசால்.. உன் எல்லைக்குள்ள ஊடுருவவே முடியாது."

"என்ன என் இடமுன்னு பிரிச்சு பேசுற. துணைக்கு நீ இருக்க மாட்டியா? அவனுக்கு வெறி  பிடிச்சிருக்கு. தனியா நான் என்ன பண்ணுவேன். எனக்கு ஆறுதலா இருப்பேன்னு நினைச்சேன்" என்றாள் காளிகா.

"என்னை நம்பறயில்ல.... அப்ப வீணா கவலைப்படாம இரு" என்று படுத்துக் கொண்டான்.

"எப்படி கவலைப்படாம இருக்கிறது? முன்னாடியே நிறைய பேர அடைச்சு வச்சிருக்கான். அதான் பயமா இருக்கு."

'ட்ரிட், ட்ரிட்' என சப்தத்தோடு செய்தி ஒன்று வான் வழியாக ஆராய்ச்சி கூடத்தில் நுழைந்தது. காளிகா படித்து விட்டு, ஹரிதரையும் படிக்க அழைத்தாள்.

"என்னன்னு..நீயே சொல்லு."

"வின் க்ரூசின் நடவடிக்கைகள் உலக நன்மைகளுக்கு எதிராக  தினமும் வலுப்பதால் , அவனைக் கொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அவனால்  ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால், உடனடியாக தலைமை குழுவிற்கு தெரியப்படுத்தவும். உங்களால் அவன் கொல்லப்பட்டாலும், தலைமைக் குழு இவ்விஷயத்தில் அக்கறைக் காட்டாது என்பதை உறுதிப்படுத்துகிறோம்."

"இப்ப தான் எனக்கு நிம்மதி" என்று மகிழ்ந்தான் ஹரிதர். ஆனால் காளிகாவின் முகம் வாடியது.

"ஏன் இப்படி பண்றாங்க? வின் க்ரூஸ்  எவ்வளவு பெரிய ஜீனியஸ்! எவ்வளவு நல்லது செஞ்சான், தலைமைக் குழு எல்லாத்தையும் மறந்துட்டாங்களா? அவன கைது பண்ணா போதாதா!" என்று வருத்தப்பட்டாள்.

"நீ வின் க்ரூசை பார்த்திருக்கியா?" என்று கேட்டான் ஹரிதர்.

"இல்ல. ஆனா அவனோட 'தி ஹ்யூமன்ஸ் இன் தி வெர்ல்டு(The Humans in the World)' புக்க படிச்சிருக்கேன். நீங்க படிச்சிருக்கீங்களா? எவ்வளவு அருமையான புக் தெரியுமா? பாவம்..அநியாயமா இப்படி கொல்ல சொல்லிட்டாங்களே!" என்று கேட்டாள் காளிகா.

"நீ ஏன் வீணா கவலைப்படுற? அவன் செத்து அஞ்சு வருஷம் ஆச்சு."

"என்ன உளர்ற?"

ஹரிதர் எதுவும் பேசாமல் தன்னுடைய 'பாம் டாப்(Palm Top)' எடுத்து சில படங்களை காண்பித்தான். அதில் ஹரிதரும், வின் க்ரூசும் ஒன்றாக இருந்தனர்.

"நாங்க இரண்டு பேரும் சின்ன வயசிலிருந்தே ப்ரென்ட்ஸ். எப்பவும் ரெண்டு பேரும் ஒன்னா தான் சுத்துவோம். எட்டு வருஷத்துக்கு முன்னாடி, உலகை ஆள துடிக்குதுன்னு ரோபோவை எல்லாம் அழிக்க சொல்லி தலைமைக் குழுவுல இருந்து உத்தரவு வந்தது. ஆனா வின் க்ரூஸ் ஆசையா, அவனை மாதிரியே தயாரிச்ச ரோபோவை அழிக்காம மறைச்சான். இந்த உண்மை இன்னும் ரெண்டு  பேருக்கு தான் தெரியும்.  ஒன்னு நானு, இன்னொன்னு மான்ட்லே..வின் க்ரூசோட அசிஸ்டன்ட். திடீரென்னு, ஒரு நாள் வந்து நான் ரோபோவை அழிச்சுட்டேன்னு சொன்னான். எனக்கு புரிஞ்சிடிச்சு... அழிந்தது ரோபோ இல்ல வின் க்ரூஸ் தான்னு. இப்ப நீங்க சொல்ற வின் க்ரூஸ் அந்த ரோபோ தான். அது மான்ட்லே கட்டுப்பாடுல இருக்குது."

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, "வரட்டும். ரோபோவுக்கு நாம யாருன்னு காட்டலாம்" என்றாள் காளிகா.

"உங்க ப்ரென்ட் அவரு புக்குல எழுதி இருப்பதெல்லாம் உண்மையா? கடல், குளம், பச்சை பசேல் பிரதேசம், பனி மலை அப்புறம் குறிப்பா வழவழப்பான தோல் கொண்ட பொண்ணுங்க, மழை இதெல்லாம்  கற்பனை தானே? இலட்சக்கணக்கான ஜீவராசிங்க, கோடிக்கணக்கான மக்கள்...அவங்களுக்குள்ள ஏகப்பட்ட பிரிவு..சண்டை..கல்யானம்..இன்னும் நிறைய எழுதியிருக்காரு . படிக்கிறதுக்கு நல்லா இருந்துச்சு. ஆனா நம்ப தான் முடியல" என்றாள் காளிகா. 

இதையெல்லாம் கேட்ட ஹரிதர் சிரித்து விட்டு, "ஓ.பி.* 1234ல் வாழுற உலகர்களான(Worlans)  நமக்கு ஓ.மு.*வில் வாழ்ந்த மனிதர்களை பத்தி சொன்னா நம்ப முடியாது தான். மனிதர்கள் தான் நம்ம முன்னோர்கள்னு நீ நம்பற இல்ல!" என்று கேட்டான் ஹரிதர்.

"நம்புறேன் ஆனா...அவங்களுக்கு மட்டும் ஏன் தோல் மென்மையா இருந்துச்சு?" என்று கேட்டாள்.

"ஏன்னா மனிதர்கள் வாழ்ந்தப்ப யூ.வி. கதிர்கள் இல்ல. நம்மள மாதிரி அவங்களால அந்த கதிர்களை தாங்க முடியாது. அதனால தான் அழிஞ்சுட்டாங்க. நாம அவங்கள விட அறிவு, உடல் வலிமையில பல மடங்கு முன்னேறிட்டோம். இது இயற்கை நமக்கு கொடுத்த பரிணாம பரிசு" எனறு ஹரிதர் சொல்லும் பொழுதே ரேடார் சிக்னல் ஒலித்தது.

"ஐயையோ...ரோபோ வந்துடிச்சு போலிருக்கு."

*ஓ.பி. ஓசோன் அழிவிற்குப் பின் (A.O. After Ozone destruction)
*ஓ.மு. ஓசோன் அழிவிற்கு முன் (B.O. Before Ozone destruction).

ஊடுருவு சக்தி-2

"நீ என்ன பண்ணி வச்சிருக்க? கன்ட்ரோலே இல்ல. ஃபர்ஸ்ட் லெவல் செக்யூரிட்டி ஃபேஸ் தானா திறந்துடிச்சு" என்று கோபப்பட்டாள் காளிகா.

"நான் தான் அப்படி ப்ரோகிராம் பண்ணினேன்."

"ஏன்?"

"ரோபோவுக்கு யோசிக்கிற திறன் நம்மள விட கம்மி. ரோபோ ஒரு ப்ராப்ளத்துக்கு சொல்யூஷன் தான் தேடும். ஆனா மனிஷனிலிருந்து வந்த நாம, அந்த ப்ராப்ளத்தையே அழிச்சுடுவோம். நேரா ரோபோ செகன்ட் ஃபேஸை நோக்கி வரும். இப்ப சுலபமா பின்னாடியிருந்து அட்டாக் பண்ணிடலாம்" என்றான் ஹரிதர்.

"இது மான்ட்லோவுக்கு தெரிஞ்சா...என்ன நடக்கும்?"

'க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட்' டால் மாபெரும் இயற்கை சீற்றழிவு ஏற்படும் என மனிதர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்கள் நினைத்த நேரத்திற்கு முன்பாகவே பிரச்சனை தொடங்கியது. துருவங்களில் உள்ள பனி மலைகள் உருகி, தாழ்வான நிலப்பரப்புகள் மூழ்கின. மழை பேய்த்தனமாய் வலுத்து சூறாவளியாய் மிரட்டியது. இயற்கை தனது அனைத்து கோர கைகளுடன், ஒரே நேரத்தில் உலகின் எல்லா பகுதிகளையும் தாக்கின. பூமியை நிலவில் இருந்து பார்த்திருந்தால் நீர் உருண்டையாகவே காட்சியளித்திருக்கும். எவராலும் தீர்க்க முடியாத தீவிரவாதம், மதப் பிரச்சனை, இனப் பிரச்சனை, மொழிப் பிரச்சனை என அனைத்திற்கும் தீர்வு காண்பது போல் முற்றுப்புள்ளி வைத்தது பேரழிவு.

மழை ஓய்ந்தது என்று மகிழ்ந்தவர்கள், அது தான் கடைசி மழை என்று தெரிந்த பொழுது அதிர்ச்சியடைந்தார்கள். சேரும், சகதியுமாக இருந்த நிலம் மெதுவாக வற்றியது. அதோடு நில்லாமல் கடல் நீரும் வற்ற ஆரம்பித்தது. ஓசோன் லேயர் முழுவதும் அழிந்து விட்டதால், யூ.வி. கதிர்கள் நேரடியாக உலகை தாக்கியது. பச்சை மரங்கள் எல்லாம் எரியத் தொடங்கியது. உயிரனங்கள் வெப்பம் தாளாமல் கருகி சாம்பல் ஆனது. மூன்று பங்கு நீரால் ஆன உலகம், மணற்பாங்கான கிரகமாக மாறியது. தப்பி பிழைத்தவர்கள் எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தனர். வாழ்வின் லட்சியமே இன்னொரு மனிதனை காண்பது என்றாகி விட்டது. கிடைத்ததை உண்டு நாடோடியாக வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் சேர்ந்தனர். தங்களுக்கு உலகர்கள் என்று புதுப் பெயர் சூட்டிக் கொண்டுடார்கள். இனப் பெருக்கத்தின் அவசியத்தை உணர்ந்ததால் திருமணம் எனும் சமூக கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தனர். உலகர்களின் சந்ததியினர், புதிய உலகின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு பிறந்தனர். விஞ்ஞானத்தை அரிச்சுவடியில் இருந்து தொடங்காமல் மனிதன் விட்ட இடத்தில் இருந்து தொடங்கியதால், விஞ்ஞானத்தில் அசுர வளர்ச்சி அடைந்தனர்.

யூ.வி. கதிர்களின் வெப்பத்தைத் தாங்கும்படியாக அடுத்த தலைமுறை உண்மை உலகர்கள் தோன்றினார்கள். இந்த உண்மை உலகர்களின் தோற்றத்தில் இருந்து தான் ஓசோன் ஆண்டுகள் கணக்கிடப்பட்டன. ஓசோன் ஆண்டுகளின் தொடக்கம் பேரழிவிற்கு பின்னர், சுமார் முந்நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து ஆரம்பித்தது. தாகம், குளிர், பசுமை என்ற சில விஷயங்கள் அகராதியில் மட்டுமே இடம் பெற்ற புரியாத சொல்லாக மாறியது. பார்ப்பதற்கு மனிதர்கள் போல் இருந்தாலும் உலகர்களின் உடல் ஏகப்பட்ட மாறுதல்கள் பெற்றிருந்தது. உலகர்களின் ஜீரன சக்தி அபிரிதமானது. எந்தவொரு உணவும் வயிற்றுக்குள் சென்றவுடன் வெந்து தாதுப் பொருட்களாகவும், வெற்று பொடிகளாக பிரிந்து விடும்.தாதுக்கள் சக்தியாக எலும்பு, நரம்பு என யாவற்றிற்கும் கொண்டு செல்லப்படும். பொடிகள் கழிவுகளாக நிலத்தில் விடப்பட்டன. மனிதனுக்கு இரத்தம் போல, உலகருக்கு தாதுப் பொருட்களால் ஆன படிமங்கள். இரத்தத்தைப் போல் படிமங்கள் அவ்வளவு சீக்கிரமாக வெளியேறாது. அதனால் உலகரின் பலம் மனிதனை விட பல மடங்கு அதிகமாகயிருந்தது. உலகில் நீரே இல்லை. அதனால் உலகருக்கு வியர்வை, சிறுநீர் இல்லை. அதனால் அவர்கள் முன் பக்க உறுப்புகளின் வேலை பாதியாக குறைக்கப்பட்டு, ஒரே வேலைக்காக முழுதும் அர்ப்பனிக்கப் பட்டிருந்தன. அர்ப்பனிக்கப்பட்ட ஆணின் முன்னுறுப்புகளில் இருந்து உபலங்கள் வெளியேறும். தனது பயண தொடக்கத்தில் கெட்டியாக இருந்த உபலங்கள்(Crystals), உடல் சூட்டால் ஆவியாக ஊடுருவி கருப்பைக்குள் நுழையும். ஆவியின் வழியில் கருக்கள் ஏதாவது இருந்தால், அதையும் அழைத்துக் கொண்டு கருப்பைக்குள் சென்று சிறு உலகரின் உயிரைத் தோற்றுவிக்கும்.

உலகர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் மனித சாதனைகளை தூசி எனக் கருதும்படி பால் வீதியைக் கடந்தனர். அன்ட்ரோமேடா கேலக்சியின் நட்சத்திர குடும்பங்களை அலசினார்கள். 'ரெவிட்' என்றொரு நட்சத்திரத்திற்கு பெயர் வைத்தனர். பதினைந்து கிரகங்கள் ரெவிட்டை சுற்றி வந்தது. அதில் 'செலின் 21' என்று பெயர் வைத்த கிரகத்தில் தான் உலகர்கள் தண்ணீரை முதன் முதலாக பார்த்தனர். வின் க்ரூசின் புத்தகத்தை முன் வைத்து விஞ்ஞானிகள் தண்ணீரின் குண நலன்களை பற்றி புகழ்ந்து தள்ளினார்கள். பூமிக்கு வயதாகி விட்டதால். 'செலின் 21'ற்கு நிரந்தரமாக குடிபெயர்ந்து விடலாமென யோசித்தனர். அதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய, வின் க்ரூசை தலைமைக் குழு அழைத்தது. இந்த கருத்து மான்ட்லோவுக்கு பிடிக்கவில்லை. வின் க்ரூசின் ரோபோவை கொண்டு அனைவரையும் பூமியிலேயே சிறைப் பிடிக்க முயற்சி செய்தான்.

தலைமைக் குழுவில் இருந்தவர்களை நேரடியாக எதிர்க்க முடியாமல் வின் க்ரூசின் ரோபோவை கொண்டு எதிர்த்தான் மான்ட்லோ. கடைசியில் ரோபோவும் அழிந்து விட்டதால், நேரடியாக இறங்கி அனைவரையும் பூமியிலேயே சிறைப்படுத்த திட்டம் தீட்டினான்.

ஊடுருவு சக்தி-3

"ஒரு சந்தோஷமான செய்தி சொல்லனும்" என்றான் ஹரிதர்.

"உங்கிட்ட ஒன்னு கேட்கனும்" என்றாள் காளிகா.

"சொல்லட்டுமா, கேட்கிறியா?"

"சரி, சொல்லு."

"தலைமைக் குழுவுல இருக்கிற டாக்டர் லாராவுக்கும், மான்ட்லோவுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு. அப்ப மான்ட்லோவ லாரா கொன்னுட்டாங்க."

"யார் சொன்னா?"

"மை ஸ்வீட் ப்ரென்ட் ஜேனட்."

"ஸ்வீட் ப்ரென்டா? சரி, உன் முழுப் பெயர் லெவின் ஹரிதரா?"

"அதுக்கென்ன இப்ப?"

"செலின் 21க்கு ஒரு குழு அனுப்ப போறாங்களாம். உன்னையும் வரச் சொல்லி தலைமைக் குழுவிலிருந்து கூப்பிட்டிருக்காங்க" என்றாள் காளிகா.

"நான் போல."

"ஏன் நீ போல! வின் க்ரூஸ் புக்குல கூட நீ வரத் தெரியுமா? 'எல்லாரும் என்னை அறிவாளின்னு சொல்றாங்க. ஆனா எங்கிட்ட அறிவாளி யாருன்னு கேட்டா , நான் லெவினை தான் சொல்லுவேன்'னு உன்னை புகழ்ந்து எழுதியிருக்காரு. நீ தான் அந்த குழுவுல இடம் பெற சரியான ஆளு. நான் நீ வருவேன்னு ரிப்ளை பண்ணிட்டேன்."

"ஏன் என்னை கேட்காம இப்படி பண்ண? தலைமைக் குழுவுல இருக்கிறவங்களுக்கு என்னத் தெரியும்? எனக்கும் மான்ட்லோவுக்கும் பிரச்சனை இல்லன்னா, நான் கண்டிப்பா வெளிப்படையான ஆதரவு கொடுத்திருப்பேன். மான்ட்லோவோட குணம் மட்டும் தான் கெட்டுப் போச்சு. ஆனா கடைசி வரைக்கும் தெளிவா யோசிச்ச அறிவாளி அவன்.

இந்த பூமியில இப்ப என்ன குறைச்சல்? தண்ணின்னு ஒன்னு இருந்துச்சு...இப்ப இல்ல. இதே மாதிரி 'செலின் 21'ன்லயும் தண்ணி இல்லாம போகும். திரும்பி எங்கயாச்சும் ஓடுனும். எவ்வளவோ கஷ்டத்த அனுபவிச்ச மனுஷனுக்கு வராத யோசனை, ஒரு கஷ்டமும் தெரியாத தலைமைக் குழுவுக்கு வந்தது ரொம்ப கொடுமை. நான் சொல்றேன்..நாளைக்கே பூமியில மழை பெய்யும். நீங்க எல்லாரும் போங்க. நான் மட்டும் இருக்கேன்" என்று கோபமாக வெளியேறி விட்டான். கடல், பூங்கா, அருவி, குளம், ஆறு, கோயில் என தனிமையான இடம் எதுவுமே இல்லாததால் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துக் கொண்டு தனியாக நிலவிற்கு சென்றான்.
"என்ன ஜேனட் துரத்திட்டாளா?"

"இல்ல.. ஆக்சிஜன் தீர்ந்துடுச்சு" என்று காலி சிலிண்டரை தூக்கிப் போட்டான்.

"எப்ப போற?"

"ஆய்வுக் குழு எப்பக் கூப்பிட்டாலும்."

"நான் எப்ப ஜேனட்கிட்ட போறேன்னு கேட்டேன்."

"நான் ஏன் அங்கெல்லாம் போறேன்? உனக்காக செலின் 21ல ஒரு அழகான இடம் பார்த்துட்டு வர்றேன்" என்று கண்ணடித்தான்.

"என்னை அனுப்பிட்டு நீ மட்டும் இங்க தனியா இருக்க போறியா?" என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள் காளிகா.

"நான் அப்படி சொல்லலியே! எங்க இருக்கலாம்னு நீ முடிவு பண்ணு. உங்கூட நான் இருக்கிறத முடிவு பண்ணிட்டேன்" என்று சிரித்துக் கொண்டே காளிகாவின் கையை பிடித்துக் கொண்டான் ஹரிதர்.

"சரி, ரொம்ப வழியாத. செலின் 21க்கு அனுப்புற ஆய்வுக் குழுவ கேன்சல் பண்ணிட்டாங்களாம். ஏன்னு சொல்லு?"

'தெரியாது' என தோள் குலுக்கினான் ஹரிதர்.

"பசிஃபிக் பள்ளத்தாக்குல இன்னும் நிக்காம மழைப் பெய்யுதாம். உலகம் முழுக்க மழை வருவதற்கு சான்ஸ் இருக்காம். நேத்து நீ கோபத்துல சொன்னது அப்படியே நடக்குது. ஒரு சின்ன மாறுதல். நீ மட்டும் உலகத்துல தனியா இருக்க மாட்ட. நாங்க எல்லாரும் இருப்போம்."

"ஏய், சும்மா...விளையாடத."

"நிஜமாப்பா!" என்று சொல்லி விட்டு, "சரி, இந்த சந்தோஷத்த கொண்டாட நாம மனிதர்கள் மாதிரி கல்யானம் பண்ணிக்கலாமா?" என்று கேட்டு ஹரிதரை கட்டி பிடித்துக் கொண்டாள்.

புதன், 21 நவம்பர், 2007

கெளசி

கரண் வீட்டுக்குள் நுழையும் பொழுது, கெளசல்யாவும் கிஷோரும் எதையோ தேடிக் கொண்டிருந்தனர். கரண் வந்ததையும் கூட இருவரும் கவனிக்கவில்லை. அவர்கள் இருவரின் முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்த கரண் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். சாய்வு நாற்காலியில் அமர்ந்து செய்தி தாளைப் புரட்ட ஆரம்பித்தான். இது அவனக்கு மிக பிடித்தமான அன்றாட செயல் அல்லது பொழுதுப் போக்கு என்று கூட சொல்லலாம்.

"எங்கடா வச்ச? சரி, காலையில் கிடைச்சுடும். சாப்பிடலாம் வா" என்றவள் கரணைப் பார்த்து விட்டு, "நீங்க எப்ப வந்தீங்க?" என்று கேட்டாள் கெளசல்யா.

"என்ன தேடுறீங்க?"

"என் ரஃப் நோட்ட காணோம்" என்று விசும்பினான் கிஷோர்.

"ரஃப் நோட்டுக்கா...இவ்வளவு டென்ஷன்!"

"அதுல அவன் வரைஞ்ச படம் எல்லாம் இருக்காம்."

காலையில் கிஷோர் எழுந்ததும் அவன் தேடியதை கையில் வைத்தாள் கெளசல்யா. கரணும், கிஷோரும் எதையாவது தினமும் தேடிக் கொண்டேயிருப்பனர். கெளசல்யாவிற்கு இவர்கள் தொலைத்ததை தேடுவதற்கே நேரம் சரியாக இருந்தது.

இரவு பதினொரு மணிக்கு, கரண் எழுந்த பொழுது கெளசல்யாவை காணவில்லை. சமையலறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தன் மனைவியின் கைப்பையை அவளுக்கு தெரியாமல் ஆராய்வதில், மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான் கரண். ஏனென்றால் கெளசல்யாவிற்கு தன் கைப்பையை யார் தொட்டாலும் பிடிக்காது. கெளசல்யா வருவதற்கு முன் கைப்பையை ஆராய்ந்து விட்டு, சமையலறைக்கு சென்றான். கெளசல்யாவின் தேம்பலை கேட்டு, சமையலறை வாசலிலேயே மறைந்து நின்றான்.உதட்டுக்கு பூசும் சிறு வண்ண சாயக் குப்பி(lipstick) ஒன்று உடைந்திருந்தது. கண்களில் இருந்து வழிந்த நீரைத் துடைத்து விட்டு , தரையை சுத்தம் செய்தாள். கெளசல்யாவின் வினோதமான செயலைக் கண்டு வியந்தான் கரண். அழுதுக் கொண்டிருக்கும் அவளை எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாமென படுத்துக் கொண்டான்.

காலையில் அலுவலகம் செல்லும் வழியில், கரணிடம் வண்டியை நிறுத்த சொல்லி அவசரமாக போய் ஒரு புது சாயக் குப்பியை வாங்கி வந்தாள்.

'ஏன் உடைக்கனும்?...ஏன் இப்ப இவ்வளவு அவசரமா வாங்கனும்?'

மாலை வந்தவுடன், கெளசல்யாவின் கைப்பையில் சாயக் குப்பி இருக்கிறதா என்று சோதித்தான். ஆனால், சாயக் குப்பிக்கு பதிலாக பேப்பர் வெயிட் ஒன்றிருந்தது. நேற்றிரவு அழுததைப் பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று மிகவும் யோசித்தான் கரண்.

'என்ன பிரச்சன்னையாக இருக்கும்? எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்னு நினைக்கிறாளோ!'

பலமுறை யோசித்து விட்டு, மனோதத்துவ நிபுனரை ஒருவரை சந்திக்க சென்றான். எல்லாவற்றையும் கேட்டு விட்டு,"உங்க மனைவிய பார்க்காம எந்த முடிவுக்கும் வர முடியாதே!" என்றார் மருத்துவர்.

"அதில்ல சார்.. சின்ன சின்ன விஷயத்தையெல்லாம் நான் பெரிசு படுத்தறனோன்னு சந்தேகமா இருக்கு" என்றான் கரன்.

சிறிது நேரம் மெளனத்திற்குப் பின், "அடிக்கடி உங்க மனைவி கோபப்படுவாங்களா? சாதாரன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன் ஆகி கத்துவாங்களா?" என்று கேட்டார்.

"அதெல்லாம் இல்ல சார்."

"உங்களுக்குள்ள சண்டை நிறைய வருமோ?"

"ரொம்ப சாஃப்ட் டைப் சார். அதிர்ந்து கூட பேச மாட்டா."

"அவங்க அப்பா, அம்மாவுக்கு ஒரே பொண்ணா ?" என்று கேட்டார் மருத்துவர்.

"ஆமாம். ரொம்ப பாசமா இருப்பாங்க. இரண்டு பேரும் வேலைக்கு போறதால ஹாஸ்டலுல விட்டிருந்தாங்க. அதனால இன்னும் பாசமா இருப்பாங்க. அவளுக்கு அவங்க ஒரு குறையும் வச்சதில்ல."

"ஓ! அது சரி, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்களா?"

"ரொம்ப சந்தோஷமா தான் சார் இருக்கோம்" என்றான் கரண்.

"சண்டை வராததாலோ, சிரிச்சு பேசறதாலோ நீங்க சந்தோஷமா இருக்கிறதா சொல்ல முடியாது. உங்கள மாதிரி ஆளுங்ககிட்ட இருக்கிற பிரச்சனையே, கூடவே இருப்பீங்களே தவிர அவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாது. எப்பவும் மெட்டீரியலிஸ்டிக்காவே பேசிக்கிறது.

பொதுவா ஹாஸ்டலுல இருந்தவங்களுக்கு க்ளெப்டோமேனியா(kleptomania) வர்றதுக்கு சான்ஸ் இருக்கு. எல்லோரும் இருந்தாலும், தனக்கு யாருமே இல்லன்னு நினைச்சிப்பாங்க. இந்த மாதிரி ஏக்கம் வரும் பொழுதெல்லாம், மன அழுத்தம் அதிகமாகும். அந்த சமயத்துல, ஏதாவது ஒரு அற்பமான பொருள திருடிக்குவாங்க. பேனா, பென்சில், லிப்ஸ்டிக் அப்புறம் பேப்பர் வெயிட் இப்படி ஏதாவது எடுத்த பிறகு தான் அவங்க மனம் சமாதானம் ஆகும். இது திருட்டு இல்ல. சரியா சொல்லனும்னா, அவங்கள சுத்தியிருக்கிறவங்களோட அக்கறையின்மை. அவங்கள ஆறுதலா, அவங்க மனம் திருப்தியடையுற மாதிரி ட்ரீட் பண்ணாலே போதும். தானா இந்த பழக்கம் மறைஞ்சுடும்.

உங்க மனைவி தான் இப்படி திருடுறோம்னு நினைச்சு வருத்தப்படுறாங்கன்னு நினைக்கிறேன். அதனால தான் அழுவுறாங்க. நீங்க சொன்ன லிப் ஸ்டிக் கூட அப்படி தான் திருடி, அந்த வருத்தத்துல உடைச்சு, எடுத்த இடத்திலேயே வைக்க புதுசு வாங்கியிருக்காங்க" என்று சொல்லி விட்டு, "இதெல்லாம் ஒரு அசம்ப்ஷன் தான். வேறு ஏதாவது பிரச்சன்னையா இருந்தா நேர்ல கூட்டிட்டு வாங்க. பார்க்கலாம்" என்றார் மருத்துவர்.

இந்த பிரச்சனையினை எப்படி அனுகலாம் என்று யோசித்தான் கரண். அலுவலுக நேரம் முடிய பத்து நிமிடங்கள் இருந்த பொழுது, கெளசல்யாவின் பெயரிற்கு பூங்கொத்து ஒன்று அனுப்பி வைத்தான். கூடவே, 'உன்னையும், உன் அன்பையும் எதிர்நோக்குபவன்' என்று குறிப்பும் இருந்தது.

கெளசல்யாவின் மேஜை மேலிருந்த தரை வழி தொலைப்பேசி ஒலித்தது.

"மேடம், பொக்கே கிடைச்சுதுங்களா? உங்களுக்காக உங்க ஆபீஸ் வாசல்ல காத்திருக்கேன்" என்று குரல் மாற்றி பேசி விட்டு அழைப்பை துண்டித்தான் கரண்.

'வர்றேன்டா' என்று மனதில் நினைத்துக் கொண்டே கிளம்பினாள் கெளசல்யா. அலுவலக வாசலில் கரண் வண்டியோடு நின்று கொண்டிருந்தான்.
"போலாமா கெளசி."

"இல்ல..நீங்க போங்க. எனக்கு ஒருத்தவன் பொக்கே கொடுத்தான். அவன் முகத்த பார்த்துட்டு வர்றேன்."

"அதான் தினமும் பார்க்கிறீயே!"

"நீங்களா போன் பண்ணீங்க?"

"அது சரி. உன்ன ஏமாத்துறதுக்கு ஒரு கர்சீப் போதும் போல இருக்கு!" என்று கேட்டான் கரண். கெளசல்யா சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறினாள்.

சாய்வு நாற்காலியில் அமருவதற்கு பதிலாக சமையலறை கட்டில் சாய்ந்து, கெளசல்யாவுடன் பேசிக் கொண்டே செய்தி தாள் படித்தான். தாயின் முகத்தை தேடும் சிறு குழந்தை போல, கெளசல்யாவையே சுற்றி வந்தான் கரண். இரவில் தூங்கும் பொழுது கூட, கெளசல்யாவின் கையை இறுக பிடித்துக் கொண்டு தான் தூங்கினான் கரண். எப்பொழுதும் கெளசல்யாவை தனியாகவே விடுவதில்லை கரண்.

"என்னை ஆபீஸ்ல எல்லாம் கிண்டல் பண்றாங்க. என்ன செஞ்ச? உன் புருஷன் இப்படி உன்னையே சுத்தி வர்றாருன்னு கேட்கிறாங்க."

"அதுங்க கிடக்குதுங்க."

"என்னது அதுங்களா!" என்று சிரித்தாள்.

"கெளசி..உனக்கு ஏதாவது நிறைவேறாத ஆசை இருக்கா?"

"இல்ல."

"ப்ச்...சும்மா சொல்லு."

கெளசல்யா யோசித்து விட்டு, "நான் பைக் ஓட்ட கத்துக்கிட்டு, உங்கள பின்னாடி வச்சு ஓட்டனும்" என்று கண் சிமிட்டி புன்னகைத்தாள்.

செவ்வாய், 20 நவம்பர், 2007

புதிர் கோணங்கள்

ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்க, லிண்டா மட்டும் உறக்கம் வராமல் எதிர் வீட்டு மாடியைப் பார்த்தவாறு புகைத்துக் கொண்டிருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த லிண்டா, தன் தாயையும் மூன்று வருடங்களுக்கு முன் இழந்திருந்தாள்.

யாருமற்ற மாளிகையில், சரியாக கண் தெரியாத வயதில் மூத்த வேலைக்காரியுடன் தனிக் காட்டு இளவரசியாக வாழ லிண்டா பழகிக் கொண்டாள்.பிரபு குடும்பங்களுக்கு நிகரான பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசவள். போதா குறைக்கு கெளரவம் மிக்க அரசாங்க வேலையில் வேறு வீற்றிருந்தாள்.இறைவன் அழகிலும் குறை வைக்கவில்லை. கால் நூற்றாண்டை நெருங்கும் வயது இருக்கும்.

எதிர் வீட்டு மாடியில் விளக்கு இரண்டு முறை ஒளிர்ந்து, மீண்டும் காரிருள் பரப்பியது. இதைக் கண்ட லிண்டாவின் முகம் பிரகாசித்தது. லிண்டா கையுறையை தேடி அணிந்து, பனி படர்ந்த இருளில் இறங்கி நடந்தாள். எதிர் வீட்டில் இருந்து பதுங்கி வந்த உருவம் லிண்டாவை இறுக கட்டி பிடித்துக் கொண்டது.
"ஸ்வீட்டி...இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க."
"இன்னிக்கு மட்டும் தானா?" என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள் லிண்டா.
"என்னிக்கும் என் தேவதை அழகு தான். ஆனா இன்னிக்கு பேரழுகு."
"சரி, சரி போதும். எல்லாம் வந்துட்டிருப்பாங்க. நாம தான் கடைசியா போகப் போறோம்."
"முகமூடி எடுத்துட்டு வந்தியா?"
"மறப்பனா!!" என்று கேட்டாள் லிண்டா.
இருவரும் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தனர். ஒருவர் கையை ஒருவர் இணைத்துக் கொண்டு, குளிருக்கு அடக்கமாக ஒட்டியபடி நடந்தனர். நட்சத்திர மதிப்பு வாய்ந்த ஹோட்டல் பின்புறம் சென்றனர். முத்தமிட்டுக் கொண்டே, முகமூடியை எடுத்து அணிந்தனர். ஹோட்டலின் பின்புற கதவை திறந்துக் கொண்டு, மெதுவாக சமையலறையைக் கடந்து நடு ஹாலிற்கு வந்தனர். ரம்மியமான மெல்லிசையின் பின்னணியில் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்தியின் ஒளியில் புதிய உலகம் ஒன்று உருவாகி இருந்தது. முகமூடி அணிந்த பலர் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தனர். இரவு மணி பன்னிரெண்டு முடிந்து அரை மணி நேரம் தான் கழிந்திருந்தது.ஆடி ஆடி களைத்தவர்கள் அங்கங்கே வைக்கப்பட்டிருந்த மது பான அரங்குகளில் பணம் செலுத்தி பானம் வாங்கி பருகினர்.
நாற்பதை தொட்ட ஜெனிஃபருக்கு மூச்சு வாங்கியது. தள்ளாடியபடியே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
"இதுங்க அடிக்கிற கூத்த கண்ணால பார்க்க முடியில. எங்கம்மாவுக்கு மட்டும் உடம்பு சரியா இருந்தா இந்த வேலையை என்னிக்கோ விட்டிருப்பேன். சமூகத்துக்கு விரோதமா இங்க நடக்கிறத அரசும் கண்டுக்கறதில்ல. எங்கிட்ட மட்டும் அதிகாரம் இருந்துச்சுன்னா, எல்லார் முகமூடியும் அவிழ்த்துட்டு பகல்ல ரோட்டுல ஓட விடுவேன்" என்று பொறிந்து தள்ளினான் க்ரூக்ஸ்.
"மெதுவா பேசு. பார்க்கிற வேலையும் போயிடும். யார் எப்படி போன நமக்கென்ன? பணம் ஒழுங்கா வருதான்னு பாரு. அம்மாவுக்கு மருந்து வாங்கனுமில்ல!" என்று க்ரூக்சுடன் அரங்கில் நின்றிருந்த ஹென்றி கேட்டான்.
"ச்சே...இந்த அரசாங்க அதிகாரி எல்லாம் என்ன பண்றாங்க?"
"மெதுவா பேசு. அவங்களும் இங்க தான் இருப்பாங்க. ஏன் முகமூடி போட்டிருக்காங்கன்னு தெரியல? தடுக்க வேண்டிய அவங்களும் இங்க தான் இருப்பாங்க."
"உடம்புல போட்டிருக்கிற துணி அவிழ்ந்தா கூட கவலைப் படமாட்டாங்க. ஆனா முகமூடி மட்டும் அவிழாமா கவனமாக பார்த்துப்பாங்க" என்று சிரித்தான் க்ரூக்ஸ்.
"எக்ஸ்க்யூஸ் மீ. ரெண்டு க்ரேப்ஸ்" என்றாள் லிண்டா.
லிண்டாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான் க்ரூக்ஸ். ஹென்றி லிண்டாவின் வேன்டுகோளை ஏற்றான்.
"இன்னிக்கு நான் ஏன் லேட்னு நீ கேட்கவே இல்லையே?" என்று லிண்டாவின் முதுகை தொட்டாள் ஜெனிஃபர்.
"உங்க புருஷன் எப்பவும் போல குடிச்சுட்டு வந்து பிரச்சனை பண்ணியிருப்பார்" என்றாள் லிண்டா.
"அவன் கிடக்கிறான். என் பொண்ணுக்கு உடம்பு சரியில்ல."
க்ரூக்ஸ் முகமூடி அணிந்த இருவரையும் கண்களால் அலசிக் கொண்டிருந்தான். லிண்டா இரண்டு டம்ளர்களை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
"ஹலோ..மீதி பணத்த வாங்கின்னு போங்க" என்று கை தட்டினான் க்ரூக்ஸ்.
"போயிட்டு போறாங்கன்னு இல்லாம, கூப்பிட்டு கொடுடா" என்று முனறினான் ஹென்றி. க்ரூக்ஸ் திரும்பி ஹென்றியை முறைத்தான்.
"பரவாயில்ல...நீங்களே வச்சுக்கிங்க" என்று புன்னகைத்தாள் லிண்டா. முகமூடி அணிந்திருந்தாலும் லிண்டாவின் புன்னகை அவள் கண்களில் பேரொளியாக தெரிந்தது. அந்த பேரொளி ஏற்படுத்திய பிரமிப்பில் இருந்து மீளும் முன், "முதலாளி எங்களுக்கு சம்பளம் தர்றார்" என்றான் ஹென்றி.
"என்ன அதிசயமா இருக்கு?இப்பெல்லாம் சர்வர் யாரும் டிப்ஸ் வாங்குறதில்லையா?" என்று எகத்தாளமாக கேட்டாள் ஜெனிஃபர்.
"வாங்குறோம். ஆனா உங்கள மாதிரி இருக்கிறவங்க கிட்ட வாங்குறதில்லை" என்றான் க்ரூக்ஸ்.
"எங்கள மாதிரின்னா?" என்று கோபத்தோடு குரலை உயர்த்தினாள் ஜெனிஃபர்.
"ஜெனிஃபரின் குரல் உயர்ந்ததை எண்ணி சிரித்தான் க்ரூக்ஸ். வறுமையின் சாயலும், நேர்மையின் கம்பீரமும் க்ரூக்சின் முகத்திற்கு தனி அழகை தந்தது. க்ரூக்சின் முகம் அவனது குறும்பு சிரிப்போடு லிண்டாவின் மனதில் பதிந்தது.
"அத நான் என் வாயால வேற சொல்லனுமா?"
"எங்கள பார்த்தா உனக்கு அவ்வளவு கேவலமா இருக்கா? நாங்க நினைச்சா உனக்கு இந்த வேலை கூட இருக்காது."
"என்ன பண்ணுவீங்க?" என்று மேலும் சிரித்தான் க்ரூக்ஸ்.
"தைரியம் இருந்தா, உன் பெயர சொல்லு பார்ப்போம்."
"வின்சென்ட் க்ரூக்ஸ். உங்க பெயரையும் தைரியமா சொல்லுங்க பார்ப்போம்."
"ப்ளீஸ்...வாங்க நம்ம அறைக்கு போலாம்" என்று லிண்டா ஜெனிஃபரின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
அங்கிருந்த மற்றவர்கள் இரண்டிரண்டு பேராக சேர்ந்து அவர்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றனர்.

ஓரின சேர்க்கை. ஆணும், ஆணும் அல்லது பெண்ணும்,பெண்ணும் புணரும் புதிய கலாச்சாரம் துவங்கிய காலக்கட்டம் அது. இதை சமூகத்தில் அருவருப்பான சங்கதியாக பாவித்தனர். அரசு இப்பழ்க்கத்தை சட்ட விரோதம் என அறிவித்திருந்தது.ஆனால் சில ஹோட்டல்கள் வியாபார நோக்கில் ஓரின சேர்க்கையாளர்கள் ரகசியமாக சந்திக்க வசதி ஏற்படுத்தி தந்திருந்தது.

அடுத்த நாளே க்ரூக்ஸ் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டான். அதை தாயிடம் சொல்லும் தைரியம் இல்லாததால், இரயில் நிலைய பிளாட்பார பென்ச்சில் போஇ படுத்துக் கொண்டான் க்ரூக்ஸ். வேலை போன கவலையை விட, மீண்டும் அந்த பெண்ணின் அழகிய கண்களை எப்பொழுது பார்ப்போம் என்ற கவலை மிகுதியாக இருந்தது. வேலை இல்லாத காரணத்தால், எப்பொழுதையும் விட சீக்கிரமாகவே அன்று வீட்டிற்கு சென்றான் க்ரூக்ஸ். தாயை தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல், பின்னால் தோட்டத்து மர ஊஞ்சலில் படுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தான். ஜன்னல் ஓரமாக கடந்து செல்லும் பொழுது, சிரிப்பொலி கேட்டு ஜன்னல் கதவை கை விட்டு திறந்து பார்த்தான். க்ரூக்சின் தாய், பக்கத்து வீட்டுக்காரியின் மடியில் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் தன்னை மறந்த நிலையில் இருந்ததோடு மட்டுமில்லாமல், ஆடைகள் இன்றியும் இருந்தனர். சட்டென்று கதவை மூடி விட்டு தலையை பிடித்துக் கொண்டான். மிகவும் நொந்து, பிரமை பிடித்தவன் போல் நடக்க ஆரம்பித்தான். எங்கு சென்றோம், என்ன செய்தோம் என்ற பிரக்ஞை இல்லாமல் பல மணி நேரங்கள் கழித்து வீட்டிற்கு நடைப்பிணமாக வந்து சேர்ந்தான்.

அடுத்த இடி தலையில் விழத் தயாராக இருந்தது. அவனது தாய் தற்கொலை செய்துக் கொண்டாள். எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டும் நோய் குணமடையாததால் இறந்து விட்டாள் என அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். க்ரூக்சின் வேதனை அவன் கண்களில் இரண்டு மெல்லிய தண்ணீர் கோடுகளை வரைந்தது.

அழுது அழுது வீங்கிய கண்களுடன் பக்கத்து வீட்டுக்காரி க்ரூக்ஸ் அருகில் வந்தாள்.
"நீ வந்துட்டு போனது எங்களுக்கு தெரியும். அதான் உங்கம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டா? இனிமேல் உன் முகத்தில் எப்படி முழிக்கிறதுன்னு அவசரப்பட்டுட்டா. நான் எவ்வளவோ சொன்னேன். 'இருபது வருஷமா பழகிகிட்டு இருக்கோம்.ஒரு நாள் எப்படியும் தெரிய தான போகுது.. வருத்தபடாத..எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்னு' சமாதானம் சொல்லிட்டு போனேன்."
'என்ன..இருபது வருஷ பழக்கமா?' என்று மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானான்.
"இத்தனை நாள் என் உயிரா இருந்தவளே போயிட்டா. ஆனா நீ அவள பத்தி தப்பா நினைச்சிட கூடாதுன்னு தான் உங்கிட்ட பேசுறேன். நீ ரொம்ப சின்னப் பையன். உனக்கு சொன்னாலும் புரியாது."
க்ரூக்சிற்கு அவள் பேசியது மேலும் வெறுப்பை அதிகரிக்க தான் வைத்தது. மேலும், இருபத்தி ஏழு வயது ஆன தன்னை சிறுவன் என்று சொன்னது அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது.
"உங்கம்மாவும், நானும் குழந்தையில் இருந்தே ரொம்ப நெருங்கிய தொழிங்க. அவளுக்கு பதிமூனு வயசுலயும், எனக்கு பதினாறு வயசுலயும் கல்யாணம் ஆச்சு. பதினாலு வயசுல நீ பிறந்த. நீ பிறக்கிறப்ப உங்கம்மாவே ஒரு குழந்தை. 'ப்ளேக்' வந்து உங்கப்பா இறந்துட்டாரு. இருபது வயசுலேயே உங்கம்மா விதவை ஆயிட்ட. என் புருஷனுக்கு நான் நாலாவது மனைவி. அவருக்கு ஏழு குழந்தைங்க. கல்யாணத்தப்ப அவருக்கு அம்பத்தி ஆறு வயசு. எங்களுக்கு குழந்தை இல்ல. ஏன்னா..அவரால முடியலன்னு கூட சொல்லலாம்.
உங்கம்மாவும், நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருந்தோம். எதேச்சையா நடந்த ஒன்றிரண்டு ஸ்பரிசங்கள் எங்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்திச்சு. இப்படி ஆரம்பிச்சதுக்கு நாங்க காலப் போக்கில் அடிமை ஆயிட்டோம்.
உங்கம்மா கூட எத்தனையோ தடவ தப்பு பண்றோம்னு வருத்தப்படுவாங்க. அப்பெல்லாம் நான் தான் திரும்பி அவ மனச மாத்தி சுயநலமா என் உணர்ச்சிகளுக்கு வடிகால தேடிக்கிட்டேன். எல்லா தப்பும் என் மேல தான். நான் தான் பாவி. உங்கம்மா ரொம்ப நல்லவ. அவள மட்டும் தப்பா நினைச்சிடாத" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
'வந்துட்டாங்க...பெருசா பேச. எனக்கெல்லாம் உணர்ச்சி இல்ல. நான் கட்டுப்பாடா இல்ல? தப்பு பண்ணிட்டு, தப்பில்ல...நல்லவன்னு சொல்லிட்டா, நல்லவள் ஆயிட முடியுமா?'

தனிமையும், வேலையின்மையும் க்ரூக்சை பாடாய்ப்படுத்தியது. அடுத்த வேலை உனவிற்கே வழியில்லாமல் க்ரூக்ஸ் தவித்தான். 'அப்பா இறந்தப்பா இருபது வயசு பொண்ணா அம்மாவும் இப்படி தான என்னை வச்சுக்கிட்டு தவிச்சிருப்பாங்க?' என்று மனதின் ஓரத்தில் ஒரு கேள்வி எழுந்தது.
'எல்லாம் சரி தான். ஆனாலும் அவங்க பண்ணது தப்பு' என்று மனதின் இன்னொரு ஓரம் சொன்னது.

அரசு வேலைக்கான விளம்பரம் செய்தி தாளில் வந்திருந்தது. அந்த வேலைக்கான விண்ணப்ப படிவம் ஒன்றை வாங்கி பூர்த்தி செய்து, சான்றுகளை சரி பார்த்து, அரசு அதிகாரியிடம் ஒப்புதல் பெற சென்றான். கொடுப்பவரின் முகத்தை பார்க்காமலே படிவத்தை வாங்கினாள் லிண்டா. படிவத்தில் இருந்த பெயர் ஏதோ நெருட க்ரூக்சின் முகத்தைப் பார்த்தாள்.
'அதே பிரகாசிக்கும் கண்கள்.'
'வேலைக்கு வந்திருக்கியா? எப்படி கிடைக்குதுன்னு பார்க்கிறேன்.'
"பெயர்?"
"வின்சென்ட் க்ரூக்ஸ்."
"முன்னாடி எங்க வேலை பார்த்தீங்க?"
"ஹோட்டலுல சர்வர இருந்தேன்."
"ஏன் அந்த வேலைய விட்டீங்க?"
"விடலை.. அனுப்பிட்டாங்க."
"என்னது? அனுப்பிட்டாங்களா..! ஏன்?" என்று குரலில் ஆச்சரியத்தை காட்டினாலும் உள்ளூற மகிழ்ந்தாள்.
"என் நேர்மையில் குறை கண்டுபிடிச்சாங்களாம்."
"ஹலோ... என்ன சார் இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க. என்னை மன்னிச்சிடுங்க. இது ரொம்ப பொறுப்பான வேலை சார் இது" என்று படிவத்தை தள்ளி விட்டாள் லிண்டா. படிவம் மேஜையின் மீது இருந்து கீழே விழுந்தது. க்ரூக்ஸ் எந்த சலனமும் இல்லாமல் லிண்டாவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
"ப்ளீஸ்...இடத்த காலி பண்றீங்களா?" என்று மேஜையை தட்டினாள். க்ரூக்சின் பார்வை தீட்சன்யத்தைப் பொறுக்க முடியாமல் தடுமாற ஆரம்பித்தாள்.
"வேணும்னா ஒன்னு பண்ணுங்க. அந்த ஹோட்டல் மேனஜர் கிட்ட நன்னடத்தை சான்றிதழ் வாங்கிட்டு வாங்க. ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்" என்று லிண்டா சொன்னதை காதில் வாங்காமல், பையிலிருந்து சில்லறையை எடுத்து மேஜை மீது வைத்தான் க்ரூக்ஸ்.
"அன்னிக்கு வாங்காமலே போயிட்டீங்க!" என்று சிரித்து விட்டு க்ரூக்ஸ் போய் விட்டான்.
லிண்டாவிற்கு தூக்கி வாரிப் போட்டது. அவள் சுதாரிக்கும் முன், க்ரூக்ஸ் அங்கிருந்து வெளியேறிருந்தான். க்ரூக்ஸ் ஏதாவது தன்னைப் பற்றி வெளியில் சொல்லி, தன்னை அவமானப்படுத்தி விடுவான் என நடுங்கினாள் லிண்டா.

"அன்னிக்கு ஒருத்தவன் நம்மக்கிட்ட வம்பு பண்ணானில்ல..அவன் என்னை கண்டுபிடிச்சிட்டான். அவன பார்த்து, உன்மைய வெளியில சொல்லாமா இருக்கிறதுக்கு எவ்வளவு பணம் தரனும்னு கேட்க அவன் வீட்டுக்கு போனேன். ஆனா அவன் யாருகிட்டயும் சொல்லாம ஊர விட்டு ஓடிட்டான்" என்று மகிழ்ச்சியாக சொன்னாள் லிண்டா.
"சரி, அவன் ஒழிறான் விடு. புதுசா ஒரு முகமூடியை பெரிசா வாங்கனும்" என்று சொல்லியவாறே முகமூடி அணிந்து கொண்டே ஹோட்டல் பின்புற கதவில் நுழைந்தனர்.
வேறு ஏதவாது ஊரில் வேலை தேடி கொள்ளலாம் என்று க்ரூக்ஸ் யாரிடமும் சொல்லமால் கிளம்பி விட்டான். இரண்டு நாட்கள் அலைச்சலுக்குப் பின், ரிச்சர்ட் ஹாரி என்ற ஒரு மருத்துவரிடம் வேலையில் சேர்ந்தான். அங்கேயே தங்கி, மருத்துவமனையை பராமறிக்கும் பெரிய வேலை. ஆனால் மருத்துவமனை மூன்று அறைகளோடு சிறியது தான். அதில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள் இருந்தது. இன்னொரு அறையில் கட்டில் போடப்பட்டிருந்தது. மீதமிருந்த அறையில் எப்பொழுதும் மருத்துவர் மட்டும் தனியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார். ஒரு நோயாளி கூட, க்ரூக்ஸ் வேலையில் சேர்ந்த நாளில் இருந்து வரவில்லை. இதுவரை ஒருவர் கூட மருத்துவரிடம் வந்ததில்லை என பிறகு தான் தெரிந்து கொண்டான். அந்த ஊரில் யாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பாதிரியாரிடம் தான் சென்றனர். தனக்கு சம்பளம் தருவாரா என க்ரூக்சுக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால் ரிச்சர்ட் சொன்ன சம்பளத்தை விட அதிகமகவே தந்தார். ஒன்றும் வேலை இல்லாததால் க்ரூக்சும் அங்கிருக்கும் ஏதாவது புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான். நாளடைவில் க்ரூக்சும், ரிச்சர்டும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர்.

க்ரூக்ஸ் வேலைக்கு சேர்ந்த ஒன்றரை மாதத்திற்கு பின், முதல் தடவையக இரண்டு நபர் ரிச்சர்ட்டை காண வந்திருந்தனர். க்ரூக்சும், ரிச்சர்ட்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அர்த்தமாக சிரித்துக் கொண்டனர்.
குரலை செருமிக் கொண்டு, "சொல்லுங்க என்ன பிரச்சனை?" என்று கம்பீரமாக கேட்டான் ரிச்சர்ட். இருவரும் எதுவம் பேசாமல் தலை குனிந்தவாறே இருந்தனர். மெதுவாக அதில் ஒருவன் தயங்கியபடியே, " நாங்க இரண்டு பேரும் தொழிற்சாலையில் வேலை செய்றோம். எங்களுக்கு யாரும் இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் கொஞ்சம் தான் பணம் கிடைக்கும். இந்த ஊர்ல என் கஷ்டம் புரிந்த ஒரே ஆளு இவன் தான். ஏன்னா..இவனும் அதே கஷ்டம் தான் படுறான். அதே நிறைவேறா கனவுகள். ஓரே எதிர்பார்ப்புகள்.இப்படி தான் எங்க நெருக்கம் வளர்ந்துச்சு" என்று நிறுத்தினான்.
மற்றொருவன், "அப்படியே..நாங்க மனசாலும், உடம்பாலும் ஒன்னு சேர்ந்துட்டோம். எல்லாம் நல்லப் படியாக தான் நடந்துட்டிருந்துச்சு. ஆனா இந்த விஷயம் எப்படியோ நம்ம பாதிரியாருக்கு தெரிஞ்சிடிச்சு. இப்படி பண்ணா சீக்கிரம் செத்துருவீங்கன்னு மிரட்டினாரு. இனிமே நாங்க இரண்டு பேரும் பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாரு" என்றான்.
"வர..வர..தனி மனித விஷியங்களில் எல்லாம் பாதிரியார் தலையிட ஆரம்பிச்சுட்டாரு. சரி, இங்க எதுக்கு வந்தீங்க?" என்று கேட்டான் ரிச்சர்ட்.
"எங்களுக்கு ஏதாவது நோய் வருமான்னு தெரிஞ்சிக்கறதுக்காக?" என்றான் முதலாமவன்.
"அதில்ல...நாங்க சந்திக்கிறதுக்கு எங்களுக்கு ரகசியமா ஒரு இடம் வேணும். உங்களுக்கும் பாதிரியாருக்கும் ஆகாதுன்னு கேள்விப்பட்டோம்" என்றான் இரண்டாமவன்.
"பக்கத்து ரூம் காலியா தான் இருக்கு. எப்ப வேணும்னாலும் உபயோகப்படுத்திக்கிங்க" என்றான் ரிச்சர்ட்.
"பணம்..ஏதாவது?"
"நான் ஒன்னும் ஹோட்டல் வச்சில்ல" என்றான் ரிச்சர்ட்.
அவர்கள் சென்றவுடன்,"நம்ம நிலைமைய பர்த்தியா?" என்று சிரித்தான் ரிச்சர்ட்.
"நீங்க ஏன் இப்படி தப்புக்கு உடந்தையா இருக்கீங்க?" என்று கோவமாக கேட்டான் க்ரூக்ஸ்.
"என்ன தப்பு?"
"அதான்..இப்ப வந்தவங்கள ஓரே அறைக்கு போக அனுமதிச்சிட்டீங்களே! இயற்க்கைக்கு மாற இப்படி அசிங்கம் பண்றாங்களே..தப்பில்ல?"
"யாரு உனக்கு இது செயற்கையானதுன்னு சொன்னங்க?"
"இதெல்லாம் வெளிப்படையா யாரவது சொல்லுவாங்களா?"
"சரி, வெளிப்படையா பேசலைன்னா நீயே ஏதாவது முடிவுக்கு வந்துடுவியா? நாம, அந்த இரண்டு பேர் எல்லாம் இயற்கைக்குள்ள இருக்கிறவங்க. அந்த உணர்ச்சியும் இயற்கையானது. இது எப்படி தப்பு ஆகும்னு தெரியல. மருத்துவ ரீதியா எனக்கு தெரிஞ்சு எந்த பாதிப்பும் இல்ல. இன்னும் ஆழமா ஆராய்ச்சி நடக்குது. வேணும்னா பாரு சீக்கிரமே அரசும் இதை அங்கீகரிக்கும்" என்றான் ரிச்ச்ர்ட்.
"அப்ப..அந்த பழக்கம் சரிங்கிறீங்களா?"
"சரின்னு சொல்லலை...தப்பில்லன்னு சொல்றேன்."

கார் மேகங்கள் சூழ்ந்து வானம் ஓரே இருட்டாய் காட்சியளித்தது. இரவு ஒரு மணி ஆகியும் எதிர் வீட்டில் விளக்கு ஒளிராததைக் கண்டு குழம்பினாள் லிண்டா. எதிர் வீட்டு சுவர் ஏறி குதித்து, மாடிக்கு கம்பியை பிடித்து ஏறினாள். சத்தம் கேட்டு ஜெனிஃபர் வெளியில் வந்து, "நீயா?" என்று அதிர்ந்தாள்.
"உங்களுக்கு உடம்பு சரியில்லையா?"
"இல்ல. என் பொண்ணுக்கு தான்."
"தூங்கிட்டாளா?"
"தூங்கிட்டா."
"அப்ப வாங்க போலாம்" என்றாள் லிண்டா.
"எங்க ஹோட்டலுக்கா! ஏன் உன்னால ஒரு நாள கூட பொறுத்துக்க முடியாதா? இப்பெல்லாம் என் பொண்ணுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது. ஆனா உனக்கு உன் சுகம் தான் முக்கியம். கல்யாணம் ஆகி குழந்தைன்னு ஒன்னு பிறந்தா தான் என் தவிப்பு உனக்கு புரியும்" என்றாள் ஜெனிஃபர்.
மாடியில் இருந்து தலை குப்புற விழுந்தது போல் உணர்ந்தாள் லிண்டா.
"என் பொண்ணுக்கு வேற பதினாலு வயசாகுது. இரண்டுங்கெட்டான் வயசு ஆரம்பிக்குது. நான் அவ பக்கத்தில் இருக்கனும்னு ஆசப்படுறேன். அவளும் நம்மள மாதிரி ஆயிடக் கூடாதில்ல?"
பதிலேதும் பேசாமல் மெளனமாக வந்த வழியே போய் விட்டாள் லிண்டா. ஜெனிஃபருடன் பழகியதற்காக முதல் முறையாக வருத்தப்பட்டாள்.

லிண்டாவிற்கு ஜெனிஃபரின் பெயர் கூட தெரியாது. லிண்டாவின் தாய் இறந்த பொழுது, துக்கம் விசாரிக்க பத்தோடு பதினொன்றாக வீட்டிற்கு நுழைந்தாள். பிறகு தினமும் வந்து ஆறுதல் சொன்னாள். லிண்டாவிற்கு தன் மீது அக்கறை செலுத்த மனிதர்கள் இல்லையே என்று வருத்தப்பட்ட சூழலில் எல்லாம் ஜெனிஃபர் வந்ததால், ஜெனிஃபர் மேல் அளவு கடந்த அன்பு லிண்டாவிற்கு எழுந்தது.
நன்றாக பழக ஆரம்பித்த ஒரு நாள், " என் புருஷன் என்னை தினமும் குடிச்சுட்டு வந்து மிருகத்த அடிக்கிற மாதிரி அடிக்கிறான். சிகரெட்டுல சுடுறான்" என்று துணிகளை அவிழ்த்து காண்பித்தாள் ஜெனிஃபர்.
முதலில் கண்ணை மூடிய லிண்டா ஜெனிஃபரின் உடம்பைப் பார்த்து அதிர்ந்து கண் கலங்கினாள். இது தான் சமயம் என்று லிண்டாவை வெறும் உடம்புடன் கட்டி பிடித்துக் கொண்டு, "உனக்கும் என் நிலைமை வரக் கூடாது. ஆம்பிள்ளைங்க எல்லாம் வக்கிரம் பிடிச்சவங்க" என்றாள் ஜெனிஃபர். ஜெனிஃபர் மேல் இருந்த அன்பு, அவள் படும் துன்பம், உரசல் தந்த ஆனந்தம் என லிண்டாவும் ஜெனிஃபரின் இச்சைக்கு தடை சொல்லவில்லை. ஆண்கள் மேல் வெறுப்பை லிண்டாவிற்கு வளர்த்துக் கொண்டே இருந்தாள் ஜெனிஃபர்.
'குழந்த ஒன்னு பிறந்தா தான் தவிப்பு புரியுமாமே! நான் ஆம்பிள்ளைங்கள கல்யாணமும் பண்ண கூடாதுன்னு சொன்னதெ அவங்க தான். அவங்க பொண்ணு எங்கள மாதிரி ஆயிடக் கூடாதாம். அப்ப நான் எக்கேடு கெட்டாலும் அவங்களுக்கு பரவாயில்ல. பொண்ணுக்கு உடம்பு சரியில்லையாம்! எனக்கு உடம்பு சரியில்லாத பொழுது, எல்லாம் அங்க வந்த சரியா போகும்னு இழுத்துட்டு போனாங்களே. ச்சே..இத்தன நாளா அவங்களுக்கு என் உடம்பு தேவைப்பட்டிருக்கு. எவ்வளவு பெரிய அசிங்கத்த பண்ணிட்டோம். பகல்ல ஒரு வாழ்க்க, இரவுல ஒரு வாழ்க்க. சரியான தூக்கம் இல்ல. எப்ப மாட்டிகிட்டு மானம் போகுமோன்னு ஒரு பயம் வேறு. இனிமே அவங்க பக்கமே திரும்பக் கூடாது' என்று பலவாறு யோசித்தப்படியே தூங்கி விட்டாள். பல நாட்களாக சூழ்ந்திருந்த கரு மேகம், லிண்டா தூங்கி எழும் பொழுது தென்படவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, க்ரூக்ஸ் தன் ஊரிற்கு மீண்டும் வந்தான். நேராக சென்று ஹென்றியை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்றான். இரவு பதினொரு மணியில் இருந்து இரண்டு மணி வரை ஹோட்டலின் பின்புற தெருவில் மறைந்து, லிண்டாவிற்காக காத்திருந்தான். ஆனால் லிண்டாவை தவிர யார் யாரோ வந்தார்கள். தன் அதிர்ஷ்டத்தை நொந்தவாறே வீட்டிற்கு திரும்பினான் க்ரூக்ஸ்.
காலையில் ஹென்றி வந்து எழுப்பி, செய்தி தாளை நீட்டி படிக்கச் சொன்னான். 'மருத்துவர் ரிச்சர்ட் ஹாரி மர்மமான முறையில் வெட்டப்பட்டு இறந்தார். பாதிரியார் சம்பந்தபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறார்' என்று செய்தி வந்திருந்தது.
மீண்டும் வேலைப் போனதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் பொழுதே, பக்கத்து வீட்டுக்காரி வந்து விசாரித்துக் கொண்டிருந்தாள். கிளம்பி செல்லலாம் என பக்கத்து வீட்டுகாரி திரும்பும் பொழுது, வாசலில் லிண்டா நின்றிருந்தாள்.
"நீ ஊர விட்டு போன அன்னிக்கு, இந்த பொண்ணு உன்னைத் தேடி வந்துச்சுப்பா" என்று சொல்லி விட்டு போய் விட்டாள்.
லிண்டா தலை குனிந்துக் கொண்டு நின்றிருந்தாள்.
"உங்கள எப்படியும் பார்த்துடனும்னு நேத்து ஹோட்டல் பின்னாடி காத்திருந்தேன். நீங்க வரலியா..உடம்பு சரியில்லன்னு நினைச்சு கவலைப்பட்டேன். ஆனா நல்லா தான் இருக்கீங்க போலிருக்கு. எப்படி நான் வந்தது தெரியும்?" என்று கேட்டான் க்ரூக்ஸ்.
"இந்த தெருவுல ஒருத்தர் கிட்ட நீங்க வந்தா சொல்ல சொன்னேன். அவர் தான் சொன்னாரு. அன்னிக்கு உங்க படிவத்த தள்ளி விட்டதுக்கு மன்னிச்சுடுங்க. அன்னைக்கே உங்ககிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்தேன். இப்பெல்லாம் நான் அங்கெல்லாம் போறதில்ல. பண்ண தப்ப நினைச்சு இப்ப வருந்துறேன்" என்றாள் லிண்டா.
"என்ன தப்பு பண்ணீங்க?"
"ஏன் திரும்பி அதையே ஞாபகப்படுத்துறீங்க? அவங்களோடு பழகுறதை விட்டுட்டேன். இனிமே அந்த தப்ப பண்றதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்."
"அதெல்லாம் தப்பு இல்லைங்க. நான் தான் கிணத்து தவளையா இருந்தேன் நினைச்சா நீங்களும் அப்படி தான் இருந்திருக்கீங்க."
லிண்டா க்ரூக்ஸ் சொன்னதை கேட்டு அதிசயித்து, "சரி, எனக்காக ஏன் காத்திருந்தீங்க?" என்று கேட்டாள்.
"அந்த பிரகாசமான கண்ண பார்க்கலாம்னு தான்" என்று புன்னகைத்தான் க்ரூக்ஸ்.
ஒரு நிமிடம் மெளனமாக இருந்து விட்டு, " நான் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். வேலைக்கு சேர்ந்துக்கிறீங்களா?" என்று கேட்டாள்.
"திரும்பி சர்வராவா?" எனக் கேட்டு, மேலே பார்த்து யோசித்தான் க்ரூக்ஸ்.
"பிடிச்சிருந்தா முதலாளியா சேர்ந்துக்கோங்க."